June 1, 2016

இலங்கைக்கான சீனத் தூதுவர், நோர்வே இராஜாங்கச் செயலருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.


கொழும்பிலுள்ள சீனத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு கடந்த மாதம் 25ஆம் நாள் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாகச் செயற்பட்டு வந்துள்ள சீன அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புகளை இதுவரை காலமும் தவிர்த்தே வந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நோர்வே இராஜாங்கச் செயலாளரும் சம்பந்தனுடன் பேச்சு

இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹட்ரெம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இருதரப்பு பேச்சுக்களை நடத்துவதற்காகவும், சிறிலங்கா- நோர்வே இடையே வர்த்தக ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்காகவும், ரோர் ஹட்ரெம் நேற்றுக்காலை இலங்கை வந்தார்.

அவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதுடன், இலங்கை அரசாங்கத் தரப்பினரையும் சந்தித்தார்.

இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள ரோர் ஹட்ரெம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியில், ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஊடாக, நோர்வேயின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

No comments:

Post a Comment