July 27, 2016

மகாவலி திட்டத்தின் மூலம் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறலாம்! - விக்னேஸ்வரன் அச்சம் !

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் வடமாகாணத்திற்குள் குடியேற்றப்படலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
மகாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜெய்கா நிறுவனம், மாவலி அதிகார சபை, நீர் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
இதன்போது மகாவலி அதிகார சபை கடந்த காலங்களில் வெளி மாவட்ட மக்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றியமை தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில் இரு மாகாணங்களுக்கு இடையிலான நீர் பாசன திட்டமாக இது காணப்படுவதனால் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என வடமாகாண எதிர்கட்சி தலைவர் எஸ். தவராசா வலியுறுத்தினார்.

அத்துடன் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்களை அடிப்படையாக கொண்டு அமைந்தமையினால் மகாவலி எல் வலய திட்டம் குறித்து வடமாகாண சபை கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மகாவலி எல் வலயத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நீர் கெண்டு செல்லும் பாதையூடாக காணப்படும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுமா என வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment