June 14, 2016

வாய்மூல அறிக்கைக்கு முன் வடக்கு, கிழக்கில் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் களமிறங்கியுள்ளது அரசு!

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை
நடைமுறைப்படுத்துவதற்கு நல்லிணக்கம் தொடர்பிலான செயலணியூடாக வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நல்லிணக்கம் தொடர்பிலான செயலணி நிறுவப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தத் தீர்மானத்தை படிப்படியாகக் கூட அமுல்படுத்த மைத்திரி ரணில் அரசு முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லையென தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிருப்தியடைந்துள்ள சூழலில், இந்தத் தீர்மானத்தை நிறுவுவது தொடர்பில் ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்கச் செயலணி தமது முதல்கட்டப் பணிகளை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கவுள்ளது.

இந்தச் செயற்பாட்டை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதற்கான குழுவை நல்லிணக்கச் செயலணி நேற்று நியமித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் குழுவின் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாத இறுதிக்குள் முதற்கட்டமாக வடக்கு, கிழக்கில் இவர்கள் தமது பணியை ஆரம்பிக்கவுள்ளனர் என்று நல்லிணக்க செயலணியின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியது. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடந்த ஒன்பது மாதகாலத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை, ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலும், அரசின் கடந்தகால செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் நல்லிணக்கச் செயலணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விவரங்களையும் இலங்கை அரசு உள்வாங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் அறியக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment