September 14, 2014

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் - 10 வது நாள்!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி நடைபெறும் ஈருருளிப்பயணம் 10 வது நாளாக நேற்றைய தினம் கிரேன்சென் நகரத்தில் இருந்து 87 KM தூரத்தை தாண்டி Moudon நகரத்தை
வந்தடைந்தது . இப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் தேசியக் கொடியை தாங்கிய வண்ணம் மிகவும் உறுதியோடு ஐநா நோக்கி பயணிக்கின்றனர் .
 எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில்  ஈருருளிப்பயணம் இணைந்துகொள்ள இருக்கின்றது . அதை தொடர்ந்து அவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஐநா மனிதவுரிமை ஆணையகத்தின் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்க இருக்கின்றனர் . ஐந்து அம்ச கோரிக்கைகளும் பின்வருமாறு அமைகின்றது :
 1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
 2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
 3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்துஇ நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியம் , பிருஷ்செல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக இருந்து ஐரோப்பிய நாடுகளை கடந்து ஐநா சபையை நோக்கி நீதிக்கான ஈருருளிப்பயணம் சென்றுகொண்டிருக்கின்றது .



No comments:

Post a Comment