March 3, 2015

இந்திய விசுவாசத்திற்காக சம்பூர் மக்கள், வடபகுதி மீனவர்களின் விடயங்களைக் கையாள்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முற்றாக தம்மை விலக்கிக் கொண்டுள்ளது!

 மூன்று பக்கங்கள் கடலாலும் மறுபக்கம் வயல்களாலும் சூழப்பட்டு பெயருக்கேற்றவாறு சம்பூரணமாகக் காணப்பட்ட சம்பூர் கிராமம் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்து விட்டன.
ஆனாலும் சம்பூர் மக்களின் அகதிவாழ்வும் துன்பங்களும் இன்னும் முடிந்தபாடில்லை. சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர் குழுவொன்றினை சம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நேசன் வாரப் பத்திரிகையின் அப்போதைய பத்திரிகையாளரான தரிசா பஸ்தியன் அவர்கள் 10.09.2006 அன்று வெளியான நேசன் பத்திரிகையில் 'சம்பூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிறு பாதிப்புக்களுக்கு அப்பால் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக மிகக் குறைவானதாகும்' என அன்று தான் கண்ட சம்பூர் பற்றி எழுதியுள்ளார்.

அத்துடன் அப்போது சம்பூரில் நிலைகொண்டிருந்த 222 அல்லை - கந்தளாய் பிரிகேட்டின் அப்போதைய கட்டளைத் தளபதியாகிய லெப்டினன்ட் கேர்ணல் சரத் விஜேசிங்க சம்பூர் பிரதேசத்தில் பல பொலிஸ் காவல் நிலைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இவை யாவும் காலப்போக்கில் முழு அளவில் தொழிற்படும் பொலிஸ் நிலையமாகத் தரமுயர்த்தப்படும் என்றும், இவை விரைவில் ஆரம்பமாகவிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கை எனத் தன்னிடம் கூறியதாகவும் தரிசா பஸ்தியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கண்ட சம்பூரில் இருந்த எதுவுமே இன்று இல்லை.
சம்பூர் மக்களின் வீடுகள் மட்டுமல்ல, அரசாங்க வைத்தியசாலை, அரசடி விநாயகர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் என்பன இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. அருள்மிகு சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயமும் தாக்குதல்களால் சேதப்படுத்தப்பட்டு நிர்மூலமாககக் காட்சியளிக்கின்றது.
அத்துடன் எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் மக்களின் மீள்குடியேற்றம் மட்டும் இன்னும் இடம்பெறவில்லை.
01.11.2007 அன்று வெளியான டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச 'ஒரு தனிநபர் கூட சம்பூரிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் எல்.ரி.ரியினர் தமது பாதுகாப்புக்காக சில குடும்பங்களை கொண்டு வந்து சம்பூரில் வைத்திருந்ததாகவும் இந்தக் குடும்பங்களே தமது நில உரிமையினை நிரூபிக்க முடியாதவர்களாக இருப்பதுடன் இவர்கள் எங்களுக்கு ஒரு வீட்டினைக் கூடக் காட்ட முடியாதவாகளாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தரிசா பஸ்தியனின் செய்தியினையும் பசில் ராஜபச்சவின் நேர்காணலினையும் சேர்த்துப் பார்க்கும் போது சம்பூர் மக்களின் வீடுகளுக்கு யாரால் என்ன நடந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
30.08.2009 அன்று வெளியான ராவய பத்திரிகையில் தனுஜ பத்திரண அவர்கள் இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுமார் 500 வீடுகளை அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களுமின்றி அவர்களுடைய எழுத்து மூலமான எவ்வித அனுமதியினையும் பெறாமல் இலங்கை அரசாங்கம் தரைமட்டமாக்கியுள்ளது எனவும் அந்த அனல் மின்நிலையம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட சம்பூர் பிரதேசமானது மக்கள் வாழாத சூனியப் பிரதேசம் என இந்திய பிரதிநிதிகளுக்கு காட்டவே அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்விடத்தினை நாசப்படுத்தியுள்ளது எனவும் இது தொடர்பாக மின்சக்தி அமைச்சு அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த வீடுகள் தமது அமைச்சினால் தரைமட்டமாக்கப்படவில்லை என்றும் அது அரசாங்கத்தின் பிறிதொரு தரப்பினால் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு நிலக் கையகப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் சட்ட விதிமுறைகளை இலங்கை அரசாங்கமே அப்பட்டமாக மீறி சம்பூர் மக்கள் மீது பாரிய அட்டூழியம் புரிந்துள்ளமை தெளிவாகின்றது.
ஒரு அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்த நடைமுறைகளும் சப்பூர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அபிவிருத்தித் திட்டத்தினால் ஏற்படக்கூடிய செலவு நலன் ஆய்வு, சூழல் பாதிப்பு ஆய்வு, சமூகப் பாதிப்பு ஆய்வு என எதுவும் சம்பூர் விடயத்தில் உரிய முறையில் செய்யப்படவில்லை.
இந்நிலையில் பழைய அரசாங்கத்தின் ஆட்சியில் அட்டூழியங்களுக்குள்ளான சம்பூர் மக்கள் புதிய ஆட்சியிலாவது தமக்கு விடிவு கிட்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் சம்பூர் விடயத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையே தொடர்கின்றது. புதிய அரசாங்கத்தின் பிரதமரும் அனல் மின்நிலையத்திற்கு அப்பால் சம்பூரில் பாரிய கைத்தொழில் வலயம் அமைப்பது பற்றி பேசுவதாகவும் உங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லையா எனக் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சூழல் பாதிப்புக் காரணங்களை மையமாக வைத்து உமா ஓயாத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திட்டமும் இதே காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார். கொழும்பு துறைமுக நகரத்திட்டம் பற்றிய சூழல் பாதிப்பு அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனதா விமுக்தி பெரமுன கோரியுள்ளது.
ஆனால் சம்பூர் விடயத்தில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. சம்பூர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு சம்பந்தன் அவர்கள் சம்பூர் மக்கள் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் பொறுமைகாக்கும் படியும், அனல் மின்நிலையம் சம்பூரில் அமைக்கப்படும், ஆனால் மக்களும் அங்கு குடியேறலாம் என்பதே தனது நிலைப்பாடு எனவும் கூறுகின்றார். ஆனால் சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் போது மூதூர் பிரதேசத்திலுள்ள வளமான ஆயிரக்கான ஏக்கர் வயல்நிலங்களுக்கும் வளமான கொட்டியாரக் குடாக்கடல் மீன்பிடிக்கும் ஏற்படப் போகும் பாதிப்பு பற்றியோ அனல் மின்நிலையம் உள்ளிட்ட கைத்தொழில் வலய அபிவிருத்தித் திட்டங்களில் தொழில் புரிவதற்காக மூதூருக்கு வரப்போகும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களினால் மாற்றமுறப்போகும் திருகோணமலை மாவட்டத்தின் குடிப்பரம்பல் பற்றியோ அதனால் பறிபோகப் போகும் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றியோ ஏன் எவ்வித புரிதலுமின்றி பேசுகின்றார் என்பது பற்றி சம்பூர் மக்களுக்கு இன்று வரை புரியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அனல் மின்நிலையம் பற்றிய சம்பூர் மக்களின் கருத்து என்ன என்பது பற்றி இன்று வரை அம்மக்களுடன் பேசாமைக்குரிய காரணமும் இன்றுவரை மக்களுக்குப் புரியவில்லை. இந்திய விசுவாசத்திற்காக வடபகுதி மீனவர்களின் விடயங்களைக் கையாள்வதில் முற்றாக தம்மை விலக்கிக் கொண்டுள்ளது போலவே சம்பூர் விடயத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை சம்பூர் மக்களைக் கைவிட்டுள்ளது.
ஒரு அடாத்தான வர்த்தமானிப் பிரகடனத்தின் ஊடாக பறிக்கப்பட்ட சம்பூர் மக்களின் காணிகளை இன்னுமொரு வர்தமானிப் பிரகடனத்தினூடாக மிக இலகுவாக அம்மக்களிடம் வழங்கக்கூடிய வாய்ப்பிருந்தும் இன்றுவரை அம்மக்களை எல்லோரும் சேர்ந்து அகதி முகாமில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? கிழக்கில் யுத்தம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நல்லாட்சியினை முன்னிறுத்தி பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் கூட சம்பூர் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமினை விலக்கி பாடசாலயினை மீள இயங்க அனுமதிக்காமைக்குரிய காரணங்கள் என்ன? இதுதான் நல்லாட்சியின் இலட்சணமா?
அரசியல் ரீதியாக தொடர்ந்து புறக்கணிப்புள்ளாகிக் கொண்டிருக்கும் சம்பூர் மக்கள் தாமாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா? ஆனால் மக்கள் பொறுமை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. புதிய அரசாங்கத்தினை பதவிக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது எட்டு வருடங்களாக அகதிமுகாம்களில் அல்லலுறும் சம்பூர் மக்களை வரப்போகும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றத் தவறினால் பொதுத் தேர்தலானது சம்பூர் மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும். அது திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு வரலாற்றுரீதியான படிப்பினையாகவும் அமையக்கூடும்.
- கலாநிதி.கோ.அமிர்தலிங்கம்

No comments:

Post a Comment