August 12, 2014

சுதந்திர தினத்தை துக்கதினமாக கடைப்பிடிக்கவுள்ள மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சுதந்திர
தினத்தன்று மீனவர்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றி துக்க தினமாக அனுஸ்டிக்க உள்ளதாக மீனவ சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மாதம் 24ம் திகதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.    போராட்டத்தின் அடுத்த கட்டமாக இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒகஸ்ட் 2ம் திகதி கச்சத்தீவு சென்று தஞ்சமடையும் போராட்டம் நடந்தபோது மீனவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் போஸ் வின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் மீனவர்கள் மற்றும் படகுகளை 10 நாட்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிதத்தை அடுத்து கச்சத்தீவு செல்லும் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டிருந்தனர்.  
ஆனால் இது வரையில் மீனவர்கள் மற்றும் படகுகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவ சங்கம் குற்றம் சாட்டி வருகின்றனர்.   இந்நிலையில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் சுதந்திர தினத்தை மீனவர்கள் துக்க தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.  
ஆகஸ்ட் 15 ம் திகதி மீனவர்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றி வைக்க உள்ளதாகவும், அதற்குள் மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இந்த போராட்டம்  கைவிடப்படுமென  தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment