August 1, 2016

ஐ.நா. தீர்மானம் முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும்! கனடா வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கனடா வலியுறுத்த்தியுள்ளது.


கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் இதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்காகத்தான் நாம் இலங்கை வந்தோம்.

பொறுப்புக்கூறல் நிகழ்வதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் இங்கே வந்தோம். சில முன்னேற்றங்களை நாம் அவதானித்திருக்கின்றோம்.

செய்ய வேண்டியவைகளும் ஏராளம் இருக்கின்றன என்பதையும் அழுத்திச் சொல்லியிருக்கின்றோம். வெளிநாட்டு நீதிபதிகள் விடயம் இன்னமும் திறந்த கேள்வியாகவே இருக்கின்றது என எனக்குச் சொல்லப்பட்டுள்ளது.

அது விவாதத்துக்குரியதாகவே இருக்கின்றது. அது இன்னமும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை அது போல் தீர்மானிக்கப்பட்டுவிடவும் இல்லை.

யுத்தக்குற்ற விசாரணைகளுக்கான நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் என்று வல்லுநர்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு கனடா தயாராக இருக்கின்றது.

ஐ.நா. தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதை கனடா ஊக்குவிக்கிறது. ஏனென்றால், அந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையாளர்களில் நாமும் ஒருவர்.

எனவே, தீர்மானம் உண்மையாகவேண்டும் என்பதே எமது விருப்பம். புதிய அரசு உலக சமூகத்திற்கு உறுதியளித்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசினதும் கனடா அரசினதும் வேறு பல நாடுகளினதும் அனுசரணையுடனேயே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் நல்லிணக்கத்திற்காகச் செய்யப்படவேண்டிய விடயங்கள் பட்டியலிடப்பட்டன. எனவே, நாம் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தோம்.

இந்த நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிக்காவிட்டால், என்ன நடந்திருக்கும்? நல்லிணக்கம், புதிய அரசமைப்பு மற்றும் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு என்பவற்றுக்கான எதிர்பார்ப்பு இருந்தது.

அதனால்தான் கனடா அதனை ஆதரிக்க வேண்டியிருந்தது. அபிவிருத்தியும் முக்கிமானதாக இருந்தது. கனடாவில் இருந்து முதலீடுகள் வரவிருக்கின்றன. பல நிறுவனங்கள் முதலிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வேறுபட்ட அடையாளங்களை அங்கீகரிக்கும் ஒரு நாடாகுவதற்குமான அர்ப்பணிப்பை தனது அரசு ஊடாக இலங்கை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது.

அது செய்யப்படவேண்டும். சில வேலைகள் நடந்திருக்கின்றன. செய்ய வேண்டியவையும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றுக்கு ஆதரவளிப்பதற்கு கனடா தயாராக இருக்கின்றது. இலங்கை தொடர்பில் நாம் அக்கறை கொண்டுள்ளோம். கனடாவுக்கும் இலங்கை தொடர்பில் குறிப்பாகத் தமிழர்கள் தொடர்பில் ஒரு ஆணித்தரமான பின்னணி உண்டு.

உள்நாட்டுப் போரை எதிர்கொண்ட ஒரு நாடு நல்லிணக்கத்தை எட்டியுள்ளது என்றால் அது உலகத்திற்கு ஒரு படிப்பினை.

இன, மத, மொழி வழியாகப் பிளவுப்பட்டிருக்காமல் பல்லினத்தன்மையே பலமானது என்பதை இலங்கை நிரூபித்தால் உலகமும் அதனை முயன்று பார்க்கத் தயாராகும்.

எனவே, உங்கள் வெற்றி என்பது உங்களுக்கானது என்பதுடன் அது உலகுக்கும் முக்கியமானது. தமிழர்கள் அழகான பண்பாட்டைக் கொண்டவர்கள்.

நாம் பேச வேண்டும் என்று கனவு காணும் மொழியைக் கொண்டவர்கள். இலங்கை மற்றும் மொத்த உலகமும் தமிழர்களின் கலாசாரத்தைக் கொண்டாடவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

ஒரு உறுதியான தமிழ்ச் சமூகம் கனடாவில் இருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment