March 3, 2015

நட்டாற்றில் தமிழீழ மக்கள்!

 எடுத்துள்ளது. சிறீலங்கா அரசுக்கான விசாரணையை ஆறு மாதம் பின் போட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்தது. மார்ச் மாதம் நடைபெறவிருந்த இந்த விசாரணை இம் மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நீதியின் பால் மட்டும் இன்று உலகில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. ஆதிக்க சக்திமிக்க நாடுகளின் நலனின் அடிப்படையில் தான் மாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழ் மக்களுக்கான சர்வதேச விசாரணையை அமெரிக்கா கொண்டுவந்தது தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல, சீனா சிங்களத்தில் காலூன்றுவதை தடுக்கவேண்டும் என்ற தனது நலனின் அடிப்படையிலேயாகும். அதனால் தான் தனக்குச் சார்பான ஆட்சி ஏற்பட்டவுடனையே எமது விசாரணையை ஒத்திவைத்தது.

தமிழீழ மக்களை சர்வதேச அரங்கிலிருந்து கைகழுவி விடுவதற்கான முதல்நடவடிக்கையை ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழு
இது நாளை வளர்ச்சியடைந்து சிங்களத்துக்கு சார்பான தீர்வையே நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இதற்கு சிங்கள அரசும், சிங்களத்தலைவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான்
நன்றி செலுத்தவேண்டும்
01.01.2015ல் வெளிவந்த “ மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமை ” என்ற எனது கட்டுரையில் குறிப்பிட்ட, மேற்குலக நாடுகளுக்குச் சார்பான மைத்திரி பால சிறிசேன பதவிக்கு வந்தால் எமது பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டு சர்வதேசம் எம்மைக் கைவிட்டுவிடும். என்ற கருத்துக்கமைய முதலாவது நடவடிக்கையை அது எடுத்துள்ளது.
இந் நடவடிக்கையானது நாளை முழுமையாக தமிழ் மக்களை நட்டாற்றில் விடுவதற்கான முதல் நடவடிக்கையாகும். உலகில் நடந்த படுகொலைகளில் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலை முள்ளிவாய்க்கால் படுகொலையாகும். படுகொலையை விட அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை பல லட்சங்களாகும். இப்படுகொலை
நடப்பதற்கு சிலநாட்களுக்கு முன் எமது மக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் முன்னிலையில் கால்களில் விழுந்து தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள். பெரும் அழிவுகள் ஏற்பட முன்னரே மக்கள் வேண்டி நின்றார்கள்.
இதைத்தடுத்து நிறுத்த வல்லமை இருந்தும் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருந்து இந்த அழிவுக்குக் காரணமாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக மக்களின் நலன்களுக்கு அச்சாணியாக இருக்கவேண்டிய சபை. ஆனால் அது ஆதிக்கசக்திகளான நாடுகளுக்கு தாளம் போடும் சபையாக இருப்பது உண்மையில் வெட்கக்கேடானது.
ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது. இதனால்தான் தமிழ்மக்கள் அழிக்கப்பட்ட போதும் ஐ.நா சபை வெறும் பார்வையாளனாக மௌனமாக இருந்தது. அது மட்டுமன்றி அழித்தவனைப் பாராட்டி தீர்மானமும் நிறைவேற்றியது. ஆயினும் தமிழ்மக்களின் இரத்தமும், கண்ணீரும் உலக மக்களின் மனட்சாட்சியை தட்டி எழுப்பின. இப் புனிதக்கடமையை புலம்பெயர் மக்களும், புலம்பெயர் அமைப்புகளுமே பிரதானமாகச் செய்திருந்தனர். அந்தநிலை வளர்ச்சியடைந்து நீதியை நோக்கி, தமிழ்மக்களின் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது தான், அதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்ட சிங்களத்தலைமைகளுக்கு உதவி செய்து அரியணை ஏற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
காலத்திற்கு காலம் விலை போகின்ற சில தமிழ்த்தலைவர்கள் தமிழ்த்தலைமைக்குள் புகுந்து தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக எதிரிகளுக்கு உதவி எம்மை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். 30வருடங்களுக்கு மேலாக ஜனநாயக வழிகளில் அரசியல் நடாத்திய மக்களையும், தலைவர்களையும் ஆயுத முனையில் அடக்கி அழித்த வரலாறும், 1958ல் எமது மக்களைப் படுகொலை செய்த வரலாறும் இன்னும் கறையான் தின்றுவிடவில்லை. கிட்டதட்ட எமது ஒரு நூற்றாண்டு வரலாற்றில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளில் ஒரு சிறு துரும்பையாவது சிங்களஅரசுகள் அளித்த வரலாறு உண்டா ? எம்மை அழித்த வரலாறுதான் எண்ணில்லடங்காது உள்ளன.
உடுபிடவைகளில் அழுக்குப்படாது அரசியல் நடாத்தும் எமது அரசியல்வாதிகள் “ தரக்கூடியதைத்தான் கேக்கவேணும் தரமுடியாததைக் கேட்டுப் போராடுவது சரியானது அல்ல ” என்ற கருத்தையும் பரப்பி வருகிறார்கள். தரக்கூடியதை வாங்குவதற்கு இது பிச்சை அல்ல, இது எமது வாழ்வுரிமை. உரிமை என்பது பணம்
கொடுத்து வாங்குவதோ, தாம்பாளத்தில் கேட்டுப்பெற்றுக் கொள்வதோ அல்ல. அது உண்மையான தியாகப் போராட்டத்தினால் தான் சாத்தியமாகும். உலக வரலாறுகள் இதைத்தான் எமக்கு காட்டி நிக்கின்றன. வாழ முடியாத மக்கள் தான் உலகில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தந்தை செல்வாவின் வழியில் வந்த இவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர் செய்த எழுச்சி மிக்க சத்தியாகிரகப் போராட்டத்தைப் போலாவது இவர்களால் செய்யமுடிந்ததா ?
தந்தை செல்வா போல் சொந்தக்காலில் நின்று இவர்கள் அரசியல் செய்திருக்க வேண்டும். அவர் எவரிடமும் விலைபோகவில்லை. சிங்களவர்கள் அடித்து துன்புறுத்திய போது கூட போராட்டத்தைக் கைவிடவில்லை. அப்படியொரு போராட்டத்தை இத் தலைவர்கள் நடாத்தியிருக்கிரார்களா ? இதற்கும் ஒரு பதிலை இவர்கள் வைத்திருக்கிறார்கள். அன்று நிலைமை வேறு இன்று நிலைமை வேறு என்பார்கள். நாமும் அதையே சொல்வோம். அன்று சர்வதேசம் எங்களோடு இருக்கவில்லை. இன்று கணிசமான சர்வதேச நாடுகள் எம்மோடு இருக்கின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின் இது எமக்கு சாதகமாகவே உள்ளது.
அகிம்சைப் போராட்டத்திற்கான பாதை பிரகாசமாகவே இருந்தது. தியாகம் செய்யத் தயாரில்லாத, பயந்த தலைவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. என்பதுதான் உண்மை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீரமுள்ள தலைமைதான் தேவை. மக்களுக்கு முன்னால் செல்லக்கூடிய தலைவர்கள்தான் தேவை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு தியாகத்தாலும் இரத்தத்தாலும் கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. அதை விலைபோகின்ற தலைவர்களால் தலைமை தாங்க முடியாது.
2009வரை அது தேசியவாதிகளின் அமைப்பாகவே இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் பின்னர் தமிழ்தேசியவாதிகளையும், தேசியத்தை உச்சரிப்பவர்களையும் விரட்டிவிட்டு விலைபோகின்ற தலைவர்களை அணைத்துக்கொண்டு, நிறத்தை மாற்றி இனவழிப்பார்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. இதன் வெளிப்பாடாகவே இக் காலங்களில் தேசியவாதிகளான கஜேந்திரன், பத்மினி போன்றவர்களை ஒதுக்கியமை, தேசியம் பேசிய ஆனந்தி, ரவிகரனுக்கு நடவடிக்கை. தமிழ் மக்களை கூட்டுச் சேர்ந்து அழித்த சிங்களத்தலைவரான மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்தமை போன்ற இன அழிப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கையினை எடுத்து தமிழீழ மக்களை நட்டாற்றில் விட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசியவாதிகளின் புடம்போட்ட அமைப்பாக மாற்றப்படவேண்டும். இதற்கு உண்மையான தேசியவாதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு பயந்து நடுங்கிக்கொண்டு ஒதுங்கி நிற்போமானால் மீண்டும் தமிழ் மக்கள் நாடிழந்து நகரிழந்து கண்ணீரோடு தான் வாழவேண்டும். இந்தப் புனிதக்கடமையை ஈழத்தமிழரோடு உலகத்தமிழரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
- மாறன்

No comments:

Post a Comment