September 2, 2016

முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைமுகாமிற்கு இடமில்லை! இன்றைய கலந்துரையாடலில் எடுத்துரைப்பு!

இறுதிப்போர்  நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.
கரைத்துறைப்பற்று பிரேதச செயலகத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் இந்த விடயம் எடுரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தேவைக்காக முள்ளிவாய்க்கால் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் பொருட்டு காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர், பிற் போடப்பட்டது. இதனையடுத் தே கரைத்துறைப்பற்று பிரேதச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் பிரதேச மக்கள் ஆகியோரிடையே இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதியிலிருந்து கடற்படை முகாம் அகற்றப்படுவதுடன் அதனை மக்களிடம் உடனடியாக கையளிக்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கிழக்கில் தென்னிலங்கையை சேர்ந்த நிமால் குரே என்பவருக்கு ஐம்பது ஏக்கர் காணி உள்ளதாகவும் அவர் அதனை விற்பனை செய்யவுள்ளதாகவும் அதனை கடற்படையினர் வாங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் அப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பது மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

நிமால் குரே என்பவருக்கு சொந்தமான காணியின் பெறுமதியை தெரிவிக்குமாறும் அக் காணியை வாங்கி பல்கலைக்கழகம் அமைத்தல் போன்ற நற்செயலில் ஈடுபடவுள்ளதாகவும் சிவமோகன் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறெனினும் கடற்படையினர் அங்கு நிலைகொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

முள்ளிவாய்க்காலுடன் மிகவும் அன்போடும் நெருக்கத்துடனும் பழகிய தென்னிலங்கை நபர் அக் காணியை தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக அவர்களுக்கே விற்பனை செய்வதில் தனக்குச் சிக்கல் இல்லை என்று தெரிவித்தார். காணி சுவீகரித்தலை கைவிட்டு அப் பகுதியினை மக்களிடம் வழங்க ஏற்பாடு செய்வதாக இதன்போது அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை மகிந்த ராஜபக்சவின் காலத்தில் காணிசுவீகரிப்பு நடந்திருந்தால் அதனை வேறு விதமாக அணுகியிருப்போம் என்றும் ஆட்சி மாற்றத்திற்கு பங்களித்ததன் மூலம் தமது காணிகள் தமக்கு கிடைக்கும் என்று நம்பியிருந்ததாகவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பேசிய சிறிகாந்த் இக் காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் குறித்த கடற்படைமுகாம் அகற்றப்பட்டு, தமது காணிகள் கிடைக்கும் நம்பிக்கையை குறித்த கலந்துரையாடல் ஏற்படுத்தியுள்ளதாகவும் பான்கீ மூனின் வருகையின்போது அரசு மக்களை அமைதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாக இது அமையக்கூடாது என்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment