June 29, 2015

தேர்தலைக் கண்காணிக்க அமெரிக்காவுக்கு அனுமதியில்லை!

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ள போதிலும்  எக்காரணம் கொண்டும் அமெரிக்கா கண்காணிப்புப் பணியில் ஈடுபடாதென தேர்தல்கள் திணைக்களமும் பெப்ரல் அமைப்பும் உறுதியாக தெரிவித்துள்ளன.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் தேசிய ஜனநாயக நிறுவனம் (என். டி. ஐ) மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் குறித்து தனிப்பட்ட முறையில் ஆர்வமும் அக்கறையும் காட்டியிருந்த போதும் கண்காணிப்புப் பணிகளில் மேற்படி அமெரிக்க நிறுவனங்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்காவிலிருந்து கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டி ருப்பதாக குறிப்பிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்றும் பணிப்பாளர் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பு 25 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் நியமிக்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களே இம்முறையும் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளார்கள் எனினும் இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து தெளிவான புரிதலைக் கொண்டுள்ள ஆசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே தாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பார்வையாளர்களாக அழைத்துள்ளதாக பெப்ரல் கூறுகிறது.

No comments:

Post a Comment