கடந்தகாலங்களில் இடம்பெற்ற போர்க்குற்றத்தினை நிரூபிப்பதற்கான எங்களுடைய பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்ற அதேவேளை சிறந்தவொரு அரசியல் தீர்வினைப் பெறுவதற்காகவும் நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஇவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் மக்கள் தமித் தேசியத்தின் பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் கொண்டிருந்த பற்றினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவுமே பெருவாரியான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் போடப்பட்டன.
அதன் காரணமாக நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றோம். தற்போது இந்தப் பாராளுமன்றப் பலத்தை வைத்துக் கொண்டு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விடயங்களை முன்நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இலங்கையின் போர் முடிந்ததன் பிற்பாடு இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்ததை அன்றைய ஜனாதிபதி மறுத்ததில் இருந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகத் தான் இருந்தது.
மேலும் அந்த நிலையில் எமது நிலையை ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் வேறு அமைப்புகளுக்கோ கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நேரத்தில் தான் எமது மதிநுட்பமான குழு அமெரிக்கா மற்றும் பல நாடுகளை அனுகிய போது அங்கு அனைத்தினாலும் ஒரு விடயம் கூறப்பட்டது ஆட்சியில் இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பது போன்றது என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் போர்க்குற்றம் தொடர்பாக ஒரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே சர்வதேச சட்டத்தில் இடம் இருக்கின்றது. ஆனால் ஒரு நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஏற்பாடுகள் கிடையாது என்று தெரிவித்தன.
எனினும் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய முயற்சியால் சர்வதேச நாடுகள் எம்முடன் கைகோர்த்து இதனை வேறு ஒரு முறையில் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமையத்தில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எமது விடயம் கையாளப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து தான் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் மெல்ல மெல்ல எழுந்தன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பல வகைகளில் உதவிய புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாகத் தான் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றமும் அதனூடான விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
No comments:
Post a Comment