July 27, 2016

உருத்திரபுரம் வாய்க்காலில் ஒருவரின் சடலம் மீட்பு!

உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள  வாய்க்காலில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று பதினோரு மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர் உருத்திரபுரம் சிவநகர் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் எழுபத்து ஐந்து வயதான இராமு சண்முகம் என்ற முதியவர் என கிளிநொச்சிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜெயந்திபுரத்தில் உள்ள தனது மகளை பார்வையிடுவதற்காக இன்று காலை எட்டு மணியளவில் சென்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இன்று பத்து ஐம்பது (10.50)  மணியளவில் வீதியால்  சென்றுகொண்டிருந்த ஒருவர் குறித்த வாய்க்கால் பகுதியில் சடலம் இருப்பதனை அவதானித்த அவர் கிளிநொச்சி பொலிசறிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிசார் மற்றும் குற்றத்தடகவியல் பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி மற்றும் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்க்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் வைத்து பிரேதபரிசோதனைக்கு உட்ப்படுத்த இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  முதியவர் தடுமாறி வாய்க்காலில் வீழ்ந்தாரா அல்லது விபத்தினால் வாய்க்காலினுள் வீழ்ந்து இறந்தாரா எனும் பல கோணங்களில் கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment