June 22, 2015

யாழ்ப்பாணம் வந்து வியாபாரம் செய்யும் இந்திய வியாபாரிகளை நாடு கடத்தமாறு உத்தரவு!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரம் மற்றும் போதைப்பாக்கு விற்ற இரண்டு இந்திய வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தும், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 1 வருட கடூழியச்
சிறைத்தண்டனை விதித்தும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா திங்கட்கிழமை (22) தீர்ப்பளித்தார்.
அத்துடன், இருவரையும் யாழ். சிறைச்சாலையூடாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து நாடு கடத்துமாறு நீதவான் பணிப்புரை விடுத்தார்.
தமிழ்நாடு கிருஸ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தன் தினேஸ்குமார் (வயது 25), தமிழகம், திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் செந்தில்குமார் (வயது 32) ஆகிய இரண்டு வியாபாரிகளை கடந்த 18ஆம் திகதி புலோலி தெற்குப் பகுதியில் வைத்து பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு தொகை சல்வார்கள் மற்றும் 239 நியாம் பாக்குகள் என்பன கைப்பற்றப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும் இன்று (திங்கட்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இவ்வாறு உத்தரவிட்டதுடன் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சல்வார்களை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment