July 24, 2016

ஊடகவியலாளர்கள் கூட்டு எதிரணியினரை புறக்கணித்தனரா!

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை அண்மையில் ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர் என கொழும்பு பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்ட தினத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றிற்கு சென்றிருந்தனர்.
விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதன் பின்னர் திரும்பிச் செல்ல முற்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட எத்தனித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றவர்கள் வாகனத்தில் ஏறி செல்லாது ஊடகவியலாளர்கள் தங்களிடம் கருத்து கேட்பார்கள் என காத்திருந்தனர்.
எனினும் துரதிஸ்டவசமாக எவரும் அவர்களிடம் வந்து கருத்து எதனையும் கேட்கவில்லை.
இதனை பார்த்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன், ஊடகவியலாளர்களின் அருகாமையில் சென்று பேசியுள்ளார்.
“தம்பிமார் இந்த அநீதியான சம்பவம் குறித்து நாம் கருத்து வெளியிட விரும்புகின்றோம். எனவே தம்பிமார் எங்களது கருத்தை பதிவு செய்து கொண்டால் நன்று” என ஜோன்ஸ்டன் ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார். எனினும் இதனை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
மீண்டும் ஜோன்ஸ்டன் அந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அதன் போது “ஐயோ மன்னித்துக் கொள்ளுங்கள், இதனை விடவும் முக்கியமான விடயம் ஒன்றை செய்தி அறிக்கையிட வேண்டியுள்ளது. இப்போது என்றால் நேரமில்லை” என ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
வழமையாக சூழ்ந்து கொண்டு கருத்து கோரும் ஊடகங்கள் இம்முறை எம்மிடம் எதனையும் கேட்கவில்லை சரியான வெட்கமாகி விட்டது எனக்கூறி வாகனத்தில் ஏறி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த இடத்தை விட்டு பறந்து சென்றுவிட்டதாக பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment