September 2, 2016

ஐ.நா பொதுச்செயலர் இன்று யாழ்.வருகிறார்! - மூன்று இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு யாழ்.பொது நூலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும். இதன்போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறவிருப்பதுடன், அரசியலமைப்புத் திருத்த செயற்பாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பினருடனான சந்திப்பை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும், அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களைத் தொடர்ந்து வலி.வடக்குப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, காணாமல் போனோர் சங்கம், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆயியோரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ். பொது நூலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

அதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள எட்டு மாவட்டங்களின் காணாமல் போனோர் சங்கங்கள் ஒன்றிணைந்து யாழ். துரையப்பா மைதானத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளன.

அத்துடன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment