August 27, 2016

யாழ். ஒற்றுமையினை சீரழிக்காதீர்கள் அரசியல் வாதிகளே!

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும், இன்று யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும் யாழ். கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான கூட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் இன்று முற்பகல் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எட்டு அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். ஐந்து சந்திக்கு அருகாமையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஏற்பாட்டில் இன்று யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும் யாழ். கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான கூட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கூட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், இந்த கூட்டங்களால் யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேற்றப்படாத முஸ்லிம் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

எமக்கு கோழிக்குஞ்சுகள் தான் இந்தக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்.முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக எந்த விதமான வேலைத் திட்டங்களும் இங்கு நடைப்பெறவில்லை.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் எற்பாடு செய்த கூட்டம் எமக்குத் தேவையில்லை, மீள்குடியேற்றம் தான் எமக்குத் தேவை எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.

இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களே! யாழ். முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்கப் பரிந்துரை செய்யுங்கள்" "யாழ். கிளிநொச்சி முஸ்லீம் மீள்குடியேற்றத்திற்கான இன்றைய அமர்வு அரசியல் பின்புலம் உள்ளது ஆகவே பகிஸ்கரிப்போம்"

"மீள்குடியேற்றம் என்பது எமது வாழ்க்கையில் வீழ் குடியேற்றமாக மாறிவிட்டது! ", "எமக்கு கோழிக்குஞ்சுகள் தேவையில்லை...நிரந்தர கெளரவமான மீள்குடியேறுதலே தேவை" அரசியல் வாதிகளே!

யாழ். முஸ்லிம்களின் ஒற்றுமையினைச் சீரழிக்காதீர்கள்", "மீள்குடியேற்றத்தை அரசியலாக்காதே", "அரசியலுக்காகப் பாமர முஸ்லிம்களைப் பலி கொடுக்காதே" , “வேண்டும் வேண்டும் ஆணைக்குழு வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு பாதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment