June 15, 2016

நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை தெளிகரைக் கிராமத்தின் மீது விழுமா?மக்கள் கவலை!

கிளிநொச்சி நகரிலிருந்து 34 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பூநகரி – 4ஆம் கட்டையில் உள்ள தெளிகரைக் கிராம மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி அல்லலுறுகின்றனர்.


தெளிகரை கிராம மக்களின் அவல நிலையைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருந்த முன்னைய அரசாங்கத்தின் பங்காளிகள் தம்மை ஏமாற்றியதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத அரைகுறை அபிவிருத்திகள் மூலம் மக்களை ஏமாற்றி மக்களுக்கான பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பிலும் கண்டுணர முடிகின்றது.

140 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட தெளிகரைக் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பெரிதும் அவலப்படும் நிலை காணப்படுகின்றது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்தக் கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களுக்கு தலா 5½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய வீடுகள் வழங்கப்பட்டன

இந்தநிலையில் இதனைப் பயன்படுத்தி கட்டிட ஒப்பந்தகாரர்கள் சிலர் அந்த மக்களுக்கான 50 வீடுகளையும் கட்டி வழங்குவதாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

எனினும் அவர்கள் 5 ½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டங்களை 3½ இலட்சம் ரூபாய்க்குள் கட்டி வழங்கியுள்ளதாகவும் பெருமளவான பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

இவ்வாறு அமைத்துக்கொடுக்கப்பட்ட 50 வீடுகளும் ஒழுங்கான முறையில் அமைக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக மழை நீர் வீட்டிற்குள் வருவதனால் மழை காலங்களில் தாம் பெரிதும் அல்லலுறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர தற்போது இங்குள்ள வீடற்ற வறிய குடும்பங்களுக்குளுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக 1 இலட்சம் ரூபா கடனாக வழங்கிவிட்டு 3 இலட்சம் ரூபாவில் வீடு அமைக்குமாறு வற்புறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டனர்.

இதேவேளை வீடுகள் அமைப்பதற்கு காணிகள் இல்லாதோருக்கு மழை நீர் தேங்கி நிற்கும் பள்ளங்களில் காணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்குள்ள மக்களில் 39 குடும்பங்கள் யுத்தம் காரணமாக குடும்பத் தலைவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக காணப்படுவதுடன் இவர்கள் நாளொன்றுக்கு 100 ரூபா வருமானத்தைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

ஏனைய குடும்பங்கள் தொழில் எதுவுமற்ற நிலையில் தூர இடங்களுக்குச் சென்று 450 ரூபாவுக்கு கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உள்ள மக்கள் எவ்வாறு கடனாகப் பணம் பெற்று மீதிப் பணத்தை முதலிட்டு வீடமைப்பார்கள்? இங்குள்ள 17 மாணவர்கள் காலை உணவு இல்லாத நிலையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள்

மற்றும் இங்குள்ள 77 சிறுவர்கள் கால்நடையாகவே மிகவும் தொலை தூரத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள்.

இந்த சிறுவர்கள் கால்நடையாகப் பாடசாலைகளுக்குச் செல்லும் போது மன்னார் – யாழ்ப்பாணம் வீதியால் பயணிக்கும் பேரூந்துகள் மாணவர்களை ஏற்றிச்செல்வதற்கு இணங்குவதில்லை.

தெளிகரைக் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக இங்குள்ள மக்கள் தொலை தூரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது

இக்கிராம மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டி அமைப்பதாகக் கூறி கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஈ.பி.டி.பி கட்சியியைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் அரைகுறையாக காணப்படுகின்றது. இதேவேளை குடிநீர்த் தொட்டிக்கான வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்தக்கிராமத்திற்கான உள்ளக வீதிகள் எவையும் திருத்தியமைக்கப்படாத நிலையில் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது

இங்குள்ள மக்களின் பிரதான உணவாக பருப்பும் சோறுமே காணப்படுகின்றது. இது மீண்டும் இறுதி யுத்தத்தின்போதான முள்ளிவாய்க்கால் மண்ணை நினைவூட்டுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இக்கிராமத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் பலருக்கு வறியவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி உதவித்திட்டங்கள் உட்பட அரசினது உதவித்திட்டங்கள் எவையுமே இதுவரை வழங்கப்படவில்லை.

தெளிகரைக் கிராமத்தின் பின்பக்கமாகவுள்ள காட்டுப் பக்கத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கெனக் கூறி பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரிய கட்டிடம் பயன்படுத்தப்படாத நிலையில் பற்றைகள் சூழ்ந்து காணப்படுகின்றது.

தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் தமது கிராமத்து மக்களின் வறுமை நிலையைக் கருத்திற்கொண்டு இக்கிராமத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பல கோடி ரூபா பெறுமதியான கட்டிடத்தில் வருமானம் ஈட்டக்கூடிய கைத்தொழிற்சாலை ஒன்றை அமைத்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment