August 28, 2016

20 பொதுமக்களைப் பலி கொண்டு தொடங்கிய சம்பூர் சமர்! கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்கள்!!

ஓகஸ்ட் 28. 2016, கிழக்கில் யுத்தம் மூண்ட நாட்கள். 20 பொதுமக்களை பலிகொண்டபடி சம்பூர் மீது இலங்கை அரச படைகள் தாக்குதல்களை தொடங்கின.
விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான  இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவத்தினர் தொடங்கினர்.

ஆட்டிலெறி, பீரங்கிக்குண்டுகள், பல்குழல் ரொக்கட் குண்டுகள், மோட்டர் எறிகணைகளை செறிவாக வீசிக்கொண்டு கிபீர்-மிக் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவாறு ஓகஸ்ட் 28 அன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நகர்வு முயற்சியினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் இலங்கை இராணுவத்தினர் பச்சனூர்-தோப்பூர் ஆகிய இருமுனைகளில் இந்நகர்வைத் தொடங்கினர். தொடர்ந்து தோப்பூர் மற்றும் கிளத்திமுனையூடாக விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளுக்கு நகர முயன்றபோது போது விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலில் சிதறுண்டனர். இதன்போது கடற்படையினரும் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இப் போர் நடவடிக்கையையடுத்து மூதூர் கிழக்கின் பள்ளிக்குடியிருப்பு- கணேசபுரம்-பாட்டாளிபுரம்-சேனையூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்.ஆனால் அந்த மக்கள் நல்லூரை சென்றடைந்தபோது நல்லூர் பகுதியில் செறிவான ஆட்டிலெறி, ரொக்கட் குண்டுகள் மற்றும் கிபீர் விமானக் குண்டுத் தாக்குதல்கள் இராணுவத்தினரால் வீசப்பட்டன.

மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து செல்ல முடியாதவாறு இலங்கைத்துறை முகத்துவாரம் பாலம் மீது இலங்கை விமானப் படையின் கிபீர் குண்டுத்தாக்குதல் நடத்தி பாலத்தை கடுமையாக சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்து மக்கள் மீளவும் பாட்டாளிபுரத்துக்குத் திரும்பினர். பாட்டாளிபுரத்துக்கு அந்த மக்கள் சென்றபோது அக்கிராமம் மீது தொடர்ச்சியாக ஆட்டிலெறி, ரொக்கட் குண்டுகள் மற்றும் கிபீர் விமானக் குண்டுத் தாக்குதல்கள் பாரிய அளவில் நடத்தப்பட்டன.

இதில் 20 பொதுமக்கள் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டனர். 26 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்தும் அங்கு வாழும் மக்கள் அழிவுகளை எதிர் கொண்டுள்ளதாக அப்போதைய புலிகளின் திரு கோனமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இப்படுகொலை தொடங்கிய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கிழக்கில் அன்று தொடங்கிய யுத்தம் நான்காம் ஈழப்போராக விரிந்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment