July 16, 2015

1983 யூலைப்படுகொலை-இனப்படுகொலையின் இரத்த சாட்சியம் !- யேர்மனியில் நடைபெறும் கறுப்பு யூலை நிகழ்வுகள்!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 32 ஆண்டுகள் நிறைவாகின்றன.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வடக்கு- கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் தமிழின அழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது .
அந்த வகையில் யேர்மனியில் பல நகரங்களில் 1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில் எமது மக்களை சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருவோம் .
யேர்மனியில் பல நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 66 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்படவுள்ளது .
கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வுகளின் ஊடாக யேர்மன்- மற்றும் பல்லின மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வெற்றியை உணரக்கூடியதாக வழிசமைப்போம் .
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

No comments:

Post a Comment