September 2, 2014

நவிப்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஒருவர் தீக்குளிப்பாம்!! காவல்துறை அறிவிப்பு!

முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு - கொல்பிட்டி பகுதியில் ஒருவர் தீக்குளித்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

72 வயதான முன்னாள் இராணுவ துருப்பினர் ஒருவரே இவ்வாறு தீக்குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னதாக அவர் தீக்குளிக்க முற்பட்ட போதும், காவற்துறையினர் தடுத்ததை அடுத்து அவர் கொல்பிட்டியில் வீதி ஒன்றுக்கு அருகிலேயே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட போது, தாம் நவநீதம்பிள்ளைக்கு எதிராகவே தீக்குளித்ததாகக் கூறியதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.



தொடர்புபட்ட செய்தி

கொள்ளுப்பிட்டி - பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதியில் நபரொருவர் தீக்குளித்துள்ளார். இன்று காலை 10.15 அளவில் தனது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு அவர் தீ வைத்துள்ளார்.

பொலிஸ்  நிலையத்தில் இருந்தவர்கள், கொழும்பு மாநகரசபை தீ அணைக்கும் பிரிவினருக்கு உடனடியாக அறிவித்ததையடுத்து தண்ணீர் பௌசர்களுடன் விரைந்த தீயணைப்பு பிரிவினர்  தீயை அணைந்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும், குறித்த நபரின் உடலின் 75 வீதமான பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீ வைத்து கொண்ட நபர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்றும் தலவத்து கொடையைச்சேர்ந்தவர் என்றும், ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலேயே தீ குளித்ததாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

22 வருடங்கள் இராணுவ சேவையிலிருந்த அவர், தனக்கு தானே தீ மூட்டிகொள்வதற்கு முன்னர், மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ மற்றும் நவசம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்னவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment