June 15, 2016

இளவாலையில் 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வவுனியாவாசிகளின் பிணை விண்ணப்பம் யாழ் மேல் நீதிமன்றினால் நிரகாரிப்பு!

யாழ்ப்பாணம் இளவாலையில் வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த காலி;த்தீன் மொகமட் சப்ராத் மற்றும் சுபைர் முகமட் ரியாஸ் ஆகிய இருவருமே பெருமளவு கஞ்சாவை உடைமையில் வைத்திருந்ததாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் மல்லாகம் நீதவான் விடுத்த உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்;ட பிணை மனு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இந்த வழக்கு விசாணை முடிவுக்கு வந்ததையடுத்து செவ்வாயன்று பிணை மனு விண்ணப்பத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:

தனி மனித சுதந்திரம் எவ்வறவு முக்கியமானதோ, அனையும்விட, சமூக நலன் அதனையுமவிட முக்கியமானது. சமூக நலன் சார்ந்த போதை வஸ்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும் என பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம் தெரிவிக்கின்றது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். ஏன் அவர்கள் யாழ்ப்பாணம் இளவாலைக்கு வாகனத்தில் வந்தார்கள் என்பதற்குரிய எந்தவிதமான காரணமும் பிணை மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அவர்களை ஏன் பிணையில் விட வேண்டும் என்பதற்குரிய விதிவிலக்கான காரணங்களும் மனுவில் குறிப்பிடப்படவில்லை.

தென்னிந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தும் முக்கியமான இடமாக இளவாலை காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு கேரளா கஞ்சா உட்பட போதை வஸ்துக்கள் கடத்தப்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் அண்மைக் காலமாக போதை வஸ்து மற்றும் கேரளா கஞ்சா கடத்தியமைக்காகப் பல கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வழக்கில் பெரும் தொகையான 46 கிலோ நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சமூகத் துரோகக் குற்றங்களில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, பாராளுமன்றம் போதை வஸ்து சட்டத்தை இயற்றியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் வெளிமாவட்டத்தினர் வந்து சமூக விரோத போதை வஸ்து குற்றங்கள் செய்வதை மேல் நீதிமன்றம் சகித்துக் கொள்ளமாட்டாது. அத்தகைய குற்றச் செயல்கள் இடம் பெறுவதை அனுமதிக்கவும் முடியாது. அதன் அடிப்படையில் இந்த இரண்டு சந்தேக நபர்களினதும் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

Post a Comment