March 9, 2015

60 நாட்கள் கடந்தும் எமது கோரிக்கையை இந்த அரசாங்கம் உள்வாங்கவில்லை: அரியநேத்திரன்!

100 நாள் வேலைத்திட்டத்தில் அறுபது நாட்கள் கடந்துள்ள நிலையிலும் கூட்டமைப்பின் எந்த கோரிக்கையினையும் இந்த அரசாங்கம் செயற்படுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சிறையில் உள்ள ஒரு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்காத நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று மாலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர், 40வட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் மைத்திரிபாலவுக்கு பாசத்துக்காக வாக்களிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மீது இருந்த வெறுப்புக்காரணமாக மைத்திரிபாலவுக்கு வாக்களித்தோம். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் பலமாற்றம் வரும் என்று கூறினார்கள். அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் அறுபது நாட்கள் சென்றுவிட்டது.மீதி இருப்பது நாற்பது நாட்களாகும்.
இந்த அறுபது நாட்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்றால் எதுவும் செய்யவில்லையென்பதே உண்மையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று வடமாகாண ஆளுனர் மாற்றப்பட்டுள்ளார், வடக்கு முதலமைச்சரின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதேபோன்று கிழக்கு மாகாண ஆளுனர் மாற்றப்பட்டுள்ளார்.
வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த அறுபது நாட்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்துள்ளது. இதுதான் அறுபது நாட்களில் நாங்கள் கண்டுள்ள விடயம். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூட்டமைப்பு பல கோரிக்கைகளை முன்வைத்தது. எந்த விடயமும் நடக்கவில்லை. கடந்த காலத்தில் போர் காரணமாக இன்றும் சிறைச்சாலைகளில் உள்ள 500 சிறைக்கைதிகளில் ஒருவர் கூட இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை. இதுவொரு வேதனையான விடயமாகும். இந்த அறுபது நாட்களில் வடக்கு கிழக்கினை சேர்ந்த பல இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிவந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதுகூட கடந்த காலத்தில் மகிந்த ஆட்சியில் எந்தவகையில் தமிழ் மக்கள் அடைத்துவைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்களோ அதுபோன்றவகையில் இன்று சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இவ்வாறான நிலையில்தான் நாங்கள் இருந்துகொண்டுள்ளோம். புலம்பெயர்ந்துவாழும் மக்கள் கூட சுதந்திரமான முறையில் வந்துசெல்லமுடியாத சூழ்நிலையிருக்கின்றது.
பகீரதி பிரான்சில் இருந்துவந்து மீண்டும் பிரான்ஸ் செல்லமுற்பட்டபோது புலி என்று கைதுசெய்யப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்துள்ள மக்கள் தற்போது இந்த நாட்டுக்குவந்து உறவினர்களை சுதந்திரமாக பார்த்துவிட்டு செல்லலாம் என நினைக்கின்றார்கள்.ஆனால் அதுகூட முடியாத நிலையே இருந்து வருகின்றது. ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதாக இந்த அரசாங்கம் கூறிவருகின்றது.
ஆனால் விசாரணை நடத்தப்பட்டு எவரும் தண்டிக்கப்பட்டதான தகவல்கள் இல்லை.கொழும்பு துறைமுகத்தில் அமைக்கப்பட்டுவரும் துறைமுக நகர வேலையை நிறுத்திவிட்டோம் என்று இந்த அரசு சொன்னாலும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. நாங்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்த ஜனாதிபதி மைத்திரிபாசசிறிசேன வெற்றிபெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வுத்திட்டத்தினையோ, தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்களையோ செய்வதற்கு இன்னும் தயாரில்லை.
அவ்வாறுதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளார். இவர்கள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்கள் வெல்லவேண்டும் என்ற ரீதியிலேயே செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கோரிக்கைகளை விடுத்தபோதிலும் அவை தொடர்பில் கவனம் செலுத்தாமல் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தி நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டுமாகவிருந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டும். நாங்கள் பல விரதங்களை அனுஸ்டித்துவருகின்றோம். தமிழ் இனத்தின் பண்பாடுகளை கலாசாரங்களை சுமந்ததாக இந்த விரதங்கள் இருக்கின்றன.
பண்பாடுகளை கட்டிக்காக்கும் அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. நாங்கள் கௌரி காப்பினைக்கட்டிவிட்டு வெற்றிலைக்கு வாக்களிப்பதனால் அந்த விரதத்தின் புனித தன்மையினை நாங்கள் இழந்துவிடுகின்றோம். கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தமிழர்கள் இருக்கின்றார்கள்,இரண்டாவது இடத்தில் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்,மூன்றாவது இடத்தில் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தொகையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர்.இரண்டாம் நிலையிலேயே எமது தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையுள்ளது. தமிழ் மாணவர்கள் ஏன்குறைந்துள்ளார்கள்.தமிழ் மாணவர்கள் பாடசாலை செல்வதில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
எங்கள் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.இது தொடர்பில் எமது சமூகம் சிந்திக்கவேண்டும். இனத்தினை பாதுகாக்கவேண்டும்,மண்ணைப்பாதுகாக்கவேண்டும் என்றால் நாங்கள் எங்கள் இனத்தினைப்பெருக்கவேண்டும்.மூன்று பிள்ளைகள் பெறுவதை விடுத்து ஐந்து பிள்ளைப்பெறவேண்டும்.இதில் வெட்க்கப்படுவதற்கு ஏதும் இல்லை.
அவ்வாறு நாங்கள் செய்யாவிட்டால் 2025ஆம் ஆண்டு 75வீதமாக இருக்கின்ற நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 65வீதமாக மாற்றமடைவோம்.அரசியல் என்பது அபிவிருத்திக்காக மட்டும் செய்வது அல்ல.எமது மக்களை விழிப்பூட்டவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பு இங்கு இருந்திருக்காவிட்டால் கெவிழியாமடுவில் புத்தவிகாரை வந்திருக்கும் தாந்தாமலையில் புத்த விகாரை அமைக்கப்பட்டிருக்கும்.
இதனைத்தடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.வேறு யாரும் இதனைச்செய்யவில்லை. நாங்கள் மாணவர்கள் மீது அக்கறை இருப்பதுபோன்று மண்ணில் அக்கறை இருக்கவேண்டும்,இனத்தில் அக்கறை இருக்கவேண்டும். கிழக்கு மாகாணசபையில் 6450 வாக்குகளை அளித்திருந்தால் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் கையேந்த வேண்டிய நிலையேற்பட்டிருக்காது.
எழு ஆசனங்கள் கொண்ட முஸ்லிம் காங்கிரசிடம் 11 ஆசனங்களைக்கொண்ட நீங்கள் ஏன் போனீர்கள் என்று கேட்கின்றனர்.கிழக்கு மாகாணசபையில் இருக்கும் 37 உறுப்பினர்களில் 15உறுப்பினர்கள் முஸ்லிம்கள்.13 உறுப்பினர்கள் தமிழர்கள்,09 உறுப்பினர்கள் சிங்களவர்கள்.கட்சி ரீதியாக நாங்கள் 11பேர் இருந்தாலும் இனரீதியாக அவர்கள் 15பேர் உள்ளனர்.
இந்த அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த அரசியலில் மாற்றம்வரவேண்டும்.இந்தமாற்றம் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிப்பதன்ஊடாகவே வரும் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment