January 1, 2015

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆங்கிலப்புத்தாண்டு செய்தி!

காலம் நாட்களை விழுங்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது தொடர்ந்தும் ஒருபுறத்தே இராணுவ ஆக்கிரமிப்பும் மறுபுறத்தே திட்டமிட்ட சிங்கள
குடியேற்றமுமாய் எம் தாய்மண் கபளீகரம் செய்யப்படுகிறது. இதை தடுப்பதுதான் இன்று தாயகத்தமிழருக்கும் புலத்துத்தமிழருக்கும் முன்னால் உள்ள தார்மீகப் பணியும் ஆகிறது.
எமது விடுதலைப் போராட்டத்தில் பரந்துபட்ட பொதுமக்கள் இணைந்து கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டம் என்ற உயர்நிலை அரசியற் பரிமாணம் பெறுகிறது. இதுவே எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவுகட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரைவில் நிறைவு பெறச்செய்யும்.
மாறி மாறி ஆண்ட பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் இனத்தின் தன்னாட்சி உரிமைகளை நசுக்கியே வந்திருக்கின்றன இச்சிங்கள அரசுகள் தமிழ்மக்களுக்கான விடுதலை வாழ்வை எச்சந்தர்ப்பத்திலும் வழங்க நினைத்ததும் இல்லை வழங்கப்போவதும் இல்லை இந்த அடிப்படை உண்மைகளை புரிந்துகொண்டு நாம் செயற்படவேண்டும்.
முள்ளிவாய்கால் இன அழிப்பிற்கு பின்பு உலகத்தமிழினம் விடுதலைக்குரல் இழந்து வீட்டுக்குள் முடங்கிவிடுவார்கள் என்று விடுதலைக்கு எதிரான சக்திகள் நினைத்தன, மீண்டும் முளைவிடமுடியா மூலோபாயங்களை சிங்கள அரச இயந்திரங்களும் அதன் மேற்குலக ஆதரவு சக்திகளும் நகர்த்தின, ஆனால் எமது மக்கள் போராட்டம் உலகப்பரப்பில் உயிர்ப்போடு மீண்டெழுந்தது என்றால் அது தேசத்தின் விடிவிற்காய் உழைக்கும் பணியாளர்களினதும் மக்களினதும் நெறிபுரளாக்கொள்கையும் மாவீரர்களின் ஆத்ம ஆசியுமே காரணமெனலாம்.
மலர இருக்கும் புத்தாண்டிலும் இதே பற்றுறுதியோடு பயணிப்போம் மாவீரர்களின் கனவை சுமந்து இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான குரலை தொடர்ந்து உலக அரங்கில் எழுப்புவோம் ஒரே பலத்தோடு விடுதலைத்தேரின் வடம் பிடிப்போம் இவ் ஆங்கிலப்புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியை விதைக்கட்டும்.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே

No comments:

Post a Comment