June 9, 2016

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற கருத்திட்டங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களை
அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதற்கும் அரசாங்கம் அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்களை இம்மாகாணங்களில் அமுல்படுத்துவதற்காக ரூபா 14 பில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.

இக்கருத்திட்டங்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சினால் துரிதகதியில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அலுமுல்படுத்தப்படுகின்றன.

இவை தொடர்பாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு செயலாளர் வே.சிவஞானசோதி வழங்கிய தகவல்கள் வருமாறு:-

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சினால் 9,000 நிரந்தர வீடுகள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும், 630 வீடுகள் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிக் குடும்பங்களுக்கும், 400 வீடுகள் முன்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குமென மொத்தமாக 10,000 ற்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளை அமைக்கும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கென ரூபா 8,024 மில்லியன் நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அமுல்படுத்தப்படுகின்றன.

இவற்றில் 3,140 வீடுகள் யாழ் மாவட்டத்திலும், 1,035 வீடுகள் கிளிநொச்சியிலும், 1,035 வீடுகள் முல்லைத்தீவிலும், 1,140 வீடுகள் மன்னாரிலும், 910 வீடுகள் வவுனியாவிலும், 1,120 வீடுகள் திருகோணமலையிலும், 1,000 வீடுகள் மட்டக்களப்பிலும், 165 வீடுகள் அம்பாறையிலும், 80 வீடுகள் புத்தளத்திலும், 240 வீடுகள் பொலநறுவையிலும், 65 வீடுகள் அனுராதபுரத்திலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பகுதியாக சேதமடைந்த 2,400 வீடுகளைப் புனரமைப்பதற்காக ஒரு வீட்டுக்கு தலா 200,000 ரூபா வழங்கப்படுகின்றது. இதற்காக ரூபா 480 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 720 பகுதியாக சேதமடைந்த வீடுகள் யாழ் மாவட்டத்திலும், 120 வீடுகள் கிளிநொச்சியிலும், 170 வீடுகள் முல்லைத்தீவிலும், 200 வீடுகள் மன்னாரிலும், 50 வீடுகள் வவுனியாவிலும், 100 வீடுகள் திருகோணமலையிலும், 1,000 வீடுகள் மட்டக்களப்பிலும், 100 வீடுகள் அம்பாறையிலும் புனரமைக்கப்படுகின்றன.

உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிக் குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 7,600 கழிப்பறை (மலசலகூடங்கள்) வசதிகள் ரூபா 418 மில்லியன் நிதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 1,200 கழிப்பறை அலகுகள் யாழ் மாவட்டத்திலும் 1,000 அலகுகள் கிளிநொச்சியிலும், 1,000 அலகுகள் முல்லைத்தீவிலும்,1,000 அலகுகள் மன்னாரிலும், 1,000 அலகுகள் வவுனியாவிலும் 1,000 அலகுகள் திருகோணமலையிலும், 1,000 அலகுகள் மட்டக்களப்பிலும், 400 அலகுகள் அம்பாறையிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நீர் விநியோக கருத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 39 கிணறுகளை அமைத்தல், 108 கிணறுகளை புனரமைத்தல், 5 விவசாயக் கிணறுகளை அமைத்தல், 77 விவசாய கிணறுகளை புனரமைத்தல் மற்றும் 12 நீர்விநியோகத் தொகுதிகளை அமைத்தல் ஆகியவை அமுல்படுத்தப்படுகின்றன.

முல்லைத்தீவில் 101 கிணறுகள், 26 குழாய்க் கிணறுகள், 15 விவசாயக் கிணறுகள் மற்றும் 402 நீர்விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீர்விநியோக திட்டங்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டு அவை தொடர்பான கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏனைய மாவட்டங்களில் இதற்கென ரூபா 50 - 75மில்லியன் ரூபா வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிக் குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொதுப் பயன்பாட்டு கிணறுகள் மற்றும் அதிக பங்குடைய கிணறுகள், விவசாயக் கிணறுகளைப் புனரமைப்பதன் மூலம் நீர்ப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிக் குடும்பங்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதியுயர் தொகையாக ரூபா 100,000 வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 12,050 குடும்பங்கள் பயன் பெறும். இதற்கென ரூபா 1,205 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார உதவிகள் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மீன்பிடி, குடிசைக் கைத்தொழில், விவசாயம் மற்றும் ஏனைய வருமானம் ஈட்டும் தொழில்களை உள்ளடக்கும்.

யாழ் மாவட்டத்தில் 3,000 குடும்பங்களுக்கும் கிளிநொச்சியில் 1,600 குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் 1,500 குடும்பங்களுக்கும், மன்னாரில் 1,600 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 1,500 குடும்பங்களுக்கும் திருகோணமலையில் 1,300 குடும்பங்களுக்கும் மட்டக்களப்பில் 1,000 குடும்பங்களுக்கும் அம்பாறையில் 550 குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளான உள்ளக வீதிகள், வீடுகளுக்கான இலவச மின்சார விநியோக இணைப்புகள், பாடசாலைகளைப் புனரமைத்தல், வைத்தியசாலைகளைப் புனரமைத்தல், முன்பள்ளிகள் மற்றும் ஏனைய உட்கட்டடைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபா 630 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் யாவும் துரித கதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் நிரந்தர வீடுகள், பகுதியாக சேதமடைந்த வீடுகள், நிர்விநியோகம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் ஆகிய நிரந்தரமான தீர்வுகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகூடிய முன்னுரிமை வழங்கியுள்ளது.

இம்முன்னெடுப்புக்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற கருத்திட்டங்களுக்காக 2016 ம் ஆண்டு ரூபா 14 பில்லியன் ஒதுக்கீடு என்பன சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment