July 28, 2015

கிளிநொச்சி 3 வயது குழந்தை கொலை : 14 வயது சிறுவன் கைது!

கிளிநொச்சியில் பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டு கொலைச் செய்யப்பட்ட 3வயது குழந்தையின் கொலையுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் 14வயது சிறுவன் ஒருவன் கிளிநொச்சி பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளான்.
ஒரு மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சி பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் குழந்தை சில நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தாள்.
இந்நிலையில் அம்மூன்று வயது குழந்தையின் மரணம் தொடர்பில் 14 சிறுவன் ஒருவனை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாய்க்கால் ஒன்றில் குழந்தையைக் குளிப்பாட்டிய தாய் அந்தக் குழந்தையை அவ்வழியால் வந்த சிறுவன் ஒருவனுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் அந்தப் பெண் குழந்தை காணாமல் போயிருந்தது.
எனினும் பெற்றோரால் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போன குழந்தையைத் தேடுவதில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரத் தேடுதலின் பின்னர் குழந்தை காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில், விளைந்த நெல் வயலுக்குள் குழந்தையின் சடலம் உருக்குலைந்த நிலையில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குழந்தையின் ஆடைகளைக் கொண்டு இந்தச் சடலம் காணாமல் போன குழந்தையினுடையதே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சடலம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், குழந்தைக்கு என்ன நடந்தது, எவ்வாறு அது உயிரிழந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.
மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உருக்குலைந்திருந்ததனால், ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
முக்கிய பாகங்கள் மரபணு பரசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கும், சடலத்தை உடற்கூற்று தடயவியல் நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள அச் சிறுவனை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment