November 28, 2014

நோர்வேயில் நடைபெற்ற மாவீராநாள் எழுச்சி நிகழ்வு

27.11.2014 ஒஸ்லோவில் அமைந்துள்ள கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மதியம் 12;:45 மணிக்கு மிக சிறப்பாக
ஆரம்பமாகியது மாவீரர்நாள்,  இந்நிகழ்வில் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடீ ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழீழ மாவீரர்நாள் அறிக்கையும் தொடர்ந்து உலகத்தில் எந்த மூலையில் வாழந்தாலும் தமிழீழத்தின் விடுதலைக்காக உறுதியோடு உழைப்போமென  உறுதிமொமி மக்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி ஒலி மூன்று தடவைகள் ஒலித்ததை தொடர்ந்து வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்காகவும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டது.


இதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரக்கடவுள்களை போற்றி வணங்கும் துயிலும் இல்லப்பாடல் வெண்திரையில் தாயக நினைவுகளை மீட்டியபோது மக்களின் விழிகளில் நீர் முட்டியது. எப்படித்தான் இதயத்தை இறுக்கிப்பிடுத்தாலும் கசியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற அளவிற்கு உணர்வுகள் மண்ணின் வீரர்களை தேடியது.


மாவீரக்கடவுள்களை மக்கள் மனசார பூசிக்கும் பாடலை தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர் இவற்றோடு இளையவர்களின் கவிவணக்கமும் நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவின் மாவீரர்கானமும் மண்டபத்தில் மேலும் உணர்வுகளை உரசியது.
இவற்றை தொடர்ந்து சேர்மனியில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாஸ்கரமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்றெ;றது சிறப்புரையில் அவர் இளையோர்களின்  மாவீரர்நாளுக்கான பங்களிப்பை பார்த்து 2008 ஆண்டு மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் இளையோர்கள் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் மெய்பித்து நிற்பதை தான் கண்ணூடாக காண்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சிறப்புரையை தொடர்ந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் அரவிந்தன் நாகலிங்கம் அவர்களின் உரை இடம்பெற்றது.அவர் தனது உரையில் குறிப்பிடும்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைப்பதோடு தாயகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதர்க்காகவும் தன்னாலான பணிகளை  செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடந்து தமிழ் இளையோர் அமைப்பினரின் அணையாத தீபங்கள் என்ற நிகழ்ச்சி போராட்ட வரலாற்றை சிறுவர்களுக்கு புரியுமளவிற்கு இசையோடு கலந்து சுவையாக தந்தார்கள்


இவற்றோடு இளையோர் அமைப்பினரின் தமிழ் உரையும் நோர்வேஜிய மொழியில் உரையும் இடம்பெற்றது அவ்வுரைகளில் அவர்கள குறிப்பிடுகின்ற போது தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை தாங்கிச்செல்கின்ற சக்தியை தலைவர் அவர்கள் எம்மிடம் கொடுத்திருக்கின்றார் ஆகவே தமிழர் என்ற ஒற்றை சொல்லில் இளையவர்களாகிய நாம் ஒன்றாகி விடுதலைக்காக உழைக்க கரம்கோர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அன்னைபூபதி பாடசாலைகளால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.
மாவீராநாள் நிகழ்ச்சிகளின் மகுடமாக விழ விழ எழுவோம் எனும் எழுச்சி நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் 100 இற்க்;கு மேற்ப்பட்ட கலைஞர்கள் பங்குகொண்டதோடு கனடாவில் இருந்து சிறப்பு கலைஞனாக வருகை தந்த பல்குரலோன் அமல் அவர்களின் கலைவெளிப்பாடும் காத்திரமானதாக அமைந்தது. அத்தோடு இளையவர்களின் நடனத்திறனும் ஆசிரியைகளின் நடன அமைப்பும் மக்களை கடைசி வரை அசையாமல் கட்டிப்போட்டிருந்தது.

விழ விழ எழுவோம் எழுச்சி நிகழ்வை தொடர்ந்து தேசியக்கொடீ இறக்கப்பட்டு இறுதியாக எமது இலட்சியத்தில் உறுதிகொள்ள வைக்கும் பாடலான நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வரிகளோடு நிகழ்வு நிறைவு கண்டது.
காத்து வீழ்ந்தவர் காலடி போற்றும் நாளினை சிறப்பாக நடாத்த உதவிய அனைத்து மக்களையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கரம்பற்றிக்கொள்கின்ற அதேவேளை விடுதலையை வென்றெடுக்க சத்தியம் செய்துகொள்கின்றது.

No comments:

Post a Comment