August 3, 2016

கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை அறியாதவர்கள் மீன்பிடித்துறைமுகம் அமைக்க முயற்சி!

இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டிருந்தார்.   மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மீளக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதன் அருகில் உள்ள இந்துக்கள் புனிதமாகக் கருதும் தலமாகிய கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது கண்ணியமற்ற செயலாகும் என வடமாகாண முதலமைச்சர் சாடியுள்ளார்.

எந்த மதங்களைச் சார்ந்ததாயினும் மதத்தலங்களின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு இதனைப் புரிந்து கொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துமத முக்கியஸ்தர்களினால் சில தினங்களுக்கு முன்னர் ஆர்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment