August 4, 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்படும் -விஜயகலா மகேஸ்வரன்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்படும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது பிரிவினைக்கான பயங்கர எச்சரிக்கை என்று யாழ்.நாகவிகாரை
விஹாராதிபதி நவதகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும்போதே நாக விஹாராதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தார். அவர் கலந்து கொண்ட கூட்ட மேடை பிரிக்கப்பட்டு இலங்கை ஈழ வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளேயே பிரதமர் ரணில் உரையாற்றினார்.விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த வடிவிலேயே ஈழ முத்திரையை வெளியிட்டிருந்தனர்.இந்த மேடையில் விஜயகலா மகேஸ்வரனும் அமர்ந்திருந்தார்.
ஐ.தே.கட்சி ஆட்சி உருவான பின்னர் வடக்கில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் மூடப்பட்டு பொலிஸார் வடக்கிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது இக்கருத்து பிரிவினைக்கான பயங்கரமான கருத்தாகும். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை மோசமாக மாறியுள்ளது.தெற்கிலிருந்து வரும் யாத்திரிகர்கள் தாக்கப்படுகிறார்கள்.
விஜயகலா மகேஸ்வரன் மிரட்டுகின்றார். இது தொடருமானால் வட மாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவிடும். எனவே எதிர்வரும் 17ஆம் திகதி சிங்கள மக்கள் ஒன்றிணைந்து சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப வாக்களித்து மஹிந்த ராஜபக் ஷவை இந் நாட்டின் பிரதமராக்க வேண்டும். இங்கு நான் இவ்வாறு பேசிவிட்டு யாழ்ப்பாணம் செல்ல முடியுமோ என்ற நிலையுள்ளது. ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தக் கட்சியை சேர்ந்தவரென்று தெரியாத நிலையுள்ளது என்றார்.

No comments:

Post a Comment