October 25, 2014

இது நம் தேசம் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்! முடக்க அரசு முனைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இது நம் தேசம் பத்திரிகையினை முடக்க இலங்கை அரசு தனது இராணுவ வளங்கள் மூலம் முனைப்பு காட்டிவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவ்வகையில் இது நம் தேசம் பத்திரிகையின் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இராணுவத்தினரால் நேரடியாகவும் புலனாய்வு கட்டமைப்புகளின் ஊடாகவும் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதாகவும் பத்திரிகை நிர்வாகம் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது.
இறுதியாக இம்மாத இதழ்களை விநியோகம் செய்யச் சென்றிருந்த விநியோகஸ்தர் ஒருவர் கடந்த காரம் கிளிநொச்சியின் உருத்திரபுரம் படைமுகாமிற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட அவரை பின்தொடர்ந்து வந்த படையினர் தாக்கி அருகாகவுள்ள குளமொன்றினுள் தூக்கி வீசியதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் அவர் விநியோகத்திற்கென எடுத்துச்சென்ற பத்திரிகை பிரதிகளையும் பறிமுதல் செய்து குளத்தினுள் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விநியோகஸ்தர் பல தடவைகள் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல தடவைகள் தமது பத்திரிகைகளினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிற்கு சென்றிருந்த படையினர் அங்கு அப்பிரதிகளை விற்பனை செய்யவேண்டாமென அச்சுறுத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஏனைய புதினப்பத்திரிகைகளினை போன்றே இதனையும் விற்பனை செய்வதாக விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அச்சுறுத்தியுமுள்ளனர்.
இதனிடையே தமது பத்திரிகைகள் அச்சிடப்படும் அச்சகங்களிற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தமது அனுமதியின்றி இனிவருங்காலங்களில் இதழ்களை அச்சிடக்கூடாதெனவும் பணிப்புரை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனால் தொடர்ந்தும் பத்திரிகையினை வெளிக்கொணர்வதென்பது கேள்விக்குறியாகியிருப்பதாக ஆசிரிய பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த அரசியல் ஆய்வாளர் அ.யோதிலிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் இது நம்தேசம் கனதியான அரசியல் களத்தை விமர்;சிக்கும் இதழாக வெளிவருகின்றது. பல சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் அதில் பத்திகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment