June 9, 2016

நெறி பிறழ்ந்த நடத்தையினால் சீரழியும் மனித விழுமியங்கள்!

“உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது.


மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார்.

ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பதை சிலப்பதிகாரமும் வலியுறுத்துகின்றது. இன்று அந்நிலை மாற ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது.

இன்றைய சமுதாயத்தில் நலிந்து வரும் சமூக, கலாசார சீர்கேடுகளில் விபசாரமும் ஒன்றாகும். மாறி வரும் சமூகத்திலே விபசாரம் பற்றி அறியாதவர்கள் கூட விபசாரத்துக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அதற்கு அவர்களின் இது பற்றிய அறிவின்மையே காரணமாகும்.விபசாரம் என்பது வரையறை இல்லாத உடல் உறவு எனப்பொருள்படும்.

அதாவது விபசாரி ஒரு ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஆதாயம் கருதியோ சாதாரணமாகவோ அல்லது அதீத நிலையிலோ அதுவே தொழிலாகக் கொண்டு பலரோடு உறவு கொள்வதே விபசாரம் ஆகும்.

விபசாரத்தில் அன்போ காதலோ கிடையாது. விபசாரம் மூன்று நிலைகளில் நிகழ்கின்றது.

சட்டரீதியான உரிமையில்லாத சர்வ சாதாரணமான உடலுறவு.

பணத்துக்கோ வேறு உடைமைக்கோ தன்னை விற்றல்.

ஆர்வமோ அன்போ இல்லாத வெறி நிலையில் கொள்ளும் உடலுறவு.

இவையே அந்த மூன்று நிலைகளுமாகும், இவ்வாறான மூன்று நிலைகள் இன்றும் காணப்படுகின்றன. இது சட்டத்தினால் மாத்திரம் அல்லாமல், சமூகத்தாலும் விலக்கப்பட வேண்டிய ஓர் சீர்கேடாகும்.

அது தமிழர்களால் அன்றைய காலத்தில் தாசி தொழில் என்று அழைக்கப்பட்டது. விபசாரம் செய்யும் பெண்களால் சமூகத்தில் பல சீர்கேடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக தமிழ்ச் சமுகத்தில் அவர்களை பொது வாழ்வில் இருந்து ஓரம் கட்டினர். எனினும் இன்றைய காலத்தில் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மறைமுகமாக சமூகத்தில் வாழ்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்றிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கருதுகின்றன.

மேலும் மொசப்பதேமியாவிலும் கி. மு. 2300ல் விலை மாதுகள் விபசாரத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் விபசாரம் வெளிப்படையாக தலையெடுத்தது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் அங்கீகாரமற்ற அனுமதி இல்லாமல் செயற்படும் இத் தொழிலானது மிகவும் மலிந்து காணப்படுகின்றது. இது ஒழுக்கத்திற்கு முரணான ஒரு விடயமாகும்.



சமயங்களில் இந் நிலையை நோக்கும் போது நால்வகை சமயங்களினாலும் விலக்கப்படுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.

இந்து சமயத்தில் இவர்கள் ஒழுக்கத்திற்கு முரணானவர்களாகவும் சமூகத்தில் விலக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

கிறிஸ்தவ சமயத்தில் பத்து விலக்கப்பட்ட கட்டளைகளில் இதுவும் ஒன்றாகும்.

பௌத்தத்திலும் அவர்களது விலக்கப்பட்ட பஞ்ச மாபாதகங்களிலும் இதுவும் ஒன்றாகும்.

இஸ்லாம் சமயத்தில் திருமணம் மூலம் அல்லாமல் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நூறு கசை அடிகளும் திருமணத்திற்கு பின் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

இவ்வாறே சமயங்களும் விபசாரத்தை விலக்கி நிற்கின்றன.

மகிழ்ச்சியின்மை, வறுமை, மறுமணத்தில் உள்ள தடைகள், ஆடம்பர வாழ்க்கை போன்றனவும் விபசாரத்திற்குக் காரணமாகின்றன. எனினும் இது மனித விழுமியங்களுக்கு முரணான ஒன்றாகும்.

விபசாரம் அதிகரிப்பது சமுதாயத்தில் மாபெரும் தீங்காகும்.பெண் பணத்திற்காக தன்னை விற்று சமுதாயத்தில் பல தீங்குகளை விளைவிக்கின்றாள்.

அத்தோடு இயல்பான குடும்ப வாழ்க்கையை பாழாக்கின்றார்கள் பலர். உடல் உள நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

வெளிநாடுகளிலும் குறிப்பாக பின்லாந்து, போலந்து , தாய்லாந்து போன்ற நாடுகளில் இது அதிகரித்துக் காணப்படுகின்றது.

விபசாரத்துக்குத் தூண்டுதலாக இன்றைய சமூகத்தில் தொடர்பு சாதன ஊடகங்களும் பங்களிப்புச் செய்கின்றன. அந்த வகையில் செல்போன்கள் பெரிதும் துணை புரிகின்றன.

மேலும் மாணவர்களின் தவறான இணையப் பார்வையினாலும் தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஆபாசச் சினிமாக்களினாலும் இன்றைய சமுதாயம் இன்னொருவகையில் படுநாசக் குழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும் விபசாரத் தொழில் ஈடுபடுபவர்கள் உடல், உள நோய்களுக்கு உட்படுகின்றனர். அதாவது பாலுறவு நோய்கள், இதயக் கோளாறு, எயிட்ஸ் போன்றனவாகும். இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம கருக்கலைப்பு, தற்கொலை, கொலை, மனப்பிறழ்வுகள் எதிர்கால சந்ததிகளின் சீர்கேடுகள் போன்ற தீமைகளும் ஏற்படுகின்றன.

இந்நெறிபிறழ்வினால் இல்லற வாழ்வு சீர்கெட்டுப் போகின்றது. மேலும் குடும்பவாழ்வு சிதைவுபடுகின்றது. சமூக கட்டுக்கோப்பு குறைகின்றது. இதனால் பலருக்கு மனச்சிதைவு ஏற்படுகின்றது.

கலை கலாசாரப் பண்பாடு சிதைந்து போகின்றது. சந்ததியின் சிறப்பு அழிந்து போகின்றது. இவ்வாறே சமூகத்தின் விழுமியங்கள் அனைத்தும் வீ்ழ்த்தப்படுகின்றன.

அதிகரித்துவரும் இச்சீர்கேட்டில் இருந்து நாம் சமுதாயத்தை மீட்பதற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

பெற்றோர் பிள்ளைகள் மீது அக்கறை கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும். அதாவது பிள்ளைகளின் இணையப் பாவனையை நல்லமுறையில் செயற்படுத்த வேண்டும்.

மேலும் பிள்ளைகளின் செயற்பாடுகளிலும் நடை உடை பாவனைகளிலும் செயற்பாடுகளிலும் அக்கறை கொள்ள வேண்டும்.

இத் தொழில் பற்றிய விழிப்புணர்வை எமது சமூகத்திற்கு வழங்குவதோடு இத் தொழிலில் ஈடுபடுபவருக்கு கடுமையான தண்டனை விதிப்பதன் மூலம் சமூக சீர்கேடுகளில் இருந்து சமூகத்தினைப் பாதுகாக்க முடியும்.

மேலும் அரச சட்டம் மட்டுமன்றி தேசத்தை. மொழி கலை, கலாசாரம் என்பவற்றை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு பிறர் நலம் பேண தொண்டு செய்ய விரும்புபவர்களும் இத் துறை சம்பந்தமான விழிப்புணர்ச்சியை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பா. விதுஷாயினி

மெய்யியல்துறை (3ம் வருடம்)

யாழ். பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment