June 1, 2016

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரணி!

கால் நூற்றாண்டை கடந்து தனிமைச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர விடுதலை கோரி
ஜூன் 11ம் தேதி வேலூர் சிறை வளாகத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் வரை அற்புதம்மாள் தலைமையில் இருசக்கர பேரணி நடைபெறுகிறது.இது தொடர்பாக ஏழுதமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பாக அற்புதம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "11-06-1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் எதிர் வரும் 11-06-2016 அன்று கால் நூற்றாண்டை (25 வருடங்கள்) சிறையில் கடக்கின்றார்.

தமிழகத்தில் இப்படி ஒரு சிறை தண்டனையை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வரை தவிர்த்து யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

 
இந்த கால் நூற்றாண்டில் ஒரு நாள்கூட பரோலில் வெளிவந்தது இல்லை என்பது துயரத்தின் உச்சமென்பதை நாம் அறிவோம். மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களோடு இன்று பேரறிவாளன் வாழ்ந்து வருகின்றார். சிறைபட்ட நாள் முதல் தான் ஒரு நிரபராதி என்பதை சிறைக்குள் இருந்து தொடர்ந்து நீதிக்காக நெடும்பயணம் தொடர்கின்றனர்.

அதற்கான ஆதாரங்கள் பல வெளிவந்ததும் அனைவரும் அறிந்ததே.தான் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்ட நிலையில் அந்த வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியே பிழை செய்ததை ஒப்புக்கொண்ட பின்பும் சிறைபட்டிருப்பது நீதியின் மீதான நம்பிக்கையை தளரச் செய்கிறது.

இருப்பினும் தொடர்ந்து நீதிக்கான போராட்டமாக தொடரும் அதே வேளையில் தமிழக முதல்வரின் விடுதலை அறிவிப்பும் அதைப் போலவே சட்டப்போராட்டத்தில் முழுமையான தனது பங்களிப்பை தொடர்ந்து நல்கி வரும் இத்தருணத்தில் வரும் ஜூன் 11ம் தேதி 25 ஆண்டுகள் நிறைவாகும் அத்தினத்தில் தொடர்ந்து விடுதலையை முன்னெடுக்கும் தமிழக அரசுக்கு மேலும் வழு சேர்க்கும் முகமாக வேலூர் சிறை வாசலில் காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் சென்று அற்புதம்மாள் தலைமையில் இருசக்கர பேரணியாக வந்து மனு அளிக்க உள்ளோம்.

இந்த பேரணியில் தமிழகத்தில் உள்ள மனிதாபிமானிகள் அனைவரும் கலந்து பேராதரவினை நல்கிட ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment