July 11, 2015

வவுனியா, குட்செட் வீதியில் நகைக் கடை ஒன்றின் உரிமையாளர் வீட்டில் திருட்டு!

வவுனியா, குட்செட் வீதியில் நகைக் கடை ஒன்றின் உரிமையாளர் வீட்டில் 27 பவுண் நகைகள் 08-07-2015 இரவு  திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்  தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா, குட்செட் வீதியில் உள்ள நஜிந்தா ஜீவல்லரி உரிமையாளரின் வீட்டின் சமையலறை பகுதியில் உள்ள யன்னல் ஒன்றினை கழற்றி உள் நுழைந்த திருடர்கள் அறை ஒன்றில் இருந்த அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம், தோடு உள்ளிட்ட சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் விடியற்காலை எழுந்து பார்த்த போதே தமது படுகை அறையில் உள்ள அலுமாரியில் இருந்த நகைகள் திருட்டு போயிருந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து  மோப்ப நாயின் துணையுடன் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த வீட்டில் இருந்த உரிமையாளர் மற்றும் மனைவி ஆகியோருக்கு தமது அறையில் திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் எதுவுமே தெரியாது எனவும் தமக்கு திருட வந்தவர்கள் மயக்க மருந்து ஏதாவது தெளித்திருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment