September 3, 2014

ஐ.நா விசாரணைக்குழுவும் தமிழ்த்தேசிய சக்திகளின் கடமைகளும்.- சூரிய வேந்தன்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு தொடங்கிவிட்டது. இலத்திரனியல் பொறிமுறைகளினூடாக தாயகத்தில் உள்ள தமிழர்களின்
சாட்சியங்களை பெற முயற்சிக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் விசாரணைக் குழுவினை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாகவே உள்ளது. பாராளுமன்றத் தீர்மானமாகவும் அதனை எடுத்துவிட்டது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அது கணக்கெடுக்கப்படவில்லை.
விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிப்பவர்கள் குற்றவாளியாக்கப்பட்டு  தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் தற்போது தனது விசாரணைக்குழுவினை விரிவுபடுத்தி அதற்கு ஆலோசனை வழங்க சர்வதேச நிபுணர் குழுவையும் நியமித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காவிட்டாலும் விசாரணை இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனாலும் விசாரணைக்குழு இலங்கை வந்து விசாரணையை மேற்கொள்ளும் போது கிடைக்கும் வலுவானதும் அதிகளவானதுமான சாட்சியங்கள் இலங்கைக்கு வெளியே விசாரணை நடைபெறும் போது கிடைக்கும் எனக்கூறமுடியாது. சர்வதேச சக்திகள் வலுவான அழுத்தங்களை கொடுத்திருந்தால் அரசாங்கம் கீழிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம். இஸ்ரேல் அவ்வாறு கீழிறங்கியிருந்தது. சர்வதேச சமூகத்தின் மென்மையான அழுத்தம் விசாரணைக் குழுவினை நிராகரிப்பதற்கான துணிவினை இலங்கைக்கு கொடுத்திருக்கின்றது.
இது விடயத்தில் முன்னர் கூறியது போல சர்வதேசத்தின் இலக்கு மகிந்தர் அரசாங்கமே ஒழிய ஸ்ரீலங்கா அரசு அல்ல. அதனால் தொடர்ந்து மென் அழுத்தத்தினை கொடுக்கவே அது முனைகின்றது. வன்அழுத்தம் என்றால் குறைந்தபட்சம் பொருளாதார தடையினை நோக்கி சர்வதேச சமூகம் முன்னேறியிருக்கவேண்டும். அரசு பிரதிநிதிகளின் விசாக்களை தடைசெய்திருக்கவேண்டும். சர்வதேச விவகாரங்களில் நிகழ்வுகளில் இலங்கையினைப் புறக்கணித்திருக்க வேண்டும். ஜெனீவா தீர்மானம் இன அழிப்பை மையப்படுத்தியிருக்க வேண்டும். அவை எவற்றையும் செய்ய சர்வதேச ஆதிக்கசக்திகள் முன்வரவில்லை. இவையெல்லாம் ஸ்ரீலங்கா அரசினை இலக்காககொண்ட செயற்பாடுகள் என்பதால் அவற்றை முன்னெடுக்க அவர்கள் விரும்பவில்லை. அரசுடன் பகைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. எப்படியாவது ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதிலேயே அவை கவனமாக இருக்கின்றன. சீனாவின் செல்வாக்கினை அகற்றுவது தான் ஆட்சி மாற்றத்தின் நோக்கம்.
இந்த முடிவிற்கு கூட அண்மையில்தான் சர்வதேசசக்திகள்  வந்திருந்தன.  இதற்கு முன்னர்  மகிந்தரை பணிய வைப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். இரண்டு ஜெனிவாத்தீர்மானங்களும் பணிய வைக்கும் முகமாகவே கொண்டுவரப்பட்டன. அது சரிப்பட்டுவராது என்று தெரிந்த நிலையிலையே மூன்றாவது ஜெனிவாத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை  என்கின்ற முடிவி;ற்குவந்தனர். அதிலும் கூட அரசு இலக்காக இருக்கக்கூடாது என்பதற்காக வெறும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க கோரியுள்ளனர். தமிழர் இனப்படுகொலை பிரச்சனை, போர்க்குற்றங்கள், என்கின்ற சொற்பதங்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டன.
தமிழ்த்தரப்பு இது விடயத்தில் சிறிதளவிலான வலுவான அழுத்தத்தினை தானும் கொடுத்திருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும் அதற்கு தயாராக இருக்கவில்லை. மாறாக அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலிற்கு பின்னால் இழுபட்டு சென்றன.
தற்போது சர்வதேச சக்திகளுக்கு இலங்கை விசாரணைக்குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதும் சாட்சியங்களை அழிக்கவிடாது தடுப்பதும் சற்று வசதியாகிவிட்டது.  ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் போதக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட விசாரணையுடன் விசாரணை நடவடிக்கைகளை முடித்துவிடலாம். விசாரணைக்குழுவினை இலங்கைக்குள் அனுமதித்தால் மக்கள் சுதந்திரமாக அதிகளவில் சாட்சியமளிக்க முன்வருவர். இந்தச் சாட்சியங்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது  என்பதை நிரூபிப்பதாக அமைந்துவிடும்.
இந்த நிரூபிப்பு சுயநிர்ணய உரிமை, தேவை என்பதை ஏற்கவேண்டிய நிலைக்கு சர்வதேச சக்திகளை தள்ளிவிடும். அவர்கள் மிகக் கவனமாகவே இவற்றை தவிர்க்க முனைகின்றனர். ஐ.நா விசாரணைக் குழுவினை தமிழ்த்தரப்பு உச்சவகையில் பயன்படுத்த முன்வரவேண்டும்.. குறிப்பாக தமிழ்த்தரப்பு இரண்டு விடயங்களில் மிக அக்கறையாகச் செயற்படவேண்டும். ஒன்று விசாரணைக் குழுவினை எப்படியாவது இலங்கைக்கு வரவைப்பதற்கு அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது சாட்சியங்களை அதிகளவில் முன்வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வது.
அந்த வகையில் ஜெனிவாத்தீர்மானத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி  அதனை விமர்சித்த தமிழ்த் தேசி சக்திகளும் இவ் விசாரணைக்கு தமது ஆதரவு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
முதலாவது விடயத்தை பொறுத்த வரை நிலம், புலம், தமிழகம் ஆகிய மூன்று தளங்களிலிருந்தும் அழுத்தங்கள் எழவேண்டும். மோடி அரசாங்கத்திட மிருந்தும் இதற்கான அழுத்தங்கள் வந்தால் மகிந்தர் அரசாங்கம் அசையக்கூடும். ஆனால் மோடி அரசாங்கம் இதுவிடயத்தில் சர்வதேச விசாரணைகளை ஏற்பதில்லை என்கின்ற பழைய காங்கிரசின் நிலைப்பாட்டினையே எடுத்துள்ளது. 
மேற்குக் கரையில் ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க மறுத்த இஸ்ரேல் அரசாங்கம் தன்னை தாங்கிப் பிடிக்கின்ற அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்ததன் பின்னரே அசைந்து அனுமதியை வழங்கியது. இதே போல சர்வதேச மட்டத்தில் இலங்கையை தாங்கிப்பிடிக்கின்ற இந்தியாவும் வலுவான அழுத்தத்தினை கொடுத்தால் மகிந்தர் அரசாங்கம் அசையக்கூடும். மகிந்தர் பேரினவாதத்தின் கைதியாக இருப்பதனால் அவர் விரும்பினாலும் நடைமுறையில் செயற்பட முடியாத நிலை உண்டு என்பது உண்மைதான். ஆனால் 1987ல் ஜே.ஆருக்கு ஏற்பட்டது போல மீள முடியா நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மகிந்தர் அசைய முனையலாம்.
ஆனால் இந்தியா மேற்குலகின் அழுத்தங்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைப் பலப்படுத்துவதிலேயே அக்கறையாக இருப்பது போல தெரிகின்றது. வடமாகாண சபையை செயற்பட வைப்பதன் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை பலப்படுத்த அது முனைகின்றது. அது சரிவராத போது தான் மாற்று வழிகளைப் பற்றி அது யோசிக்கமுனையும். எனினும் தமிழ் நாட்டிலிருந்து வலுவான அழுத்தங்கள் எழுந்தால் காங்கிரஸ் அரசாங்கம் போல அதில் அசட்டையாக மோடி அரசாங்கம் இருக்காது.
விசாரணைக்குழு இலங்கைக்கு வருமாயின் போருக்கு பின்னர் இடம்பெறுகின்ற கட்டமைப்பு சார் இனப்படுகொலை பற்றியும் நேரடி அனுபவங்களை பெறக்கூடியதாக இருக்கும். இங்கு முன்னரும் கூறியது போல இனப்படுகொலை என்பது வெறும் உயிர்க்கொலை அல்ல. ஒரு இனத்தின் ஆதாரமாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பதை அழிப்பதும் இனப்படுகொலை தான். தற்போது இடம்பெறுகின்ற கட்டமைப்பு சார் இனப்படுகொலையிலிருந்து ஒரு தற்பாதுகாப்பு உடனடியாக தேவைப்படு கின்றது. விசாரணைக்குழுவின் வருகை ஒரு சர்வதேசப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக அமையலாம்.
இரண்டாவது சாட்சியங்களை அதிகளவில் முன்வைப்பதாகும். மேற்குலகம் முன்னர் கூறியது போல ஆட்சி மாற்றத்தை மட்டும் இலக்காக கொண்டுள்ளதனால் மட்டுப்படுத்தப்பட்ட சாட்சியங்களை விரும்பலாம். அரசாங்கம் விசாரணைக்குழுவை அனுமதிக்க மறுப்பது, சாட்சியங்கள் வழங்க முன்வருபவர்களை  எச்சரிக்கை செய்வது என்பவை எல்லாம் மேற்குலகின் இலக்கிற்கு அனுகூலமானவை தான். ஆனால் தமிழ்த்தரப்பிற்கு இது விடயத்தில் இலக்கு இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதாக இருக்கவேண்டும். இதற்கு எவ்வளவுக்கு அதிகமான சாட்;சியங்களை முன்வைக்க முடியுமோ அவ்வளவிற்கு முயற்சிக்க வேண்டும். நிலம், புலம், தமிழகத்திற்கிடையே இது விடயத்தில்  ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் கடுமையான உழைப்பும் இருந்தாலே  இதனைச் சாத்தியமாக்க முடியும்.
இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதன் மூலம் தான் மேற்குலகின் ஆட்சி மாற்றம் என்ற கனவையும் இந்தியாவின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாத்தல் என்ற கனவையும் உடைத்து தமிழர் அரசியலை அடுத்;த கட்டத்திற்கு நகர்த்தமுடியும்.
நன்றி : இது நம்தேசம்

No comments:

Post a Comment