March 3, 2015

மஹிந்த பாணியினில் மைத்திரியும் வந்தார்-சென்றார்!

வடக்கினில் தீர்க்கப்பட வேண்டுமென தமிழ் தரப்புக்கள் வலியுறுத்திவரும் காணிவிடுவிப்பு,காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அரசியல்கைதிகள் விடுதலை பற்றி சொல்லிக்கொள்ளத்தக்கதாக ஏதும் பிரஸ்தாபிக்காது உப்புசப்பற்றதாக
முடிந்துள்ளது மைத்திரியின் யாழ்.விஜயம். குறைந்தது உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளினில் ஒரு பகுதியினையாவது நல்லிணக்க அடிப்படையினில் விடுவிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாமென நிலவிய எதிர்பார்ப்பும் பொய்த்தே போயுள்ளது.

தனது உரையினில் இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும்  அவசியம் எனக்கு உள்ளது.  அதற்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என  மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

 வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் முன்னர் யாழ்ப்பாணத்திற்கு  தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்குக் கேட்டு வந்தேன். ஆனால் இன்று ஜனாதிபதியாக வந்துள்ளேன். என்னை வெற்றியடையச் செய்தமைக்கு வடக்கு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





இந்த நாட்டில் இனம் மதம் என எதுவும் இன்றி மக்களைப் பாதுகாப்பதே எனது நோக்கம்.  பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் . அதற்கு நாடாளுமன்றம், மாகாண சபை என்பன இதற்கு முக்கியமான நிறுவனங்களாக உள்ளன. இங்கு உரையாற்றியவர்கள் கல்வி சுகாதாரம், காணிப்பிரச்சினை,நிலப்பிடிவிப்பு பற்றிக் கூறியுள்ளீர்கள் . காணி ப்பிரச்சினை தீர்க்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பொறுப்பு சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர்  சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். எனவே யுத்தத்தின் போது இராணுவத்தினால் பெறப்பட்ட காணிகள்  வடக்கு கிழக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அலரிமாளிகைக்கு எனவும் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் வேண்டும் என நீண்ட நாளாக கேட்டு வந்தீர்கள் .ஆனாலும் அவை இடம்பெறவில்லை. நானும் பல தடவை முன்னைய ஜனாதிபதிக்கு கூறினேன் ஆனால் செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறு ஆளுநர் மாற்றப்படாத காரணத்தினால் தான் நான் இன்று ஜனாதிபதியாக வெற்றிபெற்றேன். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மீனவர்கள்  பிரச்சினை குறித்தும் நான் நன்கு அறிவேன். இவற்றுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் . எமது நாட்டில் நூற்றுக்கு ஆறு வீதமானவர்கள் வேலை இன்றி உள்ளனர். கடந்த 3 வருட காலமாக பட்டதாரிகள்  வேலை இன்றி உள்ளதை அறிவேன் அவர்களுக்கும்  வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கடந்த 5 வருட காலமாக நான்  சுகாதார அமைச்சராக பணியாற்றிய காரணத்தினால் வைத்தியசாலைகளில் இருக்கும் பதவி வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் . கமத்தொழிலில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது எனக்கும் தெரியும். வடக்கு விவசாயிகள்  அனைத்து நாட்டுக்கும் உதாரணமானவர்களாக உள்ளதை நாங்கள்  அறிவோம். தேசிய வருமானத்திற்கு வடக்கு விவசாயிகள்  பெரிதும் உழைக்கின்றனர். எனவே அவர்களது பிரச்சினைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் .அத்துடன்  குடிநீர்ப்பிரச்சினையும் இங்கு காணப்படுகின்றது.  அதனை வெளிநாடுகளுடன் பேசி தீர்க்க நடவடிக்கை எடுப்போம். அடுத்து வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரில் 80 ஆயிரம்  விதவைகள்  உள்ளனர் என எனக்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.  இது போல தெற்கிலும் உள்ளனர் . இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் பற்றி  வாராந்தம் கலந்துரையாடி அவற்றைச் செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றோம். எதிர்வரும் நாள்களில் எமது அமைச்சர்களை அடிக்கடி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசியல் தலைமைத்துவம், வடக்கு மாகாண சபை,  உள்ளூராட்சி சபையினர் இங்குள்ள அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு மண் என்பவற்றால் மக்களை சேர்க்க முடியாது.  எனவே வடக்கு , கிழக்கு,  தெற்கு மக்களை உள்ளங்களால் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுப்பேன். அனைவரும் பயம் சந்தேகம் இல்லாது சகோதரர்களாக வாழ வேண்டும் . எங்கள்  மத்தியில் இருக்கும் நம்பிக்கையுடன் செயற்பட்டு அனைவரும் ஒரே நாடாக இருந்து செயற்படுவோம். பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தீர்க்கப்படாதவற்றை தீர்க்க வேண்டும். வறுமையினை இல்லாது ஒழிக்க வேண்டும். மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . நாங்கள் வடக்கிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியது போல தெற்கிலும் ஒற்றுமையுடன் பேசி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment