August 7, 2016

எமது தலைமைகள் யாரை திருப்திப்படுத்துவதற்காக நடந்து கொள்கிறார்கள்! அனந்தி சசிதரன்!

எமது தலைமைகள் யாரை திருப்திப்படுத்துவதற்காக நடந்து கொள்கிறார்கள். எங்கு பயணிக்கிறார்கள் என்று சிந்திக்கின்ற போது மிகவும் வேதனையாக இருக்கிறது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை அரசியல் யாப்பு என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மிக மோசமாக திரிவுபடுத்தப்பட்ட வரலாறுகளை கொண்ட நூல்கள் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஆதாரவும் இல்லாமல் எமது விடுதலைப் போரை குற்றம் சாட்டி எழுதப்பட்ட பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மிக வேதனையான விடயம் என்னவெனில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலங்கியங்கள் எவையும் அங்கு இல்லை. இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள், எழுத்தாளர்கள் எமது வரலாற்றை எழுத முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம். பொய்யாக புனையப்பட்ட இந்த புத்தங்களை மேற்கோள் காட்டி பல வெள்ளைக்காரர்கள் தங்களுடைய புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்களுக்கு பல நாடுகள் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேசம் தமிழர் என்றால் மோசமானவர்கள் என்று எண்ணக் கூடிய வகையில் அந்த புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிங்களவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்று பல புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தால் நாம் அவர்கள் மீது மிகப்பெரிய போரை தொடுக்க வேண்டி வரும். இவ்வாறான புத்தகங்கள் தான் அதிகம் எழுதப்பட்டு அவை நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் திரு மாஸ்ரனின் புத்தகங்கள் போன்று பல புத்தகங்கள் தமிழில் வெளிவரவேண்டும். இதில் திரு மாஸ்ரர் மிகச் சிறப்பாக வரலாற்றை பதிவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு திரு மாஸ்ரர் அவர்கள் முள்ளியவாய்காலின் அழிவுக்கு நாங்கள் செல்வோம் என தீர்தக்கதரிசனமாக மிகத் தெளிவாக கூறியிருந்தார். விடுதலைப்புலிகள் இருக்கும் போது நாங்கள் ஏன் இவ்வாறானதொரு அழிவுக்கு செல்லப் போகின்றோம் என நாங்கள் அதை நம்பவில்லை. விடுதலைப்புலிகள் இல்லாத சூழ்நிலையில் அப்பொழுது இருந்த பலரது சிந்தனைகள் தற்போது மாற்றமடைந்துள்ளது. ஆனால் திரு மாஸ்ரனின் சிந்தனை, ஆற்றல் என்பன எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றது.

தந்தை செல்வாவின் உடைய வட்டுக் கோட்டை தீர்மானத்தை நாங்கள் புறக்கணிப்பதாக தற்போது எங்கள் கட்சியினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா கூறியுள்ளார். அதேபோன்று சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்கவில்லை என்ற கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மாவீரர் தினத்தை நாங்கள் அந்த தினத்தில் கொண்டாடத் தேவையில்லை என்று கூறியிருந்தார். ஆகவே, இவர்கள் எல்லாம் எங்கு பயணிக்கிறார்கள். யாரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. ஏனென்றால் இவர்கள் மத்தியில் இருந்து தான் நாங்கள் தோற்றம் பெற்றனாங்கள். இந்த இழப்புக்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் இந்த அரசாங்கம் தருவதைத் தரட்டும் என இருந்திருப்போம். இவ்வாறான இனஅழிவுக்கு பின்னர் நாம் அடிபணிகின்ற ஒரு அரசியல் நிலமைக்கு போய்விடக்கூடாது என்பது எமது எண்ணமாக இருக்கின்றது.

ஆனால் இவர்கள் தேர்தலின் போது மக்கள் மத்தியில் எவ்வாறு கூறுகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். ஆகவே எப்பொழுதும் ஒரே மாதிரியான எண்ணப்பாட்டில் மக்கள் இருக்க மாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் இருந்து காப்பாற்றும் வகையில் இவர்களுடைய நடவடிக்கை அமையக் கூடாது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த வாக்குறுதிகளின் பிரகாரம் நாங்கள் வாக்களித் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வரும் செப்ரெம்பர் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமை பேரவையில் எதிர்தரப்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், நான் உட்பட இருக்கின்ற போது உள்நாட்டு பொறிமுறையை ஏற்றுக் கொள்கின்றோம். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக கருத்துக்களை கூறினார்கள். அங்கு நின்ற இந்திய ஊடகம் ஒன்றும் அதனை பதிவு செய்திருந்தது. அது மிக வேதனையான விடயம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இவர்கள் எவ்வாறு கதைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியாது.

அப்பொழுது ஒரு வெள்ளைக்காரர் என்னிடம் கேட்டார். நீங்கள் என்ன இரண்டாக பிரிந்து நிற்கிறீர்கள் என்றார். அப்பொழுது நான் சொன்னேன் இங்கு தான் அதிக தமிழ் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் இது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என நீங்கள் கருத வேண்டும் என்றேன். அவர் சிரித்து விட்டு சென்றுவிட்டார். இவற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் கொடுக்கின்ற அறிக்கைகளை கூட சில ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை. ஆகவே நாங்கள் எதையும் செய்யவில்லை என்பதை யாரும் கூறிவிட முடியாது. எங்களால் முடிந்ததை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி செய்து கொண்டிருக்கின்றேன். நாங்கள் ஒரு அழிவுக்குள் இருந்து வந்து விட்டோம். நாங்கள் இந்த கதிரையை விட்டு செல்கின்ற போது மக்கள் எங்களை துரோகி என்று கூறாமல் இருப்பதற்காக செயற்பட வேண்டும். ஆகவே தொடர்ந்தும் நாங்கள் உங்களுடன் சேர்ந்து மக்களின் எண்ணப்பாடுகளை கூறிவருவோம். ஆனால் நீங்கள் வாக்களித்த உங்கள் பிரதிநிதிகளுக்கு நீங்கள் இடித்துரைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நிச்சயமாக நீங்கள் அதை செய்யாது விட்டால் நாங்கள் எதுவே இல்லாத ஒரு தீர்வை எட்ட வேண்டி வரும்.

இந்த நல்லட்சி நடைபெறுவதாக கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கமாக இருக்கட்டும், கட்சியாக இருக்கட்டும் பண்டாரநாயக்கா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது போன்று 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த ஓப்பந்தமும் இதே அரசாங்கத்தின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கிழித்தெறியப்பட்டது.

ஆகவே 2000 ஆண்டு கிழித்தெறிந்து விட 2016 ஆண்டு இனவழிப்பு ஏற்பட்ட பின்னர் ஒரு நியாயமான அரசியல் தீர்வை இவர்கள் எவ்வாறு தரப்போகிறார்கள். காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வில்லை. இதில் ஒரு விட்டுக் கொடுப்பை செய்ய முடியாத இந்த அரசாங்கம் எப்படி எமது நிரந்தரமான தீர்வைத் தரப்போகிறது.

எனவே, மக்கள் ஆகிய நீங்கள் தமிழ் தலைமைகளை தட்டிக் கேட்க வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் அமைதியான இருந்தால் எதுவே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என கூற விரும்புகிறேன்.

No comments:

Post a Comment