April 6, 2015

ரீவி பார்த்துப் பார்த்து பிள்ளைகளை நாசம் செய்கின்றார்கள் பெற்றோர் - க.தேவராஜா!

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் பெரும்  தடையாகவுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ஒருநாளில்,   அரைவாசிக்கு மேற்பட்ட பொழுதை தொலைக்காட்சியுடன் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அக்கறை
அற்றவர்களாக தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கி விடுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார்.

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் 13ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கலும் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
பெரும்பாலான பிள்ளைகள் கற்பதற்கான சூழல் வீடுகளில் இல்லாத காரணத்தினால், கல்வியில் பின்னடைவை எதிர்நோக்குகின்றார்கள். இன்றைய எமது கல்வித்தர வீழ்ச்சிக்கு தொலைக்காட்சி பெட்டிகளும்  தொடர் நாடகங்களும் முக்கியமான காரணமாக அமைகின்றன.

நூலகத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். வாசிப்பதால் எம்முடைய அறிவு மேலும் வளர்ச்சியடைகின்றது. இணுவில் பொதுநூலகம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நவீன நூலகம் ஆகும். இந்த பிரதேசத்தை சேர்ந்த அனைவரும் நூலகத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

பிரதேச மாணவர்களின் அறிவை மேம்படுத்தவதற்காக கனிணி ஆய்வுகூடம், படிப்பகம் போன்ற வசதிகளை நூலகம் கொண்டுள்ளது. இந்த வசதிகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடுகளில் கற்றலுக்கான சூழ்நிலை இல்லாத மாணவர்கள் தங்கள் கல்வியறிவை வளர்த்துக் கொள்வதற்க்காக நூலகங்களை நாடி கற்றலுக்கான சூழலில் தமது கல்வியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இணுவில் பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நவீன வசதிகளுடன் கூடியதாக சர்வதேச தரத்துக்கு இணையாக சிறுவர் முள்பள்ளி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணுவில் பிரதேசத்து இளைஞர்களது முயற்சியால் இணுவில் பொது நூலகமானது பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி வருகின்றது.

கல்விச் சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் நூலகங்களை நாடி சுயகற்றலின் ஊடாக தமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களிடத்தில் இளம் பராயத்தில் ஏற்படுகின்ற வாசிப்பு பழக்கமின்மையே மாணவர்களை கல்விச் சூழலில் இருந்து விடுபடச்செய்து சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடத் தூண்டுகின்றது. வாசிப்பு பழக்கமுள்ளவர்களிடம் சுயகற்றலின் ஊடாக நல்ல விடயங்களை கற்று நல்ல வழியில் தங்களது வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ள முடிகின்றது என்றார்.

No comments:

Post a Comment