July 9, 2015

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் 08.07.2015 இல் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் !

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் 08.07.2015 இல் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஸ்ராஸ்பூர்க் நகரபிதா, சில்ரிகைம் மாநகர சபை உதவிமேயரும், அல்சாஸ் மாநில கட்சித் தலைவி ஆகியோருடன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து
கொண்டு எமது அறவழிப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்ததுடன் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை தாமும் தொடர்ச்சியாக குரல் கொடுப்பதாகவும்; அவர்களில் பலர் தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர ஐரோப்பியப் பாரளுமன்றம் முன்நிலை வகிக்கவேண்டும் என்றும் தாமும் அவ்விடயத்தில் தமிழினத்திற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினால் நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டதும், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான வழிவகைகளை ஆய்வு செய்து தமிழீழ மக்கள்
தன் மானத்துடனும், சுய கௌரவத்துடனும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய வழிவகைகளை பெற்றுக் கொள்ள தமிழினம் தொடர்ந்து போராடவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்கள். அனைத்து தமிழ் மக்களும், தாம் வாழும் பகுதிகளில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி, தமிழரின் நிரந்தர தீர்வு தனித் தமிழீழம் என்பதை வலியுறுத்துமாறும் ஆலோசனை கூறியிருந்தனர்.
தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழின அழிப்பை நிறுத்தக்கோரி கீழ் குறிப்பிட்டுள்ள ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவும் ஐரோப்பிய பாராளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும்,
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும் எனவும்,
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை அனைத்துலகம் அங்கீகரிக்கவேண்டும் எனவும்,
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என்பதுடன் புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும்
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும் என்பதனால் அவர்கள் மீதான தடையை நீக்கி தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வான தமிழீழத்தைப் பெற்றுத் தரக் கோரியும்,
ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்கள் மிகவும் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர் மாவீரர்களின் அர்ப்பணிப்பகளும், தமிழ் மக்களின் போராட்டங்களுமே விடுதலையை வென்றெடுக்கும் என்று கவனயீர்ப்பில் கலந்து கொண்டிருந்த மக்கள் உறுதியாகக் கூறியிருந்தார்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வினை நிறைவுசெய்தார்கள்.



No comments:

Post a Comment