August 13, 2014

தமிழ்நாடு அடையாறு வீதியில் வீசப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் 7 பேரது கடவுச்சீட்டுக்கள்!

தமிழகம், அடையாறு வீதியில் வீசப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் 7 பேரது கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.


அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் ரோட்டில் சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியர் முகமது என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடு வீதியில் ஒரு பை கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் கடவுச்சீட்டுகள் இருந்தன.

அந்த பையை அடையாறு பொலிஸில் அவர் ஒப்படைத்தார். அதில் ஈழத் தமிழர்களின் 7 கடவுச்சீட்டுக்கள் இருந்தன.

அவை ரவிச்சந்திரன், வடிவாம்பிகை, சாய் ஆர்.பி., கவுதமன், விசாகம், மற்றொரு வடிவாம்பிகை, ரவிச்சந்திரன் சண்முக ரத்தினசாமி என்ற பெயர்களில் இருந்தன.

இந்த கடவுச்சீட்டுக்களை யாராவது மொத்தமாக வைத்திருந்து தொலைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அடையாறு பொலிஸ் துணை கமிஷனர் கண்ணன் தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஈழத் தமிழர்களை போலி கடவுச்சீட்டில் அனுப்பும் கும்பல் பிடிப்பட்டது.

யுத்தத்தின் பின் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர்.

முறைப்படி கடவுச்சீட்டு எடுத்து சென்றால் அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று நிம்மதி ஆக வாழலாம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்களின் கடவுச்சீட்டுக்களா? இவர்கள் சென்னையில் தங்கியிருக்கிறார்களா?

இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அடையாறு பகுதியில் யாராவது தங்க வைத்திருக்கிறார்களா? என பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் இது அல்லது போலி கடவுச்சீட்டுக்களா? என்ற பல கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment