March 8, 2015

அனர்தங்களும் பெண்களும் - வி.காயத்திரி!!

இன்று சகல துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் என்பது பேசுபொருளாகி விட்டது. கல்வியில், தொழிலில், அரசியலில், சமூக வாழ்வியலில், ஏன் நாட்டின் பொருளாதாரத்தின பெரும் பங்காற்றலில் பெண்கள் முக்கியம் பெறுகின்றார்கள் என்று
கூறினால் கூட எத்தனை வீதமானோர் இன்றும் அடக்கு முறைகளுக்குள்ளும், அடிமைத்தனத்துக்குள்ளும், பொருளாதார அடக்குமுறைகளுக்கும் சிக்கித் தவிக்கின்றனர் என்பதை எம்மால் மறந்துவிடவோ அல்லது மறுத்துவிடவோ கூடாது. இவர்களையும் இவர்களது நடைமுறைச் சிக்கல்களையும் இன்றைய தினத்திலாவது நாம் நினைவுகூராவிடின் சமூக ஆவலர்கள் என்று கூறிக்கொள்வதில் எந்தவித பலனுமில்லை. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவர்களின் குடும்பப்பின்னணி, வறுமை, குடும்ப வன்முறை, விவாகரத்து என்று காரணம் கூறினால் கூட எமது நாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்து நடந்த முப்பது வருட யுத்தத்தால், சிறீலறங்கா அரச படைகளின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினால் பட்ட அவதிகள் மட்டமல்லாது அத்துடன் இலங்கையை மிகவும் அழிவுக்குள்ளாக்கிய சுனாமி அனர்த்தம், தற்போது வந்துபோன பாரிய வெள்ளம், மண்சரிவு என்பவற்றால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் இக் கட்டுரையானது பெண்கள் அனர்த்தங்களின் பின்னர் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார, வாழ்வியல் சார் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

அனர்த்தங்களானவை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதித்து வருகின்றது என்பது வெளிப்படை. ஆய்வாளர்களதும், அறிக்கைகளினதும் பிரகாரம் பெண்கள், பிரசவத்தாய்மார்கள், பெண்குழந்தைகள், வயதான முதுமையடைந்த பெண்களையே அதிகம் பாதித்து வருவகின்றது. காரணம் சமூக அந்தஸ்து, விழுமியங்கள், பெண்களுக்கு சமூகத்திலுள்ள வகிபங்கு, உதாரணமாக தாய்மை மட்டுமே ஒரு பெண் தனது வாழ்க்கையில் வகிக்க வேண்டிய பாத்திரம், பெண் நாளாந்தம் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, பிள்ளை பராமரிப்பது, சமைப்பது, என்பவற்றிலே தான் கவனம் செலுத்த வேண்டும், பெண்கள் அதிகம் கல்வி கற்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது போன்ற விழுமியங்களால் இன்றும் பெண்கள் பாதிக்கப்படுவதுடன் குறிப்பாக வேலைக்குச் செல்லும் அல்லது கல்வியறிவுள்ள பெண்களை விட கல்வியறிவில்லாத, வீட்டிலிருக்கும் பெண்களே அதிகம் பாதிப்புறுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கைச் சனத்தொகை 20,359,439 (2012)ஐ எட்டிய போதிலும் இதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்களாகவும் இவர்களில் 23 விகிதமானவர்கள் கடந்த காலத்தில் நடந்து முடிந்த பலவிதமான அனர்த்தங்களாலும் குடும்பத்தைச்சுமக்கும் குடும்பத்தலைவியான பணிக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 50 விகிதமானோர் 30 வயதுக்குற்பட்டவர்கள் என கடந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அனேகமான வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகளில் மனித காரணங்களைக் காட்டிலும், இயற்கைக் காரணங்களே பெண்களை நிர்க்கதியாக்கி வருகின்றது. ஆனால் எமது நாட்டில் குறிப்பாக தமிழர் பிரதேசத்தில் அதிளவிலான பெண்களை விதவைகளாகவும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களாகவும், பொருளாதார ரீதியில் நசுக்கிண்டவர்களாகவும், இதைவிட வாய்விட்டே சொல்ல முடியாத சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி வருபவர்கள் எனும் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் எம் தமிழ்ப் பெண்கள் என்பது மறுக்க முடியாத விடயம் மட்டுமல்ல கவலைக்கிடமான விடயமும் கூட. தொடர்ந்து நடந்தேறிய முப்பது வருடப்போரினால் பெண்களின் வாழ்வியலில்; பல தரப்பட்ட மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உயிர் அழிவுகள், அங்கவீனங்கள், உடைமைகளின் அழிவுகள், இடம் பெயர்வுகள் என்பன மிக அதிகளவில் இலங்கையில் நடந்திருக்கின்றன. அத்துடன் இயற்கை அனர்த்தம் கூட இவர்களை விட்டு வைக்கவில்லை. சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கையில் 30,000 பேர் கொல்லப்பட்டதுடன் பெரும்பாலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, மாத்தறை, காலி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் பெண்களாகவும் உள்ளனர். காரணம் அன்றைய தினம் காலைவேளையில் அதிகளவான பெண்கள் தமது வீட்டுவேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததென்றும் அதனாலேயே அதிகளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. அத்துடன் 15,000 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணககானோர் விதவைகளாகவும், ஒட்டுமொத்த உறவினர்களை இழந்தவர்களாகவும் நிர்க்கதியாக்கப்பட்டனர். அதேபோல் அடிக்கடி நிகழும் வெள்ளப்பெருக்குகள், அதைவிட அண்மையில் நடந்து முடிந்த கொஸ்லாந்தா நிலச்சரிவு கூட பெண்களை குறிப்பாக தமிழ் பெண்களையே தாக்கியது. அன்றைய தினம்கூட அதிகளவான குடும்பத் தலைவர்கள் தொழிலுக்கு சென்றதுடன் பிள்ளைகள் பாடசலைக்குச் சென்ற சமயம் நிகழ்ந்தமையால் அதிலும் பாதிக்கப்பட்ட தொகையினர் பெண்களே. இதன் விளைவுகளால் இவர்களின் சாதாரண வாழ்க்கை அசாதாரணமாவிருக்கின்றது.

இலங்கையில் 03 தசாப்த காலமாக தொடர்ந்து நடந்த போரின் காரணமாக விதவையாக்கப்பட்டவர்கள் 100.000க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதில் 90.000 போர்வரையிலுள்ளவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கிறார்கள். இதில் எனது குடும்பமும் விதிவிலக்கல்ல. அத்துடன் போரால் அங்கவீனமானவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். அனாதையாக்கப்பட்ட பெண்குழந்தைகள் பல நூறாகும். உதாரணமாகச் சொல்லப்போனால் கிழக்கு மாகாணத்தின் தலைநகரை அண்டி மட்டும் 14 சிறுவர் நிலையங்கள் இருக்கின்றன அதில் கணிசமான தொகையினர் பெண்களாவர். போரில் பங்கேற்ற பெண்களில் கைதிகளானவர்கள் 2.000 புனர்வாழ்வுத்திட்டங்களின் பின் விடுதலை செய்யப் படுகிறார்கள். சில போராளிகளின் மனைவிமார் இன்னும் தடுப்புக்காவல்களில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லிலடங்கா. பாதுகாப்பின்மை, வறுமை, போசாக்கின்மை, வேலைவாய்ப்பின்மை. தொழில் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடு என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் பெரும்பாலான பெண்கள் கணவனை இழந்த பின்னரே தொழில் செய்ய நிர்ப்பந்திகப்படுகிறார்கள். அதுவும் குடும்ப சூழ்நிலை கருதியே. அவ்வாறு தொழிலுக்காக செல்லுமிடங்களில் தொழில் தருணர்களால் உடல், உளத்தாக்கத்திற்கு ஆளாகின்றனர். கிட்டத்தட்ட 40000 பெண்கள் தங்களது குடும்பத்திற்காக தாங்களே கூலி வேலை செய்து பிழைத்து வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இவர்களுக்கென்று கிடைக்கும் நிவாரண நிதிகள் மிகச்சொற்பமே. வடக்கில் 60 விகிதமானவர்களின் வருமானம் 9000 ரூபாய்க்கும் குறைய இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல படித்த பெண்கள் கடைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறார்கள். சில இடங்களில் பெண் குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களும் சரி தினமும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தே தமது குடும்பத்தை கொண்டு நடாத்த வேண்டியிருக்கின்றது.

வெளிநாட்டுக்கு வேலைக்குப்போகும் பெண்களின் நிலை மிகப் பரிதாபமாகவிருக்கிறது. இவர்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட உடல் உள, பாலியல் வன் முறைகள் இலங்கைப் பத்திரிகைகளில் அடிக்கடி பேசப்பட்டு வந்தாலும் அந்தச் செய்திகளையும் பார்த்து விட்டும், இன்னமும் வெளிநாடுகளில் பணிப் பெண்ணாக வேலைபார்;க்க ஆயிரக்கணக்கான பெண்கள் முன்வருவதற்கு இவர்களின் வறுமையும், வேலைவாய்ப்பின்மையுமே பிரதான காரணங்களாகவிருக்கின்றது. பணிப் பெண்களாகவிருக்கும் பெண்களை மிருகத்தனமாக அடித்தல், அவர்களின் உடம்பில் ஆணிகளை அடித்து சித்திரவதை செய்தல், அவர்களின் மேல் கொலைக்குற்றம் சுமத்துதல் என்பன மத்திய தரைக்கடல் நாடுகளில் பரவலாக நடக்கின்றன. 2007ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்குப்போய் அங்கு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட றிஷானா நபீக்க் என்ற இளம் பெண்ணின் நிலை அதற்கு ஒரு உதாரணமாகும். குறிப்பாக வேலையில்லாத் திண்டாட்டத்தால் 1.8 மில்லியன் இலங்கையர் அன்னிய நாடுகளில் பணிபுரிகிறார்கள். இதில் 500.000 பெண்கள் மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலைக்குப்போகிறார்கள் இவர்களால் 3.5 பில்லியன் டொலர்ஸ் அன்னிய செலவாணி இலங்கைக்குக் கிடைக்கிறது. ஆனாலும் என்ன பயன்???? வெளிநாடு செல்லும் பெண்களின் துயர்கள் இன்னமும் நீண்ட வண்ணமே இருக்கின்றது. மேலும் வெளிநாடு செல்வோர் 18லிருந்து 40 வயது வரையிருக்கும் தாய்களாக இருப்பதாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை உற்றார் உறவினர் பாதுகாப்பில் விட்டுச்செல்வதாலும் பல தரப்பட்ட உள உடல் நலப் பிரச்சினைகளுக்குக் குழந்தைகள் உள்ளாகிறார்கள். இதனுடன் சேர்த்து இன்னுமொரு விடயத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி 2004-2005ல் 796 குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதில் சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் 40 விகிதமான புகார்கள் வருகின்றன. சிலர் வேலைபார்க்கப் போகுமிடங்களிலிருந்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகுவது மட்டுமல்லாது இலங்கைக்கு வரும் போது அவர்கள் வேலை செய்யும் இடங்களிலுள்ள ஆண்களின் கொடுமைக்குள்ளான துன்பத்தால் கர்ப்பம் அடைந்து குழந்தைகளையும் கொண்டு வருவதால் அவர்கள் இலங்கையிலுள்ள அவர்களின் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இப்படிப் பிறந்த 4000 குழந்தைகளை இலங்கை அரசு இலங்கைப் பிரiஐகளாக ஏற்கவேண்டி வந்தது. இவ்வாறான பிரச்சினைகள் இன்றுவரைக்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளதுடன் ஆரம்பத்தில் அவ்வாறான பாதிப்புக்களில் இலங்கைச் சிங்களவர், முஸ்லீம்கள், மலையகத்தவர் என்ற நிலையே பன்னெடுங்காலமாக இருந்து வந்தது. ஆனால் நடந்து முடிந்த யுத்தம் தமிழர்களையும் அதில் இணைக்க வைத்துவிட்டது. 
தற்போது விலைவாசி அதிகரிப்பதும் குறைவதும் மாறி மாறி நடக்கின்றது என்றாலும் இவர்களின் வாழ்க்கையில் எதுவித முன்னேற்றத்தையும் தரப்போவதில்லை. இவர்களின் அன்றாட வாழ்வே மிகக் கஷ்டமாவிருக்கிறது. பல விதவைகளுக்கு அவர்களின் வாழ்வுதவிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஆடு, மாடு, கோழிகள் அண்மைய இயற்கை அனர்த்தால் அழிந்து விட்டன. ஓரு இலட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலம் வெள்ளத்தாலும், வரட்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தென்னை மரங்கள் ஒருவித நோயற் பாதிக்கப்பட்டிருக்கின்றன. விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் கட்டிக்கொடுத்த பல வீடுகளை வெள்ளம் பாதித்துவிட்டது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80மூ பெண்களே உள்ளனர். அவர்கள் தங்களது கணவர்களுடன் விவசாயத்திலோ, மீன்பிடி தொழிலிலோ உதவி செய்து வாழ்ந்து வந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த தனித்துவமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் ராணுவத்தின் கையில் உள்ளது. அவர்களால் புதிதாக ஏதும் தொழில் தொடங்கி வாழ வழியில்லை. தெற்கில் வாழும் சிங்கள பெண்ணின் வாழ்வை விட இவர்களது வாழ்க்கை மோசமானது. வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை தனியாக விட்டு வேலைக்கு செல்வது இயலாது. இதனால் ஒரு சிலர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அனேகருக்கு அவ்வாறான வழி ஒன்றுமில்லாமல் அவதிப்படுகின்றனர்.

தொழில் உதவி என்ற பெயரில் வடக்கிலிருந்து பழைய போராளிப் பெண்கள், கணவனை இழந்தவர்கள் தென்பகுதிகளுக்குக் கொண்டு சென்று வேலை கொடுப்பதாகச்சொல்லப்பட்டது. விசாரித்துப் பார்த்தபோது இவர்கள் துணிதைக்கும் ப்றி ட்ரேட் சோன்  பகுதிகளில் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. இந்தத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களுக்கு எந்த விமான தொழிலாளர் பாதுகாப்பும் கிடையாது. மிகவும் மோசமான விதத்தில் வேலைவாங்கப்படுவார்கள். இங்கிருக்கும் நிலையை மாற்றிச் சம்பளத்தைக் கூட்டிப் பெண்களுக்கு உதவி செய்யும் திட்டங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இருப்பதாகத்தெரியவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் பெண்களது கணவர்கள், தந்தைகள் மற்றும் மகன்கள் காணாமல் போனபோது என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க எந்த மூல உபாயமும் இன்றித் தவிப்பது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் உயிர்ப்பாதுகாப்பு பிரச்சினைகள், பெண்களுக்கான பாதுகாப்பு, வன்முறைகள் அதிகரிக்கத்த வண்ணமேயுள்ளன. காணாமல் போன உறவினர்கள் குறித்து இடம்பெயர்ந்த பெண்கள் நீதிக்கான முறையீடுகள் செய்ய நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போகமுடியாதவாறு எதிர்ப்பும், துன்புறுத்தல்களும் ஓட்டுக்குளுக்களாலும் மற்றும் ஆயுதப்படைகளாலும் மறைமுகமாக இருந்துவருவதாக அறிக்கைகள், பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. உறவினர்களின் இழப்பு குடும்ப பாத்திரங்களில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தின கூடுதலாக ஆண்கள் இல்லாத குடும்ப பெண்கள் இராணுவத்தினரின் வன்முறைகளில் சிக்கித்தவிக்கின்றனர்.

இவ்வாறு குடும்ப வறுமையையோ, தங்களது உறவினர்களையோ இழந்த துக்கம் என்பன ஒரு புறமிருக்க அவர்களது பாதுகாப்பற்ற நிலையே அவர்களை வெகுவாக வாட்டி வருகின்றது என்கின்றனர். அண்மையகாலப் புள்ளிவிபரங்களின்படி கடந்த சில வருடங்களாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் இதிலும் குறிப்பாக இராணுவத்தினர் குழுமி இருக்கும் பகுதிகளில் அதிகம் இனங்காணப்படுவதாகவும் அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருமளவான இராணுவத்தின் இருப்புக் காரணமாக இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளிலேயே பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றார்கள். விசாரணை எனும் பெயரில் கைது செய்யப்படும் பெண்களே இவ்வாறான நிலைக்கு உள்ளாகுகின்றனர். குறிப்பாக 2012இல் யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் ஒரே மாதத்தில் இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 56 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில் சிங்களவரின் கட்டுப்பாட்டில் நாங்கள் இருப்பதால் தான் நாங்கள் அவர்களின் உடமைகள் என எண்ணுகின்றார்கள் போலும் அத்துடன் போரில் ஜெயித்து விட்டமையால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கருதுகிறார்கள் என பெண்கள், பெண் அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. சுமார் 400 வரையிலான பலாத்காரங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் ஒரு இராணுவ வீரர் மீதும் பாலியல் வன்கொடுமையோ அல்லது போரில் மனித உரிமை மீறல் வழக்கோ நடாத்தப்படவில்லை. இதனால் பெண்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதுடன் காமக் கொடூரர்கள் வட்டமிடுவதும் நீண்டவண்ணமே உள்ளது. இன்னுமொரு செயல் என்னவெனில் தேர்தல் காலங்களில் பாடசாலை ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்த படையினர் தற்போது அவ்விலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து தொடர்பு கொள்வதாகவும் சிங்களத்தில் ஆபாசமாகப் பேசுவதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் சென்ற ஆண்டுகளில் பதிவாகியுள்ளன. போர் முடிவுற்றது என்றும் இனி மேல் இலங்கையில் எந்தவிதமான போர் நடவடிக்கைகளும் நடைபெறாது என்று ஒரு புறம் அரசு கூறிவந்தாலும் மறுபுறம் பெண்களை அதிலும் குறிப்பாக தமிழ் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு நிர்ப்பந்தித்து வந்தமையும், சிலர் அதற்கு உள்வாங்கப்பட்டமையும் யாவரும் அறிந்ததே. இதனாலும் பல பெண்கள் உள ரீதில் வேதனையடைந்துள்ளனர்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். விதவைப் பெண்கள் சமூக நற்காரியங்களில் இருந்தோ அல்லது சமுதாயத்திலிருந்தோ விலக்கி வைக்கப்படும் நிலை குறைவடைகின்றது என்று என்னதான் நாம் தம்பட்டம் அடித்தால் கூட சில குடும்பங்களில் இன்னமும் அவர்களுக்கான துன்புறுத்தல்களும், அடக்குமுறைகளும் மறைமுகமாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய பிரச்சினைகளை சந்தித்த வண்ணமுள்ளனர். பெரும்பாலான பெண்களோ, ஆண்களோ தம்மைப் பாதுகாக்கவும், கயவர்களிடமிருந்து தப்பிக்கவும் தாம் விரும்பியோ விரும்பாமலோ திருமணம் எனும் பந்தத்தில் இணையவேண்டி ஏற்பட்டதுடன் அவ் வாழ்க்கையில் ஒரு சிலராலேயே நிண்டுபிடிக்க முடிந்தது. அதில் அனேகமானோர் மணம் முடித்த ஒருசில மணித்தியாலங்கள், மாதங்கள் ஆகுமுன்பே விதவை எனும் பட்டத்தை தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். காரணம் அனேகர் யுத்தத்தினால் மரணிக்கப்பட்டமையாகும். இதில் ஆண்களும், பெண்களும் விதிவிலக்கல்ல. இருந்தாலும் பெண்கள் தான் சிறுவயதில் விதவை எனும் அங்கியை அணிந்தது மட்டுமல்லாது உடலியல், உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவருடன் உரையாடிய போது அவர் கூறியதாவது “ தனது தங்கை திருமணமாகி சில காலங்களாகும் முன்பே கணவன் யுத்த காலத்தில் செல்பட்டு இறந்துவிட்டார். இருந்தும் அதன் பின்னரான காலத்தில் தங்கை தன் கணவன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் நாட்கள், காலங்கள் செல்லச் செல்ல அவர்கள் அவள் மீது துன்புறுத்தி வந்ததாகவும் இந்நிலையில் அவளை அவர்களிடமிருந்து மீட்டு விட்டதாகவும் தெரிவித்தார்” இப்படி எத்தனை அண்ணன்மார்கள், தாய், தந்தையர் என சுற்றத்தார் ஏங்கித்தவிக்கின்றனரோ யாம் அறியோம். 

உடைந்த கட்டிடங்களைத் திருப்பிக் கட்டலாம். இடம் பெயர்ந்தவர்கள் காலக் கிராமத்தில் தங்கள் இடங்களுக்கத் திரும்பிப்போகலாம். ஆனால் கடந்து வந்த பாதையில் பெண்கள் சந்தித்த இழப்புக்களுப்புக்களும் சந்தித்த, சந்தித்து வருகின்ற வலிகளும் என்றுமே யாராலும் மறக்கமுடியாது. இருந்தும் இது அவர்களின் வாழ்வியலில் ஒரு திருப்பமுனையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக பெரும்பான்மையானோரை ஆளுமை மிக்கவர்களாகவும், சமூகத்தை துணிந்து முகம்கொடுக்கக் கூடியவர்களாகவும் மாற்றிய அதேவேளை அவர்களை வறியவர்களாகவும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களாகவும் மாற்றியமைத்து வருகின்றது. எனவே இந்நிலையை மாற்றியமைக்க உரியவர்கள் கவனத்திலெடுக்கும் பட்சத்தில் அவர்களின் பங்கு சமுதாயத்தில் அதிகரிப்பதுடன் நாட்டின் ஒட்டுமொத்த விருத்திக்கும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment