June 23, 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 – 2016!


  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 – 2016

  •  மேஷ ராசி
    இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தக் காரியத்தையும் பிரதிபலன் கருதி செய்ய மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு.
    குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்னைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம், நஷ்டமானாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார்.
    வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்பு மேம்படும். உறவினர் கள் வகையில் இருந்து வந்த பிரச்னை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர், புதிய சொத்துகள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்கநிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார்.
    நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக் கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலைப் பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே, மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உடனிருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.
    வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது. வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம்.
    கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.


  •  ரிஷப ராசி
    ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவர்கள். உழைக்காமலேயே கூடுதலான வருமானத்தைப் பெறுவீர்கள். பிரச்னைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். பணவரவு வந்தபடி இருக்கும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.
    தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும்.
    கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். உத்யோகஸ்தர்கள் அதிலும் அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர்.
    எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களின் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த குருபெயர்ச்சி ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது.
    செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சின்னஞ்சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே… இனி அது இருக்காது. தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத் துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை.
    நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டியது வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், வேலைச்சுமையும் வரலாம். எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கு காண்பர். தாராள செலவில் தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.


  •  மிதுன ராசி
    மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே, நீங்கள் எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். எந்த காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்வீர்கள்.மிகுந்த ருசியுடன் கூடிய உணவை உண்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வை ஒரேமாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள். குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் தைரிய ராசியில் இடம் பெற்றுள்ளார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும்.
    பூர்வீகச் சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக அடிக்கடி சோர்வு உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவுக்கும் வாய்ப்புண்டு. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் விலகி ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.
    எந்தப் பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்துப் பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வெகுநாட்களாக மழலை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கிறீர்கள்.
    அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷனாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும்.
    அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
    கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலையை அடைவர். மாணவர்களின் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம்
    செலவழிப்பர்.


  •  கடகராசி
    கடகராசி அன்பர்களே, நீங்கள் பக்தி சிரத்தையுடன் வாழ்வீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தன்னைப்போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். பசி பொறுக்க மாட்டீர்கள். நன்கு உழைப்பீர்கள். மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். கடல்கடந்து சென்று வேலை செய்வீர்கள். குருவின் இப்போதைய பெயர்ச்சியால் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்தது.
    இனி அது மாறும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலை வாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன்-மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும்.
    தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலை வாய்ப்பிலிருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
    தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன்பு குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழிலில் வளர்ச்சிபெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறை செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.
    வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்கவைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். சக பணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது.
    சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சகமாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.


  •  சிம்ம ராசி
    எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெறவேண்டுமென்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும்.
    எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்யத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். திருமண வயதி னருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். எதைப் பேசினாலும் அவமானம், எதைச் செய்தாலும் தலைகுனிவு என்று கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த நிலை மாறும்.
    உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்லத் தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எதையுமே சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலை பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம்.
    சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரைஅணுகு வது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கக் கூடும். வேலையில் இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
    தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் தங்களது திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வும், பாராட்டும் கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
    ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு தக்க உதவிகள் அவ்வப்போது வந்து சேரும். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டியது வரும்.
    பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
    சிறப்பு பரிகாரம்: வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.


  •  கன்னி ராசி 
    எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே! குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டுமென்று விருப்பம் கொண்டவர்கள். விரய ஸ்தானத்தில் வரப்போகும் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து விடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.
    வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதமான அணுகுமுறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். வழக்கு விவகாரங் களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிகட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத் திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.
    தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளை சந்திப்பீர்கள். கணவன்-மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்லபெயர் கிடைக்கும். பணிமாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பரச் செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.
    புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச் செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்யோகஸ்தர்கள், உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார்கள். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும்.
    பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தியும், விற்பனையும் காண்பார்கள். பணப் பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும்.
    வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் மற்றும் சமூகப் பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.
    பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வணங்கி வருவது பாவங்களை போக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.


  •  துலா ராசி
    எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே! எதிலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். கட்டுப்பாடு உடையவர்கள், நீங்கள். மற்றவர்கள் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டாதவர்கள். துன்பங்களையும் தூற்றுதலையும் கண்டு அஞ்சாதவர்கள். இனிமையாகப் பேசி தன் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். கடந்த காலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும்.
    தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகளின் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும்.
    ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளை கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சங்கங்களில் சிலருக்கு பொறுப்புகள் கிடைக்கும். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கை கொள்முதல் செய்வீர்கள். வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர்.
    அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களை பெறுவீர்கள். பெண்கள் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதலை எளிதாகப் புரிந்துகொண்டு செயல்படுவர். பணியின் இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான வாழ்வுமுறை தொடர்ந்திடும்.
    புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்லவரன் அமையும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சகமாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும்.
    அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் பெறுவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளித்தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள்.
    எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதர சகோதரிகளின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார், தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கணவன்-மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது.


  •  விருச்சிக ராசி
    எந்தக் காரியத்தையும் தைரியத்தோடும் வீரத்தோடும் செய்து சாதனையாளராகத் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே! மூளை பலம்தான் உங்களுக்கு மூலதனம். பணத்தாலும் பொருளாலும் உங்கள் மனதை யாரும் மாற்றிவிட முடியாது. அன்பால் மட்டுமே கட்டிப்போட முடியும். அண்டை அயலாரிடம் மிகவும் நெருங்கிப் பழகி காரியங்களைச் சாதிப்பீர்கள். விருச்சிக ராசியில் பிறந்த சிலர் அரசியலில் சிறந்து விளங்குவார்கள். குரு பெயர்ச்சி காலத்தின்போது, ஜென்ம சனியும் இருப்பதால் சமயத்தில் பேச்சுதான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத் தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கௌரவமான வேலை கிடைக்கும். உயரமான கட்டிடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிஃப்டில் ஏறும்போது கவனம் தேவை. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
    வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத் தரும். வாகனப் போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தளராத முயற்சியால் இலக்குகளை எட்டுவீர்கள். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குபிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும்.
    லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. இருந்தபோதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தொழிலைத் தொடங்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
    அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி செய்யக் கூடும். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருளை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலை கொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழிச் சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதை பெருமளவில் குறைப்பது நல்லது.
    படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது. அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்தான், அரசுத் தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நல்லநிலை பெறலாம். விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
    பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.


  •  தனுசு ராசி
    மனதிலுள்ள குறைகளை எப்போதும் வெளியில் சொல்லாமல் அனைத்தையும் நிறைகளாகப் பார்க்கும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் தான் பிறந்த குடும்பத்தின்மீது அதிக அக்கறை செலுத்துபவர்கள். எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள். ஆசார, அனுஷ்டானங்களை விரும்புகிறவர்கள். தெளிவான புத்தி உள்ளவர்கள். கடமைகளை உடனடியாகச் செய்கின்றவர்கள். களங்கமில்லாத மனதுக்குச் சொந்தக்காரர்கள். இந்த குரு பெயர்ச்சியால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.
    பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பிலும் கௌரவமான நிலையை அடைவர். பூர்வீகச் சொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். ஜெனன காலஜாதக சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்கப் பாடுபடுவர். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுத்தனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள்.
    உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் செய்யவும். தூங்கப்போகும்முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.
    நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர்கள் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்துச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
    வியாபார சங்கங்களில் சிலருக்கு கௌரவமான பதவி வரும். உத்யோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர்.
    உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும். மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.
    பரிகாரம்: ராகு-கேதுகளுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.


  •  மகர ராசி
    எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே! நீங்கள் உழைப்புக்கு அஞ்ச மாட்டீர்கள். நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். எதிரணியில் இருப்பவர்களின் குறைகளை கண்டறிந்து சுட்டிக் காட்டுவீர்கள். கடுமையான உழைப்பிற்கு சொந்தக்காரர்கள். இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். இந்தப் பெயர்ச்சியின் மூலம் பணவரவு குறையும் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதேநேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடிவரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலைபற்றி கவலைப்பட வேண்டி வராது.
    தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்து கொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்து கொள்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர்.
    நண்பர்களிடம் எதிர்பார்க்கின்ற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத் தரும். முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால், நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடிவரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரைப்பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்கக் கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம்.
    வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். எந்தக் காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதைச் செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும்.
    வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாரத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்லநிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.
    நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்கவைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு கிடங்குகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும். மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால்தான் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறலாம். நினைத்த துறையில் கல்லூரி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதைப் பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.


  •  கும்ப ராசி
    மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்ப ராசியினரே! நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புது தொழில் நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். இந்தப் பெயர்ச்சியின் நேரத்தில் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.
    வாரிசுகள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துகளில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன்-மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். சகல சௌபாக்ய வசதிகளும் பெறுவீர்கள்.
    திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்யத்தில் நன்மை, தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமுக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா! இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நன்மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். செலவுகளைப்பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.
    இளையசகோதர சகோதரிகளின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்கப் போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தான பாக்கியம் கிட்டும் காலமிது. புனித தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துகள் உங்களை வந்தடையும் நேரமிது.
    பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டியது வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாகச் செய்யுங்கள். தாய், தந்தையரை வணங்கி எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் வெற்றியே. தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும்.
    லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள். கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருட்கள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர். மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது.


  •  மீன ராசி
    கடுஞ்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவணைக்கும் மீன ராசி அன்பர்களே! நீங்கள் இரக்கம் அதிகமுள்ளவர்கள். தாய்- தந்தையரின் மேல் அதிக பற்றுள்ளவர்கள். திருமணம் செய்துகொடுக்கும் இடத்திலும் பெருமையோடு வாழ்வார்கள். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். குருவின் ஆறாம் இட அமர்வு (சஷ்டாஷ்டக குரு) வாழ்வில் சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள்.
    தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும்போது அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர்.
    வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு. இளைய சகோதர, சகோதரிகளோடு சின்னச் சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை என்று ஒரு குழப்பமான சமயத்தில் குரு பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்னச் சின்ன குழப்பங்கள் அனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விசேஷங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள்.
    படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
    வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய், தந்தை ஆரோக்யத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவச் செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டியது வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத் தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிறதொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான இயந்திரம் வாங்குவீர்கள்.
    புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம். வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடமிருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM   தமிழ்நாடு, இந்தியா

No comments:

Post a Comment