March 7, 2015

சிக்கலில் சம்பூர் அனல்நிலையம்..!

இலங்கையில் இரண்டாவது அனல் மின் நிலையம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பிரதேசத்தில் அமையவுள்ளது. இது இலங்கையில் அமைக்கபடவுள்ள இறுதி அனல் மின் நிலையம் என்றும் குறித்துக் காட்டப்படுகின்றது.

சம்பூர் அனல் மின் நிலையத்தை இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தாபனமும் National Thermal Power Corporation (NTPC) இணைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இலங்கையில் சனத்தொகை பெருக்கத்திற்கேற்ப மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வந்த போது 1985ஆம் ஆண்டளவில் அனல் மின்சார உற்பத்தி நிலையத்தை நிறுவுதல் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டது. என்றபோதும் அத்தீர்மானத்திற்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்ததினால் அது செயலுருப்பெறவில்லை.
இருந்தபோதும் இலங்கையில் முதலாவது அனல் மின்சார நிலையம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியோடு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச் சோலை பிரதேசத்தில் 2006 ஆண்டு அமைக்கப்பட்டது.
இதேவேளை, சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையமொன்றை அமைப்பது சம்பந்தமாக 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெற்றது.
அப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து இடைக்கிடையே சம்பூர் அனல் மின்சார நிலையம் சம்பந்தமாக பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தபோதும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கான முனைப்பான எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்ற போதும் அவ்வொப்பந்தம் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்த பின்பு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதியன்று மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் இலங்கை சார்பாக அப்போது மின்சார சபையின் தவைராக இருந்த பேராசிரியர் விமல தர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டத்தாபனத்தின் தலைவர் அருப்ரோய் சௌத்திரியும் கைச்சாத்திட்டனர்.
இதன் மூலம் இருநாட்டு நிறுவனங்களும் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிபெற்ற கூட்டு கம்பனியாக திருகோணமலை பவர் கம்பெனி லிமிடெட் (Trincomalee Power Company Limited) நிறுவப்பட்டது.
அதன் பிறகு 2013ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியாக கைச்சாத்திடப்பட்டதோடு திட்டம் நடைமுறைப்படுத்தல்,காணிக்குத்தகை, நிலக்கரி விநியோகம்,இலங்கை முதலீட்டு சபையுடனான ஒப்பந்தம் உள்ளிட்ட மொத்தம் எட்டு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.
இந்த ஒப்பந்தப்பந்தங்களின் படி 512 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படும் சம்பூர் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் எதிர்காலத்தில் அவ்வளவை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 500 எக்கர் காணி வேறுபடுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளது.
அனல் மின்சார நிர்மாணப் பணிகளை 2017ஆம் ஆண்டிற்குள் துரிதமாக பூhத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை விரைவாக முன்னெடுத்துச் செல்வது சம்பந்தமாக 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ ஆலோசனையும் வழங்கியிருந்தார். அதன் பின்பு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் கடந்த மாதம் இறுதியிலேதான் சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார நிலையம் சம்பந்தமான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA Report) வெளியாகி இருந்தது.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் (Environment Impact Assessment (EIA) Report.) மக்களின் பார்வையும்:
கரையோரப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசிய சுற்றாடல் சட்டம் ஆகியவற்றுக்கு அமைவாக அபிவிருத்தி நடவடிக்கைக்கான அனுமதி கோரி விண்ணப்பம் ஒன்று செய்யப்படும் போது அபிவிருத்தித் திட்டம் மூலம் சுற்றுச் சூழுலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக சுற்றுச் சூழல் தாக்கம் சம்பந்தமாக மதிப்பிட்டு தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு குறித்த விண்ணப்பதாரிக்கு பணிப்பாளரினால் கட்டளையிடமுடியும். அக்கட்டளைக்கு இணங்கி நடக்க வேண்டியது விண்ணப்பதாரியின் கடமையாகும்.
அவ்வாறு சுற்றுச் சூழல் தாக்கம் சம்பந்தமான மதிப்பீடடறிக்கை கிடைக்கப்பெற்றதும் அவ்வறிக்கை பரிசீலனைக்கு உள்ளாக்கப்படுவதோடு அதன் பின்பு அவ்வறிக்கை மூன்று மொழிகளிலும் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதோடு அறிக்கை வெளியாகி 30 நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக்களை பரிந்துரை நிறுவனத்திடம் தெரிவிக்குமாறு அழைப்பு விடுக்கப்படும்.
இதற்கொப்ப சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைப்பது சம்பந்தமாக சுற்றுச் சூழல் தாக்கம் சம்பந்தமான மதீப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்ட போதுதான் மக்கள் இத்திட்டம் சம்பந்தமாக ஆர்வம் செலுத்தத் தொடங்கினர்.
சம்பூர் அனல் மின்சார நிலைம் அமைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுறு;றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதனால் ஐந்து தனித்துவமான நன்மைகள் கிடைக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அனல் மின்சார நிலையத்தை அமைப்பதன் மூலம் நாட்டிற்கு தகுந்த விலையில் மின்சாரத்தை வழங்கி கட்டணத்தை குறைப்பதில் உதவி புரியும் என்றும் பௌதீக மற்றும் சமூக உட்கட்டுமானங்களை முன்னேற்றும் என்றும்; கைத்தொழில் சாலைகள்,பொருளாதாரத்தை முன்னேற்றும் என்றும் வேலைவாய்ப்பை வழங்கும் என்றும் இது அனல் மின் திட்டங்களின் கட்டுமானத்திற்கும் இயக்கத்திற்குமுரிய திறன் அதிகரிப்பில் உதவி புரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இத்திட்டத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்ற இந்நன்மைகள் சம்பந்தமாக மக்கள் எதிர்மறையான கருத்தையே கொண்டிருக்கின்றார்கள். இத்திட்டம் மின்சார கட்டணத்தை குறைப்பதில் உதவி புரியும் என்றிருந்தால் நூரைச் சோலை அனல் மின்சாரம் நிலையத்தின் மூன்று கட்டமும் நிறைவு செய்யப்பட்ட போதும் மின் கட்டணம் ஏன் அதிகரித்துச் சென்றது என்ற கேள்வி மக்களிடம் இயல்பாகவே எழுகின்றது.
அதேபோல இயற்கையின் எழில் கொஞ்சும் இப்பிரதேசத்தில் இத்திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் பௌதீக மற்றும் சமூக உட்கட்டுமானங்கள் சீர்குலையும் என்றே இம்மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
இதுபோல இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்று குறித்துக் காட்டும் ஏனைய விடயங்களிலும் பெரும்பாலும் மக்கள் எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
சுற்றுச் சூழலுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத பொறிமுறையொன்றை இத்திட்டத்தில் கைக்கொள்ளப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை.
தொழில் நுட்பத்தில் உச்சியிலிருக்கும் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் அனல்மின்சார நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளபோதும் சுற்றுச் சூழுலுக்கு பாதிப்பு ஏற்பாடாதவாறான பொறிமுறைகள் அங்கெல்லாம் உயர் நிலையில் கைக்கொள்ளப்பட்டபோதும் அவற்றையெல்லாம் தாண்டி அனல் மின்சார உற்பத்தி மூலம் சுற்றுச் சூழுல் பாதிக்கப்பட்டு வருவதானது பாதுகாப்பு பொறிமுறையில் நம்பிகையீனத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மின் நிலையத்திற்கான இடவமைவு:
உலகில் அழகிய இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மையான இயற்கை வளம் மிக்க ஒரு பிரதேசமே சம்பூராகும்.
சம்பூர் பிரதேசமானது யுத்தம் நிலவிய காலத்தில் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு புலிகள் மூதூரை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட யுத்தத்தின்போது சம்பூர் பிரதேசம் முதன் முறையாக அரசாங்கத்தின் கட்டுப்பாடடிற்குள் வந்தது. அதைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயமாக மாறியது.
இதேவேளை அப்பகுதியை வாழிடமாகக் கொண்ட மக்கள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களுக்குள் இருந்து வரும் நிலையில் இம்மக்களது வாழிடங்களுக்கு அண்மையாகவே அனல் மின்சார உற்பத்தி நிலையம் அமையப்பெறவுள்ளது.
அனல் மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தின் ஒரு பகுதியானது கொட்டியாரக் குடா கடலினாலும் ஏளைய பகுதிகள் இயற்கை வனத்தினாலும் சூழப்பட்டுளளது.
அனல் மின் நிலையத்திற்காக எல்லையிடப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் மக்கள் குடியிருப்புக்கள் அமைந்திருக்கின்றன. அதேபோல இப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் மூதூர் நகரம் காணப்படுகின்றது. குறித்த பகுதியிலிருந்து கடல் வழியாக சுமார் 11 கிலோ மீற்றர் தூரத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறைகளில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பானாது அனல் மின்சார உற்பத்தி முறையாகும். மின் நிலையம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம்வரை அதன் நேரடித் தாக்கம் இருக்குமென கணிக்கப்படுகின்றது.
இதனால் அனல் மின்சார நிலையங்களை நிறுவும் போது பொதுவாக மக்கள் வாழும் பகுதியிலிருந்து ஒதுக்குப் புறமான பகுதியே தேர்ந்தெடுக்கப்படுகின்றது
ஆனால் சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாண விடயத்தில் மின்சார நிலையத்திற்கும் மக்களின் வாழிடத்திற்கும் இடையிலான தூரம் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதனால் இப்பிரதேசத்தில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஒரு உள்நோக்கம் கொண்டதென்று பரவலாக அபிப்பிராயம் நிலவி வருகின்றது.
அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்:
அனல் மின்சார உற்பத்தியினால் வளியும் நீரும் நிலமும் பாதிக்கப்படுவதென்பது வழமையாக இடம்பெறும் ஒன்றேயாகும். அவ்வாறு பாதிக்கப்படுமாக இருந்தால் விவசாயம், மீன்பிடி முதலான ஜீவனோபாயம் தடைப்படுவதோடு மக்களது சுகாதாரத்திற்கு பெரும் சவாலும் உருவாகும்.
ஒரு தொன் நிலக்கரி எரிக்கப்படும் போது 7186 பவுண்ட் காபனீரொட்சைட் வெளிவருகின்றது. இவ்வாறு வெளிவருபவை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.
சராசரியாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 3.7 மில்லியன் தொன் காபனீரொட்சைட்டை வெளியிடுவதாக கணிக்கப்படுகிறது.இது 161 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுவதற்கு சமமானதாக பார்க்கப்படுகின்றது. காபனீரொட்சைட் அதிகரிப்பானது மனிதனுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதோடு வெப்ப அதிபரிப்பிற்கும் காலநிலை மாறுபடுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.
சராசரியாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 10,000 தொன் சல்பர் டை ஒக்சைட்டையை உருவாக்குகின்றது இது மனிதர்களில் சுவாச நோய்களுக்கும் இதய நோய்களுக்கும் வேறு சில நோய்களுக்கும் காரணமாக உள்ளது.
அதேபோல 500 மெகாவாற் மின்சாரத்தை தரும் செய்யும் அனல் மின்சார நிலையம் வருடத்திற்கு 10,200 தொன் நைட்ரஜன் ஒக்சைட்டை வெளியிடுகின்றது. இது மனிதர்களில் நுரையீரல் பாதிப்பிற்கும் சுவாச நோய்களுக்கும் வழிசெய்கின்றது. மேலும் 500 மெகாவாற் மினசாரத்தை பிறப்பாக்கம் செய்யும் அனல் மின்சார திட்டத்தில் வருடத்திற்கு 720 தொன் காபன் மொனொ ஒக்சைட்டை வெளிவருகின்றது.. இது மனிதர்களில் தலைவலி, மனவழுத்தம்,இதய நோய்களுக்கு துணை செய்வதாக அறியப்பட்டுள்ளது.
அத்துடன் 500 மெகாவாற் மின்சாரத்தை வழங்கும் அனல் மின்சார நிலையம் வருடத்திற்கு 500 தொன் தூசுகளை வெளித்தள்ளுகிறது. இது மனிதர்களில் சுவாச நோய்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார கட்டமைப்பிலிருந்து வருடத்திற்கு 220 தொன் ஹைட்ரோ காபன்கள் உருவாக்குகின்றது. இதுவும் மனிதர்களில் சுவாச நோயை தோற்றுவிக்கின்றது. அத்தோடு. சராசரியாக 500 மெகாவாற் மினசாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 225 பவுண்ட் ஆசனிக்கையும் 170 பவுண்ட்; பாதரசத்தையும் வேறு இரசாயங்களையும் சூழுலுக்கு வெளிவிடுகின்றது.
இத்தகைய இரசானங்கள் மனிதர்களில் இதயநோய்,பக்கவாதம்,புற்றுநோய் முதலானவற்றை ஏற்படுத்தியும் ஈரல். சிறுநீரகம், மூளை முதலானவற்றையும் பாதிப்படையச் செய்தும் இறுதியில் மரணங்களுக்கு வழிகோலுகின்றது.
இதைப்போல அனல் மின்சார உற்பத்தியின் போது வெளியிடப்படுகின்ற வெப்பதினாலும் கழிவு நீரினாலும் சுற்றுச் சூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றது.
வேளாண்மையும் விலங்கு வளர்ப்பும் இதன் மூலம் பாதிக்கப்படுவதோடு மீன்பிடித் தொழிலிலும் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்.
எனவே, அனல் மின்சார நிலையத்தை சம்பூரிலும் அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சி இத்தகைய பாதிப்பக்களிலிருந்து மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பொறுப்பேற்பை செய்யுமா என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி. இக்கேள்விக்கு என்ன பதில்? பொறுப்புள்ளவாகள் பொறுப்புடன் சிந்திப்பார்களா??
- மூதூர் முறாசில்


No comments:

Post a Comment