February 25, 2015

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் விடுவிக்கப்பட வேண்டும்! பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்!

இராணுவமோ, கடற்படையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசு மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்திருந்தாலும் அவற்றை
விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு இராணுவத்தினருக்குத் தேவையற்ற காணிகளை மக்களுக்கு விடுவிப்பதாக கூறியுள்ளார். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மீள்குடியேற்றம் , காணிவிடுவிப்பு தொடர்பில் எமது நிலைப்பாடு குறித்து மீள்குடியேற்ற அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
அரச காணிகளை விட இராணுவமோ , கடற்படையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசு மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்திருந்தாலும் அவற்றை விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதனைவிடுத்து இராணுவத்தேவைக்கு என சுவீகரிப்பது , விடுவித்தால் மட்டுமே மீள்குடியேற்றம் என்ற கூற்றுக்கே இடமில்லை. எனவே இதனைக் கவனத்தில் கொண்டு மீள்குடியேற்ற அமைச்சரும் பிரதமரும் செயற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவெனில் முழுமையான மீள்குடியேற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். எனவே அரசு குறித்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் இந்த அரசிடம் கோருவது என்னவெனில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்ற உறுதிமொழி அரசினால் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இதனை ஒரு தீர்மானமாகவும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒரு முடிவை அரசு எடுத்துக் கொண்டால் மாத்திரமே மீள்குடியேற்றம் முழுமையாக சாத்தியப்படும். இன்று மிகவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனவே அரசு விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment