June 22, 2015

சீன- பாகிஸ்தானிய கூட்டுத் தயாரிப்பான ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா!

சீன- பாகிஸ்தானிய கூட்டுத் தயாரிப்பான ஜே.எவ்-17  பலநோக்கு போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளதாக தாய்வானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஏரோநொட்டிக்கல் கொம்பிளக்ஸ் மற்றும், செங்டு எயார்கிராப்ட் கோப்பரேசன் ஆகியன இணைந்து தயாரித்துள்ள இந்த பார் விமானத்தை தகொள்வனவு செய்யும் முதல்நாடு சிறிலங்காவே என்று தாய்வான் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

51வது பாரிஸ் விமானக் கண்காட்சியை அடுத்து ஆசிய நாடு ஒன்றுடன் இந்த விமானத்தை விற்பனை செய்வதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் விமானப்படையின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர், எயர் கொமடோர் காலித் மொகமட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 18 தொடக்கம் 24 விமானங்களுக்கு கொள்வனவு கட்டளை கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, சிறிலங்கா விமானப்படைத் தளபதியின் பணியகத்தில், ஜேஎவ் -17 போர் விமானத்தில் மாதிரி வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் ஒளிப்படம் ஒன்று வெளியான நிலையில், சிறிலங்காவே இந்த விமானத்தைக் கொள்வனவு செய்யும் முதல்நாடாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, 2017ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்கு ஜேஎவ்-17 விமானங்களை விநியோகிக்கவுள்ளதாக, பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்துள்ளதாகவும், தாய்வான் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தாய்வான் ஊடகத்தின் இந்தச் செய்தியை சிறிவலங்கா விமானப்படை மறுத்துள்ளது.

போர் விமானத்தைக் கொள்வனவு செய்வது குறித்து இன்னமும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிகன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும், சீனாவும், இந்த விமானங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், இதற்கான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், கொள்வனவு குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேஎவ்-17 போர் விமானங்கள் இலகு ரகத்தைச் சேர்ந்தவையாகும்.

ஒற்றை இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த போர் விமானம், வான்வழி கண்காணிப்பு, தரைத்தாக்குதல், விமானங்களை இடைமறுத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment