May 7, 2015

மக்கள் தலைவனின் அச்சாணி உண்மையும், நேர்மையுமாகும் - மாறன்!

இது தான் உலகத்தலைவர்களிடம் இருக்க வேண்டிய உண்மையான பண்பு இது  தமிழீழத்தில்  தந்தை செல்வாவிடமும், தலைவர் பிரபாகரனிடமும் அப்படியே இருந்தது. மக்கள் நலனில் இருந்தே அனைத்தையும் செய்தார்கள்..பல துன்பங்களை எதிர்கொண்டபோதும் அக் கொள்கைகளில் இருந்து சிறிதளவும் விலகவே இல்லை. இறுதிவரை அம்  மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். இந் நோக்கில்  இன்றைய
தலைவர்களானசம்பந்தனையோ அல்லது மாவை சேனாதிராஜாவையோ பார்க்க முடியுமா?
இதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2009க்கு பின் இவர்களின் நடவடிக்கைளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. துரோகிகள் எடுத்த போன்றே முடிவுகளை எடுக்கத் தொடங்கினார்கள். சந்தேகக் கண் கொண்டே இவர்களைப் பார்க்கவேண்டி இருந்தது.
இந் நோக்கில் இவர்களின் நடவடிக்கைகளை ஆராய்வோம்
1)      தேர்தலில் எம் மக்களைக் கொன்றொழித்த பங்காளியான மைத்திரிபாலவை ஆதரித்து வெற்றி பெறச் செய்தது.
2)      மேற்கூறிய நடவடிக்கை மூலம் தமிழ்மக்களுக்கு ஆதரவான ஐ நா மன்றத்தின் சர்வதேச விசாரனையை ஒத்திவைக்கச் செய்து சிங்கள அரசைக் காப்பற்றியது.
3)      சிங்களத்தின் சுதந்திரதின விழாவான இலங்கை சுதந்திரதின விழாவில் தலைவர் சம்பந்தன் பங்குபற்றியது.
4)      இராசபக்சவின் சர்வாதிகாரத்தையும், தலைவர் பிரபாகரனின் சர்வாதிகாரத்தையும் ஒரே தட்டில் வைத்து சம்பந்தன் ஐயா   பேசியது.
5)      சிங்கள அரசுடன் சேர்ந்து மாவட்ட மட்டத்தில் நல்லெண்ணக் குழுக்களை அமைத்து தமிழ் மக்களுக்கான சர்வதேச விசாரணையைக் குழப்ப முயற்சிப்பது
6)      தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை தமிழினத்தின் மாபெரும் கொலையாளியான சந்திரிகா பண்டாரநாயாக்காவை அழைத்துப் பேச வைத்தது
7)      வடமாகாண முதலமைச்சரை பொய்யன் எனக் கூறிய ரணில் விக்கிரமசிங்காவை இதுவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கண்டிக்காதது.
இப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழ் மக்களின் நலனுக்கும், சுயமரியாதைக்கும் எதிராகவே இருக்கிறது.
தந்தை செல்வாவோடு இருந்து வளர்ந்த இவர்கள் தடம் மாறலாமா?
தந்தை செல்வாவின் கொள்கையிலிருந்து மாறிச் செல்லலாமா  ? தமிழீழத்தைப் பிரகடனப் படுத்தி அதை அங்கீகாரமாக வைத்து1977ல்தேர்தலில் வெற்றி பெற்ற இவர்கள் இன்று அரை குறைத் தீர்வுக்குச் செல்லலாமா ?
தந்தை செல்வா, தலைவர் பொன்னம்பலம், தலைவர் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்த கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி, அதன் நீட்சிதான் தலைவர் பிரபாகரனின் ஆசியோடு உருவான தமிழ் தேசியக்கூட்டமைப்பு. இந்த நம்பிக்கையில் தான் இன்றும் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இன்று இவர்கள் தடம் மாறி, சோரம் போன நிலையில் மக்களை ஏமாற்றுவது சரியானதா ?
இப்படி எண்ணற்ற துரோகங்களை 2009க்குப்பின்தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் செய்து வருகிறார்.
அவருக்கு குடை பிடிப்பவராக மற்றத் தலைவரான மாவை சேனாதிராஜா இருந்து வருகிறார்.
முதலாவது விடயத்தைப் பார்ப்போம்
1921ல் இலங்கை சுதந்திரத்திற்காக முதல் குரல்கொடுத்ததமிழ் தலவரான சேர் பொன் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களைப் புறக்கணிக்கிறார்கள் எனக் காரணம் காட்டி இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து விலகி தமிழ் மக்களுக்கென தனியாக தமிழர்தேசிய மகா சபை என்ற அரசியல் கட்சியைதொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை ஒரு சிறு துரும்பையாவது சிங்களத்தலைவர்கள்  தமிழ் மக்களுக்கு வழங்கினார்களா ? அது தான் போகட்டும் தமிழ் மக்களை உயிரோடாவது வாழவிட்டார்களா ?அன்றிலிருந்து இன்றுவரை எத்தனை தடவை எம் மக்களைப் படுகொலை செய்தார்கள். இவை அனைத்தும் இவர்களுக்கு தெரியாத விடயங்களா ?
எதை நம்பி ஐயா மீண்டும் அடிமைத்தனமான இணக்க அரசியலுக்கு புறப்பபட்டிடீர்கள் ?
சர்வதேச விசாரனை அறிக்கை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என நீங்களும்  அறிக்கை விட்டீர்களே..... நடந்ததா ஐயா ? இது நடக்காது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதுக்காக சிங்களம் உங்களோடு கோபித்துக்கொள்ளா  து என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கு என்பதும்  அவர்களுக்கும்  நன்றாகவே தெரியும்.
இதன் காரணகார்த்தாவே நீங்கள் தான் என்பது உங்களுக்ககே தெரியும். அப்படியிருந்தும்   இப்படி பொய்யான அறிக்கையை நீங்கள் விடலாமா ? “ களவு கொடுத்தவனோடு சேர்ந்து கள்ளனும் கோழியைத் தேடினானாம் ” இக் கிராமிய பழமொழிக்கும் உங்களின் நடவடிக்கைக்கும் ஏதாவது வேறு பாடு உண்டா ஐயா ?  
1972ம் ஆண்டு தந்தை செல்வா யாழ் நாவலர் மண்டபத்தில் பெரும் திரளான மக்கள் மத்தியில் இலங்கையின் யாப்பை எரித்ததும், அன்றிலிருந்து எந்தவொரு சுதந்திர தின விழாவிலும் தமிழ் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை  என்பது உங்களுக்குத் தெரியாததா ? சுமந்திரனைப் பற்றி நாம் கவலைப் படத்தேவையில்லை. அவர் இடையிலையே வந்த ஒருவர் உரிமைப் போராட்டங்களில்  கலந்துகொள்ளாத ஒருவர் அவர் அப்படி நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை.
ஐயா உங்களை அப்படிப் பார்க்கமுடியுமா ? 40வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவோடும், தலைவர் பிரபாகரனோடும் சேர்ந்து அரசியல் நடத்தியவரல்லாவா நீங்கள்.....
இராசபக்சவின் சர்வாதிகாரத்தையும் பிரபாகரனின் சர்வாதிகாரத்தையும் ஒன்றாகவா நீங்கள் பார்க்கிறீர்கள் ? சிங்களத் தலைவர்கள் எந்தக்காலத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளையோ, போராட்டங்களையோ ஏற்றார்கள் ? சொல்லமுடியுமா ?தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டடங்கள் அனைத்தையும் சர்வதிகாரம் கொண்டு அடக்கவில்லையா ஐயா ? 1958ல் என்னத்திற்காக தமிழ் மக்களைப் படுகொலை செய்தார்கள். அதுவாவது உங்களுக்குத் தெரியுமா ஐயா ; எதுவும் முடியாத நிலையில் தான் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார் என்பதும்,  தந்தை செல்வாவின் தீர்மானத்தைத்தான் அவர் அமுல்நாடாத்தினார். என்பதும் தங்களுக்குத் தெரியாத விடயங்களா ?
சர்வதிகாரத்தைப் பற்றிய வரையறை உங்களுக்குத் தெரியாத தா ? சோவியத் யூனியன், சீனா, நிக்கிரகுவா ஜனநாயகரீதியாகவா விடுதலையடைந்தன ? அரச சர்வதிகாரத்தின் உச்சத்தில் தான் பாதிக்கப்பட்ட மக்கள் சர்வாதிகாரத்தை கையில் எடுகிறார்கள்   என்பதுதான் வரலாறு. 40 வருடகால அரசியல் முதிர்ச்சி பெற்ற உங்களுக்கு இது தெரியாமலா உள்ளது.
2009வரை பிராபகரனோடு சேர்ந்து அரசியல் நடத்தும் போது    அது உங்களுக்கு ஜனநாயகமாகத் தெரிந்தது, இப்போது சர்வதிகாரமாகத் தெரிகிறதா ? உண்மையில் அரசியல் என்பது ஜனநாயகரீதியாகத்தான் செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளும் அப்படித்தான் செய்தார்கள். நீங்களும் அதையேதான் செய்தீர்கள். ஆனால் 2009க்குப் பின் உங்களுக்கு சர்வதிகாரமாகத் தெரிவதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதைவிட ஆச்சரியம் ஒடுக்குமுறையாளனையும் விடுதலைப்போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தது.
உங்களின் காலத்தில் உலகம் எம் மக்களைத் திரும்பிப் பார்த்ததா ஐயா ? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்  ஐயா.
இன்று தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பைப் பற்றி உலகெல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போது, இதற்கு ஆதரவாக தமிழக அரசு  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய  நிலையிலும்  ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக பின்னால் திரியலாமா ? கிழக்குத்திமோர், சூடானையாவது ஒரு முறை திரும்பிப்பாருங்கள். அவர்கள் அரை குறைத் தீர்வுக்காக பின்னால் திரிந்தார்களா ? அம் மக்களுக்காக  தங்களது கொள்கையில் உறுதியாக நின்று வெற்றி பெற்றார்கள்.
இன்று எமது பக்கம் சர்வதேசம் சாதகமாக இருக்கும் நிலையில் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு ஒட்டுமொத்த எமது வீரம்செறிந்த இனத்தைக் காட்டிக்கொடுக்கலாமா ? மாவீரர்களினதும், மக்களின் தியாகத்தாலும் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பில் இருந்துகொண்டு இப்படிச் செய்யலாமா ?
சிங்கள அரசுடன் சேர்ந்து நல்லெண்ணக்குழுக்களை அமைக்கும் தேவை இப்போது ஏன் வந்தது ? இதன் மூலம் நீங்கள் செய்ய நினைப்பது என்ன ? இது வரை நீங்கள் அரசோடு சேர்ந்து செய்தவைகளின் பட்டியல்களை ஒரு முறை பகிரங்கமாக வெளியிடுங்கள். உங்களைத் தெரிவுசெய்த மக்கள் பார்க்கட்டும்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக வெளிவர இருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையை மீண்டும் குழப்புவதற்கு சிங்கள அரசோடு சேர்ந்து செய்யும் சதியாகவே இதை நாம் பார்க்கவேண்டியுள்ளது.
இந் நோக்கிற்காகத்தான் பெரும் தமிழினக்கொலையாளியான சந்திரிகாவை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்த அழைத்தீர்கள், . தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இப்போது நல்ல நிலையில் வாழ்கிறோம் என உலகுக்கு காட்டி கிடைக்கிற சில  நன்மைகளையும் இல்லாமல் செய்கிறீர்களே; துரோகிகள் போல் நீங்களும் விலை போய் விட்டீர்களா ? எனச் எமக்குச் சந்தேகமாக உள்ளது.
தமிழ் மக்கள் எப்போதும் விலை போகமாட்டார்கள். அதனால் தான் தங்களின் உயிர்களையே விலையாகக் கொடுத்தார்கள். அத் தியாகத்தில் உருவான அமைப்பு என்பதால் தான் உங்களையே தெரிவுசெய்தார்கள்.  தயவு செய்து உங்களின் வசதி வாய்ப்புக்காக எமது இனத்தைக் காட்டிக்கொடுத்து விடாதீர்கள் ஐயா......
மாகாணசபையிலும் அதி கூடிய விருப்புவாக்குகளைப் பெற்ற ஒரு முதலமைச்சர்தான் திரு விக்கினேஸ்வரன் அவர்கள்.  அப்படி மதிப்பு வாய்ந்த உங்களில் ஒருவரை,  ஒரு அதி உயர் பதவியான பிரதமர் பதவியில் உள்ள சிங்களத் தலைவன்  ஒருவன்  பொய்யன் எனக் கூறும்போது, எதுவுமே பேசாமல் மௌனமாக இருப்பது அவமானமாக இல்லையா ? இது உங்கள் அடிமைத்தனத்தின் வெளிப்பாடா ? அல்லது பயத்தின்பாலா ? எதுவாக இருந்தாலும் மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள்.
பெரு முயற்சிகளை எடுத்து புலம்பெயர்சமூகம் சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு  என்ற நிலலைக்கு கொண்டுவருவதற்கு கடும் பிராயத்தனம் செய்துகொண்டிருக்கும் வேளையில் தயவுசெய்து இதைக் கெடுத்து விடாதீர்கள் ஐயா. கரம் கூப்பி வேண்டுகிறோம்.
-மாறன்-

No comments:

Post a Comment