June 24, 2014

பிரான்சின் புறநகர் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான வில்நியூவ் சென் ஜோர்ஜ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர் களிடையேயான இல்ல மெய்வல்லுனர் போட்டி தமிழீழ தேசியக்கொடிஏற்றலுடன் தொடங்கி நடைபெற்றுள்ளது .
22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவ் சென்ஜோர்ஜ நகர மைதானத்தில் காலை 10.00 மணிக்கு பொதுச்சுடரினை தமிழ்சங்க உறுப்பினர் ஏற்றி வைக்க பிரெஞ்சு தேசியக்கொடியினை சங்கத் தலைவர் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சங்கத்தின் கொடியை தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் அவர்கள் ஏற்றி வைக்க எல்லாளன், சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்புக்களைச் செய்திருந்தனர்.
அவர்களின் அணிவகுப்பு மரியாதையை சங்கத் தலைவர், பாடசாலை நிர்வாகி மற்றும் அன்றைய போட்டியின் விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் அவர்கள் தனது ஆரம்ப உரையை வழங்கி ஆசீர்வதித்து போட்டிகளை திறம் படச் செய்ய வேண்டும் என்றும் கல்வியிலும் கலையிலும் எமது குழந்தைகள் சிறந்து விளங்குவது போன்று விளையாட்டிலும் தலைசிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒட்டப்போட்டிகள், குழந்தைகள் பெரியவர்களுக்கான போட்டிகள், பார்வையாளர்களுக்கான போட்டிகள், உதைபந்தாட்டம், விநோதவுடை என பல போட்டிகள் நடாத்தப்பட்டன.
எல்லாளன் (மஞ்சள்) சங்கிலியன் ( சிகப்பு ) நிறங்களைக் கொண்ட சின்னஞ்சிறுவர், சிறுமிகள் இசைவும் அசைவும் செய்து பலத்த கரவொலிகளைப் பெற்றிருந்தனர். பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும், குழந்தைகள், பெரியவர்களுக்கும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், போட்டி நடுவர்கள், ஆசிரியர்களால், பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். 12 வது தடவையாக நடாத்தப்பட்ட இவ் இல்ல விளையாட்டுப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் தனது முயற்ச்சியை மேன்மேலும் முன்னேற்ற கரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்த அதேவேளை இவ்வீர வீராங்கனைகள் தனியே தங்களுக்குள்ளேயே திறமைகளை முடக்கிக்கொள்ளாது புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது சிறார்களின் விளையாட்டுத்திறனை முன்னோக்கிக் கொண்டு போகும் வகையில் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தாலும், தமிழர் விளையாட்டுத்துறையாலும், முன்னெடுக்கும் அனைத்து உடல்திறன் போட்டிகளில் பங்கு கொள்ள வைக்க வேண்டிய பொறுப்பு தமிழச்சங்கத்திற்கும், தமிழ்ச்சோலைக்கும், இருக்க வேண்டிய பெரும் கடப்படாகும் இதனை கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் அதனை அவர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெற்றோர்கள் மற்றும் பார்வையார்கள் மத்தியில் அன்றைய நாளில் இருந்த மனோ நிலையாக இருந்தது. போட்டிகள் யாவும் கொடியிறக்கலுடன் இரவு 9.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment