May 18, 2016

விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்!

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறிப் படைகள் 1 1/2 இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த ” இனப்படுகொலை ” நிகழ்ந்து 7 ஆண்டுகள் முடிவடைகின்றன.

ஒப்பற்ற அறம் தழுவிய ஒரு விடுதலைப் போராட்ட்டம் சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்பட்டது.
ஆனால்
முள்ளிவாய்க்காலின் பின் தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது என்று எதிரிகள் முழங்குவது பொருளற்றது.
விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்.
1833 இல் வெளியான கோல்புரூக் ஆணைக்குழு அறிக்கையின் படி அன்று தமிழீழ மக்களின் தாயகம் 26,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பாக இருந்தது. 1901 இல் இலங்கையின் நிகழந்த மாகாணப் பிரிவினையின் போது 7500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு தமிழீழ மண்ணில் இருந்தது பறிக்கப்பட்டுச் சிங்கள மாகாணங்களோடு இணைக்கப்பட்டது. இலங்கை வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட 1948 க்கும் – வட்டுக் கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் : தனித் தமிழீழம் ” தீர்மானம் நிறைவேற்றிய 1976 க்கும் இடையிலான 27ஆண்டுகளில் தமிழீழத்தில் தொடர்ந்து நிகழ்ந்த சிங்களவர் குடியேற்றத்தால் மேலும் 7500 சதுர கிலோ மீட்டர் தமிழீழ மண் சிங்களவர் நிலமாக மாற்றப்பட்டது. 1833 இல் 26500சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பாக இருந்த தமிழீழத் தாயகம் 1976 இல் 11500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பாக சுருங்கிற்று. இக் காலகட்டத்தில் தான் தமிழீழ மக்கள் ஆயுதப் போரை முன்னெடுத்தனர்.
ஆயுதப் போராட்டம் நடந்த 1976 -2009 வரையிலான 33 ஆண்டுகளில் தமிழீழ மண்ணில் ஒரு அங்குல மண்ணைக் கூடச் சிங்களவர்களால் பறித்தெடுக்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலின் பின் – இன்று தமிழீழ மண்ணில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருகிறது.
தமிழீழத் தாயகத்தின் அடையாளத்தை ( Demography ) அழித் தொழிக்க – இலங்கைத் தீவு சிங்களவர்களுக்கு முழுமையும் சொந்தமான ” ஒற்றைத் தாயகம்” என்னும் நிலையை உருவாக்க – வரலாற்றைத் திரிக்க – சிங்கள அரசு மேற்கொள்ளும் இக் கொடுமையை – இன அழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு உதவ வேண்டும் என்று இந்திய – ஈழத் தமிழர் நட்புறவு மையம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நாளான இன் நாளில் பணிவோடு வேண்டுகிறது.
அசாமில் வங்காளியர்கள் குடியேறுவதையும் – அசாம் மக்களின் தாயகம் தன் அடையாளத்தை ( Demography ) இழந்துவிடும் நிலை உருவாகி இருப்பதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசு அசாமில் நிகழும் வங்காளியர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த அக்கறையோடு செயலாற்றி வருவதை அறிவோம். அதே அணுகுமுறையைத் தமிழீழத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிங்களவர் குடியேற்றத்திக்கு எதிராகவும் இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.
முள்ளிவாய்க்காலுக்கு (2009) முன்பு செய்யப்பட்ட ராஜீவ் – ஜெயவர்த்தன உடன் படிக்கை ( 1987) வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தியது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு – இன்று வடக்கையும் கிழக்கையும் இணைய விடுதில்லை என சிறிலங்காவின் சிங்கள் அரசு அடம் பிடிக்கிறது. இதுவும் தமிழீழத் தாயகத்தை துண்டு போட்டு – அதன் அடையாளத்தை ( Demography ) அழித்தொழிக்கும் முயற்சியே அன்றி வேறில்லை.
இலங்கைத் தீவு இரு தாயகங்களாக இருப்பதே இந்தியாவுக்கு வலிமை என்பதையும் – இலங்கை தீவின் மூன்றில் இரண்டு பகுதி கடற்கரையைக் கொண்ட தமிழீழத்தை அழிந்தொழிய விடுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழீழ மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் முள்ளிவாய்க்காலுக்கு பின்பு ஏற்படவில்லை என்று கடந்த தைபொங்கல் விழாவில் வடமாகாணசபை முதலைமைசர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறியதையும் – கடந்த 29 க்கும் மே 7க்கும் இடையிலான காலத்தில் இலங்கையில் ” நிலைமை ஆய்வு” செய்து திரும்பிய ஐ.நா மன்ற அதிகாரி யுவான் மென்டிஸ் அவர்கள் பழைய நிலையே தமிழீழத்தில் இன்றும் நிலவுகிறது, என்று கூறியதையும் இந்திய அரசும் – உலகின் பிற அரசுகளும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்றும் இலங்கையில் தமிழ்க் கைதிகளை தடிகொண்டு தாக்குகிறார்கள் – கைகளில் விலங்கிட்டுத் தலைகீழாகத் தொங்கவிடுகிறார்கள் – மண்ணெண்ணெய் தோய்ந்த பொலித்தீன் பையால் முகத்தை மூடி மூச்சைத் திணறச் செய்கிறார்கள் – மிளகாய்ப் பொடியைக் கண்களில் தூவுகிறார்கள் – மர்ம உறுப்புகளைக் காயப்படுத்துகிறார்கள்.
என்கிறார் ஐ.நா மன்ற அதிகாரி யுவான் மென்டிஸ் அவர்கள்.
2009 இன் பின்பு (முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு ) தமிழீழத்தில் கடந்த 7 ஆண்டுகள் நடைபெற்றுள்ள சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும், அப்புறப்படுத்தப் படவேண்டும் என இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இன்றும் தமீழம் இரண்டு இலட்சத்துககும் அதிகமான சிங்கள இனவெறிப் படைகளின் இரும்புச் செருப்புகளின் கீழேதான் இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் ஏதிலிமுகாம்களில் இன்றுந்தான் தமிழர்கள் முடங்கிக்கிடப்பதைப் பார்க்கின்றோம்.
இளைஞர்கள் வெள்ளை வண்டிகளில் கடத்தப்படுவது இன்றும் தொடர்கிறது என்கிறார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
இனப்படுகொலை நிகழ்வான “முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு – சிங்கள இனவெறி அரசின் கீழ் தொடர்ந்தும் செத்துச் செத்து வாழந்து கொண்டிருக்கும் தமிழீழ மக்களின் நிலையை உலகுக்கு உணர்த்தக் கடந்த மாவீரர் நாளில் (2015) தண்டவாளத்தில் தலையை வைத்து விழிமூடிய இளைஞர் செந்துாரனை இவ்வேளையில் நினைவு கூறுகிறோம்.
முள்ளிவாய்க்காலின் பின்பு புனர்வாழ்வுக்கும், நல்லிணக்கத்துக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் சிங்கள அரசு முழங்கி வருகிறது. உண்மையில் இலங்கையில் நடந்துகொண்டிருப்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே ( continuation of genocide ) அன்றி வேறில்லை.
உயிரிலும் மேலான எங்கள் தாயக விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வோம் என உறுதி ஏற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான இந்நாளில் உறவு நாடாக என்றும் நாங்கள் கருதும் இந்திய அரசு எங்களுக்கு உறுதுணையாக உண்மைக்கும் அறத்துக்கும் அரணாக இருக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகின்றோம் .
-இந்திய – ஈழத் தமிழர் நட்புறவு மையம்

No comments:

Post a Comment