August 26, 2014

பூநகரி மக்களுக்கு உதவி வழங்குவதற்கு படையினர் தடை!

சிறிலங்காவில் மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சியெடுத்துக்கொண்டிருக்கின்றது.

தாயகத்தில் நிலைகொண்டிருக்கின்ற படையினரின் மூலமாக இந்த நிறுவனங்களை சிறிலங்கா அரசு கட்டுப்படுத்துகின்றது.
யுத்தப் பாதிப்புக்கு உள்ளான அப்பாவி மக்களுக்கு தாங்களும் உரிய உதவிகளை வழங்காமல் இருக்கின்ற சிறிலங்கா அரசு தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் தடை போட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.
இதன் ஒரு அங்கமாக பூநகரியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்குவதற்குச் சென்ற அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகள் படையினரால் வழிமறிக்கப்பட்டு சோதனைகளின் பின்னர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூநகரியில் கிராஞ்சி, வலைப்பாடு உள்ள பல இடங்களில் மூளைத்திறன் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று இரு மாதங்களுக்கு ஒரு தடவை உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றது.
பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர்களின் தரவுகளுக்கு அமைவாகவே இந்தப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்றைய தினமும் கிளிநொச்சியிலுள்ள தங்கள் அலுவலகத்திலிருந்து மேற்படி பயனாளிகளுக்கு பொருட்களை வழங்குவதற்காக அவர்களின் இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது கிராஞ்சியிலுள்ள படைமுகாமில் வைத்து அவர்களின் வாகனத்தை படையினர் வழிமறித்தனர்.
தாங்கள் தொண்டு அமைப்பொன்றின் பிரதிநிதிகள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக கூறியபோதும் அவர்களைச் செல்லவிடாது தடுத்த படையினர் அவர்களின் பொருட்களைச் சோதனைக்குட்படுத்தினர்.
சிவில் நிர்வாக காரியாலயத்தின் அனுமதியின்றி பொருட்களை வழங்க முடியாது என்று தெரிவித்தனர். அத்துடன் மேற்படி நிறுவனப் பணியாளர்கள் தனித்தனியாகப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டனர்.
இரண்டு மணித்தியாலங்கள் வரை அவர்களைத் தடுத்து வைத்திருந்த படையினர் அதன் பின்னர் திருப்பியனுப்பினர். இதனால் பயனாளிகளுக்கு பொருட்களை வழங்க முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
படையினரின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக வன்னி மக்களின் பிரதிநிதிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அரசாங்கம் அந்தப் பணியிலிருந்து விலகியிருக்கின்றது.
இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களையும் சேவை செய்ய விடாமல் தடுத்திருக்கின்ற அரசாங்கத்தினதும் படையினரதும் இந்தச் செயற்பாடுகள் மக்களை மேலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் மேற்படி மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment