August 20, 2015

தேர்தல் களம் ஈழத்திலிருந்து முடக்கம் !மீண்டுமொரு அரசியல் முள்ளிவாய்க்கால்!

நாடாளுமன்ற தேர்தல் களம் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு ஈடான முடக்கநிலையினை தமிழர் தாயகத்தில் தோற்றுவித்திருக்கின்றது. தேசிய தலைவர் பிரபாகரன் தலைமையிலான
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தனது விட்டுக்கொடுக்க மறுத்த கொள்கை காரணமாக அழிக்கப்பட்டது போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் விட்டுக்கொடுக்க மறுத்த கொள்கை காரணமாக தோல்விக்குள் தள்ளப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தை இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா, அமெரிக்கா என்பவை எவ்வாறு இணைந்து முன்னெடுத்தனவோ அதே போன்றே வடகிழக்கிலும் இம்முறையும் அவை செயற்பட்டன.
யாழில் மூன்று தினங்களிற்கு மேலாக அமெரிக்க தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரிகள் தங்கியிருந்து பணியாற்றியிருந்தனர். கூட்டமைப்பின் வெற்றிக்காக சனல் -4 வெளியிட்ட செய்தி பொய்யானதென அவர்கள் வாதிட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவராலயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக விசேட பிரிவொன்றை அமைத்து கூட்டமைப்பின் வெற்றிக்கு பாடுபட்ட வேளை மறுபுறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரத்தை முடக்கவும் சேறு பூசும் முயற்சிகளையும் மேற்கொண்டது.
வென்றிருந்தவர்களுள் டக்ளஸ் தவிர்ந்த வேறு எவருமே மனச்சாட்சிப்படி வெற்றி பற்றி மகிழ்வு கொள்ளமாட்டார்களென்பது நிச்சயம். ஏனெனில் அவர்களிற்கு துரோகங்களினாலேயே தாம் வென்றோம் அல்லது வெல்ல வைக்கப்பட்டோமென்ப நன்கு தெரியும்.
அத்தகைய முயற்சிகள் எவையென்பதை பற்றி விரிவாக பேசலாம்.
முதலாவது ஊடகம்
யாழ்ப்பாணத்தை பொறுத்த வரை கூட்டமைப்பின் கட்சி பத்திரிகையாகிப்போன உதயன், யாழ்.தினக்குரல், வலம்புரி, ஈபிடிபியால் இயக்கப்படும் தினமுரசு பத்திரிகையும் டாண் தனியாhர் தொலைக்காட்சியும் , ஈபிடிபியின் டிடி தொலைக்காட்சி மற்றும் அரச ஊடகமான வானொலி ஒன்றும் குறிப்பிடத்தக்கன.
உதயன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவனினை எவ்வாறேனும் வெற்றி பெறவைப்பதென்ற நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபட்டது. தேர்தல் அறிவிப்பின் பின்னராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற வார்த்தையே உதயனின் வராது தடுத்துக்கொண்டது. ஆனால் அதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கப்பட்ட பணத்தை மட்டும் கல்லாவில் போட்டுக்கொண்டது. ஆனாலும் நிமிடத்திற்கொரு தடைவை நடுநிலைமை , பக்கச்சார்பின்மை பற்றி அதன் ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக போலி பல்கலைக்கழக அறிக்கையினை அதிலும் உத்தியோக கடிதத்தலைப்பே இல்லாத அறிக்கையினை முன்பக்க தலைப்பு செய்தியாக்கினர். கூட்டமைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்க சொல்வதாக மக்களை குழப்பமுற வைத்தனர். அவர்களது அல்லக்கைகள் முகப்புத்தகங்களில் நியாயம் தேடி பக்கம் பக்கமாக குறிப்பெழுதினர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது கூட்டமைப்பினர் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க கூட சந்தர்ப்பம் வழங்க அவர்கள் மறுதலித்தனர். தொடர்ந்தும் பொய்கைகளினை எழுதி அதனை மெய்களாக்க அவர்கள் பாடுபட்டனர்.
யாழ்.தினக்குரல் பத்திரிகை ஆரம்பத்தில் ஓரளவு நடுநிலைமையாக செயற்பட்டது. ஆனால் தேர்தல் இறுதி நாட்களில் சுமந்திரனின் முறைப்பாடுகளையடுத்து அதன் பணிப்பாளர் கேசவராஜன் இந்திய தூதுவராலயத்தாலும் ரணிலாலும் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டார். அதனையடுத்து அவசரமாக யாழ்.வருகை தந்திருந்த அவர் ஆசிரிய பீடத்தை கூட்டமைப்பினை மட்டும் முன்னிலைப்படுத்த பணித்தார். மறுதலித்த ஆசிரிய பீடத்தை சேர்ந்த சிலர் விடுமுறையில் சென்றனர். இன்னும் சிலர் அறிக்கையிடாமல் ஓய்ந்திருந்தனர்.
இந்நிலையில் சீ.வி,கே.சிவஞானம் தனது தரகு வேலையில் களமிறங்கினார். தனது உறவினரான தினக்குரல் உதவி ஆசிரியர்களுள் ஒருவனான கோபி என்றழைக்கப்படும் செல்வசசீபன் என்பவனுடன் சுமந்திரனை பேச வைக்க தினக்குரலும் ஊதுகுழலாகியது. கொழும்பைச் சேர்ந்த முகமறியாத எழுவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையினை ஏனைய ஊடககங்கள் குப்பை தொட்டியினுள் போட தினக்குரலோ தலைப்பாக்கி கொண்டாடியது.
சுமந்திரனின் சாதகத்தை வாசித்தது. போலி பெயரில் தானே கடிதங்களை எழுதி பிரசுரித்திருந்தது. ஆலமரத்தடிகளை எழுதிய தினக்குரல இறுதியில் மைலந்தனை படுகொலை வழக்கில் கஜேந்திரகுமார் வாதாடியதாக சுமந்திரன் செய்த பொய் பிரச்சாரத்தை மீள வாந்தியெடுத்தது.
அதற்கான பதிலிறுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட கஜேந்திரகுமாரிற்கு வழங்க அது மறுத்தது. தங்களை தாமே ஊடக நடுநிலைவாதிகளென பறையடிக்கும் பாரதியும், சிவகணேசனும் தமது பிழைப்பு வாதத்தை மட்டும் பார்த்துக்கொண்டனர். மூத்த சட்டத்தரணி இரத்தினவேல் கஜேந்திரகுமாரிற்கும் மைலந்தனை வழக்கிற்கும் தொடர்பில்லையெனவும் தானே கடைசி வரை வாதாடியதாக சொன்ன போதும் இவர்கள் எவருமே கண்டுகொள்ளவேயில்லை.
மறுபுறம் புலம்பெயர் இணைய ஊடகங்களில் ஒரு சில தமது நன்றி விசுவாசத்தை காட்டிக்கொள்ள போட்டிபோட்டுக்கொண்டு பறந்து திரிந்தன. சகோதர பாசத்திற்கு சிறீதரனையும் கூட்டமைப்பினையும் உயர்த்தி பிடிக்க இன்னொருவரே பழைய தோழமைகளிற்காக குரல் கொடுத்தார். மற்றையவர்கள் ஏதுமே புரியாது விரல் சூப்புவதாக வியாக்கியானமும் அளித்தவாறு விளக்கமளித்தார். பாட்டு பாடி பரிசு பெற்ற புலவர்கள் போல இவர் கேள்விகளை கேட்டே பரிசு பொட்டலங்களை பெற்றார். பொட்டலங்கள் தூதுவராலயங்களிலிருந்து அனுப்பப்பட்டதா இல்லையாவென்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment