June 1, 2016

யாழில் ஈழநாடு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவு!

தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.

இலங்கையில், கொழும்பிலிருந்து தேசியப் பத்திரரிகைகள் வெளிவந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை வியடத்தில் மிக முக்கிமான பங்குவகித்திருந்தது.

பிராந்திய பத்திரிகைகள் தமிழர் பிரதேசங்களிலிருந்த மாத்திரமே வெளிவந்தன. இதனால் தமிழ் மக்களினுடைய பாரம்பரியங்களும் கல்விச்செயற்பாடுகளும் முக்கியத்துவமடைந்தன.

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து 1978 ஆம் ஆண்டு 2ஆம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கியிருந்தது. அந்த யாப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை மையமாகக்கொண்ட இந்த அரசியல் யாப்பை ஈழநாடு பத்திரிகை வன்மையாக கண்டித்திருந்தது. அதுமாத்திரமன்றி, அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்த அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவையும் அவரது தமைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் ஈழநாடு பத்திரிகை விமர்சித்தது.

இந்தக் காரணங்களின் அடிப்படையிலேயே யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அன்றிரவு ஈழநாடு பத்திரிகை காரியாலயமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இதன்போது காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் அமரர் ஐயா சச்சிதானந்தம், ஈழநாடு பணிப்பாளர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனைய ஊழியர்கள் தப்பியோடினர்.

நகரத்தின் மத்தியிலிருந்த யாழ் மாநகரசபைக் கட்டடத்திற்கும் தீயிடப்பட்டது. ஆகவே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர் தாயகமாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த தீவைப்பு சம்பவங்களை கூறலாம்.
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இந்த நடவடிக்கைகளால் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களையும் போராட்டத்தையும் எவ்வாறு பயங்கரவாதமாக கூறமுடியும் கேள்வி எழுகின்றது.

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டமும் 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் இந்தக் கேள்விக்குப் பதில் தரவேண்டியவர்கள் யார் என்பதுதான் தமிழ் மக்களினுடைய மனக்குமுறலாக உள்ளது.

No comments:

Post a Comment