May 14, 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தமிழ் சிவில் சமுக அமையம் அழைப்பு!

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கான அழைப்பினை தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ளது. 

இதயம் நிறைந்த வேதனைகளோடு தமிழ் மக்களாகிய நாம் மே 18ஐ அண்மித்து வரும் இவ்வேளையில் உணர்வுபூர்வமாக இத்தினத்தை அனுசரிக்க தமிழ் சிவில் சமூக அமையம் அனைவரையும் வேண்டி நிற்கிறது என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத்தீவு காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல் இன்றுவரை தொடரும் தமிழ் மக்களுக்கெதிரான தொடர்ச்சியான இனப்படுகொலை நடவடிக்கைகளின் அதிமூர்க்கமான ஒரு காலகட்டம் கிழக்கே 2006இல் மாவிலாறில் ஆரம்பித்து வடக்கே 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த இறுதிப் போரின் காலமாகும்.
இக்காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இழப்பு தனிநபர்களாக இறந்தவர்களது உறவினர் நண்பர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் ஒட்டுமொத்தமாக தமிழர்களாக எமது கூட்டிருப்பின் மீதும் ஆறாத மனவடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இந்நிலையில் எமது தனிமனித மற்றும் கூட்டுக் குணப்படுத்தலுக்கும் ஒரு தேசமாக எமக்குரிய சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான எமது பயணத்தின் தொடர்ச்சிக்கும் நாம் எமது இழப்புகளை நினைவுகூர்வதும் நினைவுகளைப் தொடர்ச்சியாக பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எமது கடமையும் உரிமையுமாகும்.
இதயம் நிறைந்த வேதனைகளோடு தமிழ்மக்களாகிய நாம் மே 18ஐ அண்மித்து வரும் இவ்வேளையில் உணர்வுபூர்வமாக இத்தினத்தை அனுசரிக்க தமிழ் சிவில் சமூக அமையம் அனைவரையும் வேண்டி நிற்கிறது. பொருள்பொதிந்த ஒரு நினைவுகூரலை உறுதிப்படுத்த பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறோம்.
• அஞ்சலிநிகழ்வுகள் கூட்டு ஒழுங்கு செய்யப்படும் இடங்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
• அன்றைய தினத்தில் அனைத்து ஆலயங்களிலும் உணர்வுபூர்வமான நினைவேந்தல் வழிபாடுகளை மேற்கொள்ளல்.
• பாடசாலைகளில் காலை ஒன்றுகூடலின்போது நினவுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தலும் அஞ்சலி உரை ஒன்றை நிகழ்த்தலும்.
• அரச அரசு சார்பற்ற நிறுவனங்களில் பொருத்தமான நேரத்தில் ஒன்றுகூடி நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்துதல்.
• தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட திணைக்களங்களில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனையை வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் விடுக்கவேண்டும்.
• சனசமூக நிலையங்கள், இளைஞர்கழகங்கள் போன்ற பொது அமைப்புக்கள் அன்றைய தினத்தில் மாலைப்பொழுதில் கிராமமட்ட அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும்.
• மரணித்தவர்களுக்கான நினைவுச்சின்னம் அமைப்பற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்சொல்லப்பட்டவை போன்ற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உணர்வு பூர்வமான நினைவேந்தல் ஒன்றை மேற்கொள்ள அனைத்து தமிழ்மக்களையும் அழைத்து நிற்கிறோம்.” என்றுள்ளது.

No comments:

Post a Comment